இலங்கை அரசியல் முறைமையில் பௌத்த மதத்தின் செல்வாக்கு ஓர் சமூக அரசியல் நோக்கு. தொடர் 01

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரையில் அமைந்துள்ள சுமார் 20 மில்லியன் மக்கள் சனத்தொகையை கொண்ட ஒரு பன்மைத்துவ நாடாக இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசு கருதப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்று 1972 ஆம் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்புக்கூடாக ஜனநாயக சோஷலிஸ குடியரசாக மாற்றம் பெற்ற இலங்கையின் அரசமதமாக பௌத்தம் ஆக்கப்பட்டு அதனை பாதுகாப்பது அரசின் முதற்தர கடமை என்று அரசியலமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட 3000 ஆண்டுகால வரலாற்றில் பௌத்தம் 2500 ஆண்டுகால நீடித்த வரலாற்றைக் கொண்டிருப்பினும் அதனுடன் இணைந்த சிறுபான்மை இன இனங்களாகிய இந்து மற்றும் இஸ்லாம் பௌத்தம் போன்றே தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளது என்பது வராலாற்றாசிரியர்களது கருத்தாகும். இலங்கைத் தேசிய இனங்களது இந்த நீடித்த வரலாறு அதன் பொதுமைத் தன்மையையும் பன்மைத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் நிலைபேரான அபிவிருத்தியில் அனைத்து இனங்களும் பங்களித்துள்ளமை என்ற மற்றுமொரு உண்மையை இந்த வரலாறு சொல்கிறது. ஒவ்வொரு இனத்தினதும் மேற்கண்ட நீடித்த வரலாற்று உண்மையை ஆய்வுப் படிமுறைகளுக்கூடாக முன்வைக்கத் தவரியமை தேசியவாதம் என்ற கோட்பாடு பிழையாக புரியப்பட காரணமாகியது.

இவ்வொரு இனத்தவரும் தேசிய இனங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமது அரசியல்¸ கலாசார மற்றும் பொருளியல் வாழ்வை ஒழுங்கமைத்திருந்தனர். தேச நலனைக் கருத்திற்கொண்டு விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் வரலாற்று நெடுகிலும் வாழ்ந்தமைக்கு மஹாவம்சம் உள்ளடங்களாக இலங்கையின் எழுதப்பட்ட¸ எழுதப்படாத வரலாறுச் சான்றுகள் ஆதாரமாக உள்ளன. இதையொட்டியே சகல இனத்தவர்களது அரசியல் முன்னெடுப்புக்களும் ஓர் இயல்பான நிலைப்பாடாக பார்க்கப்பட்டது.

1900 ஆம் ஆண்டு தொடக்கம் 1950 வரை இலங்கை அரசியல் நகர்வுகளில் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. சர்வதேச சக்திகளது பெரும் ஈர்ப்பைப் பெற்ற இலங்கையின் அமைவிடம்சார் பூகோள அமைப்பு மற்றும் இலங்கையின் அரசியல் கலாசாரம் போன்றவற்றை பொது மக்கள் பெருமளவில் கருத்திற் கொள்ளவில்லை. இதன் விளைவாக அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் பெருமளவு புரக்கனிப்பட்ட சிறுபான்மை இனங்கள் தமது இருப்புக்காக போராட ஆரம்பித்தன. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று தம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவென ஆயுதப் போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பன்மைத்துவ இலங்கையின் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தையுடைய சிறுபான்மை இனங்களது இலக்கு¸ ஈழத் தமிழ் போன்ற ஒரு தனிநாட்டை உருவாக்குவதன்று. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று ஆயுதப் போராட்டதினூடாக இலங்கையின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன்று. அரசியல்வாதிகளையோ அரசாங்கங்களையோ பாதுகாப்பதோ கவிழ்ப்பதோ அல்ல. நாட்டின் மைய நீரோட்டத்தில் சம உரிமைகளையும் சலுகைகளையும் அந்தஸ்த்துக்களையும் பெற்று இலங்கைத் தீவின் அபிவிருத்திக்காக சுதந்திரமாக செயற்படும் சூழலைக் கட்டமைப்பதாகும்.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றியுள்ள தீவிரவாத சக்திகளினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் சர்வதேச அரசியல் அமைப்பொழுங்கை சிதைக்கின்றது. இதன் எதிர்வலைகள் இலங்கையின் முஸ்லிம் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பையும் பெருமளவில் பாதித்தது. மைய நீரோட்டத்தில் அங்கம் வகிக்கும் சகோதர இனங்கள் முஸ்லிம் சமூகத்தினது சுயாதீன நடவடிக்கைகளையும் புவிசார் அரசியல் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தனர். இதன் தொடராக பௌத்த- தமிழர் முரண்பாட்டினுள் முஸ்லிம் சமூகமும் சிக்குண்டது. பிற்பட்ட காலங்களில் பௌத்தம்¸ தமிழ் ஆகிய இரு துருவங்களையும் ஏக காலத்தில் சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உட்பட்டது. 1931 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு தொடக்கம் 19 ஆம் திருத்தச்சட்டம் வரை பௌத்த மதம் முன்னெடுத்த பேரினவாத பௌத்த அரசியல் முறைமையை ஒத்த¸ தனித்துவ பாரம்பரிய அரசியல் முறைமை ஒன்றை சிறுபான்மை இனங்கள் கொண்டில்லை என்பதே உண்மை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றத்துடன் விழிப்பு நிலையை அடைந்த இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட இலங்கையின் பௌத்த மற்றும் தமிழ் முற்போக்கான தேசிய அரசியல் கட்சிகளும் அரசியல் ரீதியாக முஸ்லிம்களை ஓரங்கட்டும் வக்கிர நிலையை அடைந்தன. 1980 களின் பிற்பாடு சுயாதீன கட்சிமுறை அரசியலை நோக்கி நகர்ந்தமை இலங்கை அரசியல் முறைமையில் ஏற்பட்ட இரண்டாவது பிளவு நிலையாகும். 1970 களின் பிற்பாடு தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றத்துடனும் சர்வதேச முஸ்லிம் உலகில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுடனும் வளைகுடா யுத்தம் மற்றும் அறபு வசந்தம் என்பவற்றுடனும் இலங்கை அரசியல் மற்றும் சமூக அமைப்பொழுங்கை நிர்ணயித்த பேரினவாத பௌத்தவாதம் சிறுபான்மை முஸ்லிம் எதிர்ப்புவாதமாக பரிணமித்தது. ஜாதிக ஹெல உறுமய என்ற அரசியல் கட்சிக்கூடாக தனியான அரசியல் பிரவேகம் எடுத்த பேரினவாத பௌத்தம் அண்மைக்காலமாக இலங்கையின் அரசியல்¸ கலாசார¸ பொருளியல் பன்முகத்தன்மையில் இலங்கை முஸ்லிம்களது தனித்துவங்களை சிதைக்கும் வகையில் பொதுபலசேனா போன்ற சுயாதீன அமைப்புகளுக்கூடாக தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த நூற்றாண்டில் சிறுபான்மை இனங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இன வன்முறைகளையும் அதற்கான தூண்டற் காரணிகளையும்¸ விளைவுகளையும்¸ வரலாறாக தொகுத்து வந்துள்ளோமே தவிர எதிர்கால சந்ததியினரை காப்பதற்கான முற்போக்கான தீர்வுத் திட்டங்கள் குறித்து கரிசனை செலுத்தத் தவறி விட்டோம். இலங்கையின் அரசியல் ஓட்டத்தில் பௌத்த மதத்தினதும் சிங்கள அரசியல் பிக்குகளினதும் அரசியல் ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மிகைத்துள்ள சூழ்நிலையில் சிறுபான்மை இனங்கள் அரசியல் ரீதியாக பலமிக்க முதுசங்களை இழந்த நிலைக்கு தள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது. ஒரு நாகரிகத்தினதும் இனத்தினதும் தனித்துவமும் மேன்மையும் அது எதிர்கொள்ளும் சகலவிதமான சவால்களுக்குமான அறிவுபூர்வமானதும் ஆக்கபூர்வமானதுமான தீர்வுத் திட்டங்களை அடையாளப்படுத்தி நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. இலங்கைச் சிறுபான்மை இனங்கள் எதிர் கொள்ளும் சவால்களுக்கான தீர்வுத் திட்டங்களைக் கண்டறியாத வரை ஏனைய எந்தத் துறையிலும் தன்னை சுதாகரித்துக் கொள்ள முடியாத நிலைக்கு அவை உற்படும். தேசிய பாதுகாப்பு நிலைகுளைவதுடன் நிலைபேரான அபிவிருத்தியும் தேக்க நிலையை அடையும்.

தொடரும்…… Rinas Lareef Naleemi

கருத்துகள்