JVP இன் ஜனத்திரலும் நமது செயற்பாடுகளும்

எப்போதும் போலவே நாம் அலையின் தலம்பலில் அல்லூண்டு போகும் சக்கைகளாகவே இருக்கின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட சனத்திரலோடு இழுபட்ட தண்டனையை இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அதே போல ஒரு நிலமையை நேற்றைய JVP இன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் ஜனத்திரலை பார்த்த பின்பு பலரினதும் மனநிலை காற்றின் திசையில் பறந்து கொண்டிருக்கின்றது.

இது JVP பற்றிய மக்களின் நம்பிக்கைக்கு எதிரானவை அல்ல, ஆனாலும், எல்லா நம்பிக்கைகளும் வெற்றியில் முடிவடைவதில்லை. எனக்கு JVP கட்சியானது ஒரு பூரணத்துவமான இடதுசாரி கட்சி என்பதில் பெரிதான உடன்பாடு இருந்து வந்ததில்லை, அதுமட்டுமின்றி, அண்மைக்கால சம்பவங்கள் எனது அவர்கள் மீதான அதிருப்தியை மேலும் பலப்படுத்தியது.

தீவிரவாதிகளின் ஏப்ரல் தாக்குதலில் பின்னர் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய அசாதாரண சூழ்நிலையிலும், அப்பாவி மக்கள் கைதான சம்பவங்களின் போதும் எதுவிதமான பெரிதான நடவடிக்கைகளையும் எடுத்தாக வெளிப்படையாக தெரியவில்லை.

அத்துடன் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய பிழையான விஷம கருத்துக்களும், மூட எண்ணங்களாக பரப்பிவிடப்பட்ட கருத்தடை சம்பந்தமான டோபி, கொத்துரோட்டி தொடக்கம் டாக்டர் ஷாபி அவர்களின் கைது வரையிலும் பகுத்தறிவுள்ள ஒரு இடதுசாரி கட்சியின் செயற்பாடை செய்யத் தவறிவிட்டார்கள் என்றே திடமாக கூற முடியும்.

இப்படியான நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படும் விஷமிகளை மக்களுக்கு அடையாளப் படுத்தவும், சிங்கள பாமர மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கின்ற துவேஷ கருத்துகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கும், நாட்டின் நலனுக்காக  ஒற்றைமை படுத்துவதற்கும் இவர்கள் எந்த விதமான பேரணிகளையோ, விழிப்புணர்வு கூட்டங்களையோ நடத்தவில்லை என்பதுடன், நாட்டின் இறைமையை கேள்விக்கு உட்படுத்திய  உண்ணாவிரத போராட்டங்களினதின் போதும் அவர்கள் தொடர்ந்தும் மெளனமாக இருந்து வந்தது இவர்களையும் ஒரு சாதாரண அரசியல் கட்சியாகத்தான் பார்க்க வைப்பதுடன், இவர்களும் சிங்கள வாக்குகளுக்காக மெளனம் காத்தார்களா என்ற கேள்வியையும் தோற்றுவிக்கிறது.

JVP ஆனது இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான எந்த வித தீர்வின் முன்மாதிரியையும் முன்வைக்காமையும், இதுவரை முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாட்டை தெளிவு படுத்தவில்லை என்பதும் கூறிப்பிடதக்கது.

எதுவாயினும், ஒரு இடதுசாரி கட்சி என்ற போர்வையை விட்டுவிட்டு, இதுவரை சந்தர்ப்பம் வழங்காத ஒரு புதிய கட்சிக்கு சந்தர்ப்பத்தை வழங்க முடியுமா என்று வேண்டுமானால் சிந்திக்கலாம். ஆனாலும் இது சாத்தியப்படுமா என்றால் அது பெரும் கேள்விக்குறியே.

சிங்கள பகுதிகளில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்கள் அறிந்திருப்பார்கள், சிங்கள மாணவர்கள் கல்விகற்கும் சமயத்தில் பூரண இடதுசாரி கொள்கைகளையும், JVP யினை தீவிரமாக ஆதரிப்பவர்களாகவும் இருப்பார்கள், ஆனால், பல்கலைக்கழக நாட்கள் முடிவடைவதற்கு முன்னரேயே தனது நிலைப்பாட்டை உதறிவிட்டு, எல்லாரையும் போல இரு பெரும் கட்சியின் ஆதரவாளர்களாக சாய்ந்து இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், இதர தேர்தல் காலங்களில் நடைபெறும் JVP இனது கூட்டங்களிலும் கூட ஜனத்திரல் பொங்கி வழியும், ஆனால், வாக்குகளை எண்ணும்போது கோஷமிட்ட கைகளின் அடையாளங்களை காணமுடிவதில்லை.

எதுவாயினும், சிறுபான்மை மக்கள் தீவிரமாக சிந்தித்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். வேறுமனே உணர்ச்சி கொந்தழிப்பினாலும், பழிவாங்குகின்றோம் என்ற எண்ணத்தினாலும் நமது வாக்குகளை வீணடிக்க கூடாது.

[totalpoll id="6618"]

Hanees Mohamed வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்