போர் புரிவது மட்டுமே ஜிஹாதல்ல. ஜிஹாதின் பல படித்தரங்கள், நிலைகள், ஜிஹாத் என்பதன் உட்பொருளை தவறாகப் புரிந்து கொண்ட நமது முஸ்லிம் இளைஞர்களில் பலர் பலவிதமான துயரம் தரும் நடவடிக்கைகளில் ஆங்காங்கே ஈடுபட்டு வருவதால் பயங்கரவாதத்தோடு நமது சமூகம் இணைத்து பேசப்படும் அவலம் இன்று உருவாகிவிட்டிருக்கிறது. என்பதை நாம் மறுக்க முடியாது.
இதன் காரணமாக இன்று இந்துதத்துவவாதிகளால் ஒரு சொல்லடை பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது
எல்லா முஸ்லிம்களும் பயங்கராவதிகள் அல்லர் ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர்
இப்படி ஒரு கேவலமான வரையறையை நம் மீது உருவாக்கி வைத்துள்ளார்கள். இன்று உலக அளவில் பயங்கரவாதம் மிக மோசமான அளவில் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. தங்களது தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடும் செயல் கூட "பயங்கரவாதம்" என அடையாளம் காணப்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டமும் இஸ்ரேலின் அடாவடிகளை எதிர்கொண்டு அதற்கு பதிலடி கொடுக்கும் 'ஹமாஸ்' போன்ற போராளிகளின் குழுவும் பயங்கரவாதக் குழுக்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படியானால் இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா- பிரிட்டன் கூட்டுக்களவாணிகள் நடாத்தி வரும் கொடும் செயலுக்கு என்ன பெயரிடுவது என அகராதியைத் தான் புரட்டிப் பார்க்க வேண்டும்.
சரி. பயங்கரவாதம் என்றால் என்ன? அதன் வரையறையை நாம் எப்படி உருவகிப்பது?
அது மக்களை பொதுவாக பயங்கொள்ள வைக்கும் ஒரு நடவடிக்கை நுட்பமாகக் கூறுவதனால் அதனுடைய அறுதி நோக்கம் ஆதாயத்துக்காகவோ அல்லாமலோ திட்டமிட்டோ கண்மூடித்தனமாகவோ மக்களை அச்சுறுத்த பொதுவாக அமைப்பு அல்லது அரசு எடுக்கும் நடவடிக்கை அல்லது தொடர் நடவடிக்கையே பயங்கரவாதம் என்பதாகும்.
1999 ஆம் ஆண்டு கூடிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (O.IC ) பயங்கரவாதத்தை இவ்வாறு வரையறுத்துள்ளன. பயங்கரவாதம் என்றால் அதன் நோக்கங்களோ உள் நோக்கங்களோ எதுவாக இருந்த போதிலும் எந்தவொரு வன்முறைச் செயலையும் அல்லது அது தொடர்பான அச்சுறுத்தலையும் குறிக்கிறது. அதன் நோக்கம் மக்களை அச்சுறுத்துவது. அவர்களுக்கு தீங்கிழைப்பதாக மிரட்டுவது அவர்களின் வாழ்க்கை, கவுரவம், சுதந்திரம், பாதுகாப்பு அல்லது உரிமைகளை இடருக்குள்ளாக்குவது சுற்றுச்சூழல் ஏதொரு வசதி பொது அல்லது தனிச்சொத்து ஆகியவற்றுக்கு கேடு சூழ்வது அவற்றை ஆக்ரமிப்பது அல்லது கைப்பற்றுவது சுதந்திர அரசுகளின் தேசிய மூலவனம் அரசியல் இறையாண்மைக்கு ஆபத்து உண்டாக்குவது என்பனவாகும்.
எல்லா சமயங்களுமே சமாதானத்தை ஊக்குவித்தல் மனித குலத்திற்கிடையேயான நட்புறவு சமாதான சகவாழ்வு அவர்களின் அறுதி ஈடேற்றம் வெகுமானம் இவைகளையே தங்களின் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. இஸ்லாமும் அப்படித்தான்.
தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொலை செய்வதை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குர்ஆன் கூறுகிறது.
இறைவன் கண்ணியப்படுத்தியுள்ள எவ்வுயிரையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு இறைவன் உங்களுக்கு அறிவுறுத்துகிறான் (6:151)
அண்ணல் நபி (ஸல்) அருளியதாக அனஸ்பின் மாலிக் (ரலி) கூறியதாவது:-
அல்லாஹ்வுக்கு இணையாக இன்னொன்றைக் கருதுவதும் உயிர்க்கொலையும், பெற்றோர்க்கு மாறு செய்வதும், பொய் பேசுவதும்- பெருங்குற்றங்கள் ஆகும்
அண்ணல் நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்.
ஒரு உயிரை அநியாயமாகக் கொன்று போடும் வரை ஒரு முஃமின் தன் தீனின் விரிவாக்கத்தில் தொடர்ந்து இருப்பான்.
எனவே இந்த வரையறையை யார் மீறினாலும் அது பெரும்பாவம் தான். தனக்கு தீங்கு செய்யாத ஒரு உயிரை எவ்வித காரணமுமின்றி போக்குவது இறைவனின் கோபத்திற்குள்ளாகும் செயல். இன்று உலகின் இருபெறும் (இஸ்லாம்-கிறிஸ்தவம்) மதங்களுக்கிடையே மோதலை உருவாக்கி அதை நாகரீகங்களுக்கு இடையே உள்ள மோதல் என்கிறார்கள் பேராசிரியர். சாமுவேல் ஹண்டிங்டன். இந்த கோட்பாட்டை உருவாக்கினார். ஆனால் உலகின் மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகவே உள்ளனர்.
2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது அப்பாவி அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. யாசிர் அரபாத் அமெரிக்க அரசுக்கு அனுதாப செய்தி அனுப்புகிறார். அது மட்டுமல்ல அன்று ஆஃப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த தாலிபன்களும் கூட இந்த செயலை கடும் கண்டனம் செய்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்கத்தையோ இஸ்லாமிய நாகரீகத்தையோ வெறும் வன்முறையாகக் குறுக்குவதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். மேலும் வன்முறை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல.
இன்றைய நவீன பயங்கரவாத்தின் மூலவேர் இஸ்ரேல் ஆகும். அப்பாவி பாலஸ்தீன மக்கள் அவர்களின் சொந்த பூமியிலிருந்து விரட்டி அடிப்பதிலிருந்து தான் இது தொடங்குகிறது. தங்களின் அநாதரவான நிலையை எதிர்த்து அம்மக்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு போராடுகிறார்கள். தங்களது அண்டை அயலான அரபு நாடுகள் அமெரிக்காவின் கைக்கூலியாகவும் பெட்ரோல் விற்ற பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்வதையும் பார்க்கும் அந்த அப்பாவி பாலஸ்தீன் இளைஞனின் மனம் கொதிக்கிறது.
தங்களுக்கென எந்த நாடும் அதன் இராணுவ வலிமையை பயன்படுத்தாது என அறிந்து கொண்ட அந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நாமே ஏன் ஒரு ராணுவத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது? எனும் முடிவுக்கு வருகின்றனர். அந்த ராணுவம் எந்தவொரு அரசையோ தேசத்தையோ சார்ந்தது அல்ல. மிகவும் இரகசியமாகச் செயல்படும் இராணுவம் மிக நெகிழ்வான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட எதிரிகளிடம் உள்ள இராணுவத்தின் எண்ணிக்கை பலமோ அல்லது நவீன ஆயுத பலமோ இல்லாத இந்த இராணுவத்தால் கனத்தில் நின்று தாக்குப் பிடிக்க முடியாது. எனவே அதிர்ச்சியும் பீதியும் ஊட்டுகிற செயல்களின் மூலமே- மனிதகுண்டு அல்லது கார் குண்டு தாக்குதல்கள் மூலமே தனது இலட்சியத்தையும் குறிக்கோளையும் உலகறியச் செய்ய முடியும் என அந்த 'பாதிக்கப்பட்ட' இளைஞன் கருதுகிறான்.
அது மட்டுமல்ல தனது அல்லது தனது முஸ்லிம் சகோதரர்களது நாடுகளில் எண்ணற்ற அப்பாவி பொதுமக்கள் அமரிக்க இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலில் அனுதினமும் சொல்லப்படுவதைப் பார்க்கிறான். எனவே தான் எதிரி நாட்டு சாதாரண குடிமக்களை கொல்வதில் பாவமில்லை என்று நினைக்கிறான். பயங்கரவாதம் உருவாகும் தோற்றப்புள்ளி இதுதான்.
