சூரா கத்ர் "அல்குர்ஆனை கொண்டாடும் இரவு" எனும் மையக்கருத்தை வலியுருத்திப் பேசுகிறது. அவ்விரவில்தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது. அல்குர்ஆன் இறக்கப்பட்ட அமைப்பு அதன் கண்ணியத்தை வலியுருத்துகிறது. அது அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது. மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் அதனை கொண்டு வருகிறார். முஹம்மத் நபி (ஸல்) மீது இறக்கப்படுகிறது. ரமழான் மாதம். லைலதுல் கத்ர் எனும் இரவு.
அல்குர்ஆன் காரணமாக அவ்விரவு சிறப்பு பெறுகிறது. அவ்விரவில் ஜிப்ரீல் (அலை) ஏனைய மலக்குமார்களுடன் இவ்வுலகுக்கு இறங்குகின்றனர். செயல்கள் நிர்ணயிக்கப்படும் இரவாகவும் அது அமைந்திருக்கிறது. மலக்குமார்கள் அல்குர்ஆன் இறக்கப்பட்ட அவ்விரவை கொண்டாடுகின்றனர்.
அல்குர்ஆன் இறக்கப்படல் என்ற ஒரே காரணத்துக்காகவே அவ்விரவு கொண்டாடப்படுகிறது. உலகை மாற்றியமைக்கு வேலைத்திட்டத்தை ஆரம்பித்த இரவது. மனித சிந்தனைகளில் ஆழமாக பதிந்திருந்த பிழையான நம்பிக்கைகளையும் திரிபுபடுத்தப்பட்டிருந்த கொள்கைகளையும் கேள்விக்குட்படுத்த ஆரம்பித்த நாள் அது. பிழையான சமூக நடத்தைகளை வெளிச்சமிட்டுக்காட்டவும், பிரதியீடான, சரியான, தெளிவான பாதையை காட்டிக்கொடுக்க ஆரம்பித்த நாள் அது.
அல்குர்ஆன் ஏன் இறக்கப்பட்டது? அது அடைய விரும்பும் இலக்குகள் யாவை? போன்ற கேள்விகள் அல்குர்ஆன் பற்றி பேசும் போது உரையாடலுக்கான மிக அடிப்படையான கேள்விகள். அறிஞர்கள் அல்குர்ஆனை முழுமையான வாசிப்புக்குட்படுத்தி, தத்தமது இஜ்திஹாதுக்கு ஏற்ப அதன் இலக்குகளை வரையறுத்தனர். அவ்விலக்குகள் நோக்கி சமூகம் நகர் வேண்டும் என்பதே இப்போது எம்முன்னால் உள்ள பொறுப்பு.
லைலதுல் கத்ர் இரவு இன்றைய முஸ்லிமைப் பொருத்தவரை மிக முக்கியம் பெறுகிறது. தனிமனிதனாகவும், சமூகமாகவும் தம்மை மீள்வாசித்துக் கொள்வதற்கான ஓர் இரவு. குறிப்பாக அல்குர்ஆனின் இலக்குகள் நோக்கி நகர்கிறோமா? அது எவ்வாறு சாத்தியமாகிறது? அந்நகர்வில் நாம் விடும் பிழைகள் யாவை? இலக்குகளை அடைவதற்கான வியூகங்கள் யாவை? போன்ற கேள்விகளை நாம் மிக சீரியசாக உள்வாங்க வேண்டியிருக்கிறது. அல்குர்ஆனை இவ்வாறு கொண்டாடுவதைத்தான் இன்று லைலதுல் கத்ர் இரவுகள் எம்மிடம் எதிர்பார்க்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக