யாரோ ஒருவருக்காக உன் வாழ்க்கையை வலுக்கட்டாயமாக அர்ப்பணிக்காதே

அழைத்த அழைப்பு அன்பரிடம் துண்டிக்கபட்டால் அடுத்த நொடி அவர் அழைக்க போகிறாரோ என மகிழ்ந்து , அலைபேசியை முதல் தடவை பார்ப்பது போல் பார்த்ததுண்டா?

காத்திருப்பு வினாடியாகி நிமிடமாகி மணித்தியாலங்களாகி நாட்களாகும் போதும் அவர் மீண்டும் அழைக்காததற்கு காரணம் அவருடைய வேலைப்பழு தான் என தானாக சாந்தியடைந்ததுண்டா?

அவர் தராத சந்தோசத்தை அவர் புகைப்படத்திடம் யாசகம் கேட்டதுண்டா?

அவரின் புகைப்படம் பார்க்கும் போது கண்கள் இமைக்க மூளை கட்டளையிட்டும் மனது சொல்லும் மாயைக்கு கட்டுப்பட்டதுண்டா?

எதிர்பாராமல் பார்க்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டே பாதைகளில் பயணித்தது உண்டா?

ஜன்னல் ஓர இருக்கை அவர் நியாபகத்திக்கே என வாழ்ந்துகாட்டியதுண்டா?

கசிவது கண்ணீரா இல்லை அவர் மீது வைத்த காதலா என தெரியாமலே வருடங்கள் கடத்தியதுண்டா?

அவரின்பெயர் வைக்கவே வீட்டில் அடம்பிடித்து செல்ல பிராணி வாங்கியது உண்டா?

கூரிய ஆயுதம் எது கிடைத்தாலும் அதைக் கொண்டு உன் பெயரோடு சேர்த்து அவர் பெயர் எழுதியதுண்டா?

இருவர் பெயர் எழுத இடமில்லாத போது அவர் பெயருக்கே முழு இடத்தையும் கொடுத்து அதை தொட்டு ரசித்ததுண்டா?

யாரிடமும் சொல்லாத சோகங்களை சொல்லி மடி சாய்ந்ததுண்டா?

செய்யாத தப்பிற்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா?

உனக்கு பிடிக்காது என்ற ஒரு விடயத்தை அவருக்கு பிடிக்கும் என்றதற்காக விரும்ப பழகியதுண்டா?

என் வாழ்நாளில் உன்னை பிரியவும் மாட்டேன், மறக்கவும் மாட்டேன் என்ற பொய்களை நம்பி ஏமாந்ததுண்டா?

பெருமூச்சே சாதாரண மூச்சானதுண்டா?

கட்டி அணைத்த தலையணைகள் கண்ணீர் தாங்கும் கோப்பைகள் ஆனதுண்டா?

அதேவேளை திடீர் என யாரும் வந்தால் இந்த தூசியை எடுத்து விடும்படி கண்களை கசக்கி , இல்லாத தூசிக்காக வளக்கறிஞ்சரானதுண்டா?

அலைபேசியில் தைரியத்தின் ராணி, நேரில் கண்டால் நாணத்தின் இளவரசி போன்ற காதாபாத்திரங்களில் நடித்ததுண்டா?

மனதில் கடல் போல காயமிருந்தாலும் உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் போலி புன்னைகைகளை தத்தெடுத்ததுண்டா?

ஊசி குத்தியதற்கு ஊரை கூட்டியவள் இன்று யாரும் அறியா நிலையில் உன் கைகளை கிழித்ததுண்டா?

இரத்த வாடை மயக்கம் தரும் என்ற வாசகம் நீங்கி இரத்த வாடை பழக்கம் என்ற நிலையை உணர்ந்ததுண்டா?

உண்டு எனில் இறைவன் உனக்கு தந்த வாழ்க்கையை நீ வாழவில்லை யாரோ ஒருவருக்காக உன் வாழ்க்கையை வலுக்கட்டாயமாக அர்ப்பணித்திருக்கிறாய்

இத்தனை மணித்தியாலங்களில் உன் இறைவனுக்காக எத்தனை நிமிடங்கள் ஒதுக்கினாய்? யாரோடு பேச உன் பெற்றோரோடு சண்டையிட்டாய்? யாருக்காக உன் நண்பர்களை விட்டுக்கொடுத்தாய்? யாருக்காக உன் தூக்கத்தை தூரப்படுத்தினாய்? யாருக்காக உன் இறைவனை மறந்தாய்? எங்கே இன்று அவர்?

ஏதோ ஒரு தேவைக்கு உன்னிடம் வந்தவர் தேவை முடிந்ததும் சென்றுவிட்டார். நீ தான் தேவை என்று வர ஒருவரை உன் இறைவன் ஹலாலாக்காமலா போய்விடுவான்?

உன்னை வடிவமைத்த இறைவன் உனக்கொரு வாழ்க்கையை வடிவமைத்திருப்பான் என்பதில் ஏன் ஐயம் கொள்கிறாய்?

இஸ்லாமிய பெண்களின் வரலாற்றை படி மரணிக்கும் முன் உனக்கொரு வரலாறு அமைத்துச் செல்...

நி வெறுத்த ஒன்று உன்னை தேடி வருகிறது என்றால் அது இறவனின் அருள் என நினை நீ நேசித்த ஒன்று உன்னை பிரிகிறது என்றால் அது இறைவனின் பேரருள் என நினை....

நீ யார் இதை எனக்கு சொல்ல என என்னிடம் கேட்பாயானால்... மன்னித்து விடு. கடைசியாய் ஒன்றை நியாபகப்படுத்துகிறேன்.

“நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.( பகறா 216)

Safna Nafeel (Little counsellor) Student of SEUSL Akkaraipattu வௌியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
 

கருத்துகள்