இத்தகைய போராளிகள் இஸ்லாத்திற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பார்கள். ஆனால் அதி தீவிரவாதம் இஸ்லாமியவாதம் எனும் விளிம்பு நிலையில் வாழ்ந்து மரணமடைபவர்கள் இவர்கள். எனவே இவர்கள் இஸ்லாமிய இறையியலை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள். சாதாரண குடிமக்களை கொல்வதையும் தற்கொலை செய்வதையும் தடை செய்கிறது இஸ்லாம்.
கடந்த பல ஆண்டுகளாக இராக் தொடக்கம் ஆப்கானிஸ்தன் வரை அமெரிக்கர்களுக்கும் அவர்களது ஆதரவு சக்திகளுக்கு எதிராகவும் அண்மைக்காலமாக பாகிஸ்தானிலும் கார் வெடிகுண்டுகள் (அல்லது வாகன வெடி குண்டுகள்) அல்லது மனித வெடிகுண்டுகள் என வெடி குண்டுகள் பற்றிய செய்திகள் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகிளலிருந்தே வருவதால்'இஸ்லாமியத் தீவிரவாதம்' 'மனித கார் வெடிகுண்டுகளும்' சயாமிய இரட்டையர்கள் என்றும் பிம்பம் மக்களின் பொது புத்தியில் பதிந்துவிட்டது. எனினும் இந்த கார் வெடிகுண்டுகளுக்கு ஒரு நீண்ட பாரம்பர்யம் உண்டு. அவைகளை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் ஜியோனின்யம் யூத வெறியர்களே!.
பாலஸ்தீனிலிருந்து எல்லா அராபியர்களையும் வெளியேற்றிவிட்டு அதை முழுக்கவும் யூதர்களின் பூமியாக்க வேண்டும் என வெறிபிடித்து அலைந்த பாசிச ஜியோனிஸ்ட் அமைப்புகளில் ஒன்று. ஆப்ரஹாம் ஸ்டெர்ன் என்பவனின் தலைமையில் இயங்கிய ஸ்டெர்ன் கும்பலாகும். இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை தங்களின் ஆதர்ஷ குருவாக எண்ணி செயல்பட்டவர்கள். உலக அபிப்பிராயத்தை துச்சமாக மதித்தவர்கள்.
பாலஸ்தீனத்தில் ஏற்கெனவே யூத அரசை உருவாக்க முயன்று கொண்டிருந்த இன்னொரு ஜியோனிச அமைப்பான ""ஹகானா"வுக்கம் பிரிட்டிஷ் அரசுக்கும் எவ்வித சமரச உடன்பாடும் ஏற்பட்டு விடக்கூடாது என முடிவு செய்த கிக்கும்பல் (ஸ்டெர்ன்) 1947 ஜனவரி 12ம் நாள் பாலஸ்தீன நகரான ஹைபாவில் உள்ள பிரிட்டிஷ் காவல் நிலையத்தில் வெடிகுண்டுகள் நிறைந்த ஒரு லாரியை மோதவிட்டது. அதில் 4 பிரிட்டிஷார் கொல்லப்பட்டதுடன் 140 பேர் படுகாயமடைந்தனர். வன்முறை என்பது ஒரு வழிப்பாதையல்லவே. அதன் பிறகு பாலஸ்தீனர்களும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனை பாலஸ்தீனர்களின் சொந்த தாய்நாட்டு பிரச்சினை என்று கருதாமல் அங்கு அவர்களின் மார்க்கமான 'இஸ்லாம்' அவர்களின் அந்தச் செயலோடு இணைத்து பேசப்பட்டது. விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை புத்த மதத்திற்கு எதிரான இந்து மக்களின் போராட்டம் என்றா உலகம் பார்த்தது? இல்லைதானே...!
பிறகு பாவப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? இஸ்லாமும், முஸ்லிம்களும் ஏன் தொடர்ந்து தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர்.? அவர்களுக்கு எதிரான வன்முறைக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதன் எதிர் வினையாக அவர்கள் (அதாவது முஸ்லிம்கள்) செயல்படும் போது மட்டும் உலகம் ஏன் அவர்களை தவறாகப் புரிந்து கொள்கிறது.....?
கருத்துகள்
கருத்துரையிடுக