மோட்டிவேஷன் புத்தகங்கள் வாசிப்போம்.

இன்று அதிகமான வாசிப்பாளர்கள் மோட்டிவேஷன் புத்தகங்களை அனாவசியமானதாகவே கருதுகின்றனர். அது தொடர்பில் பல விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.

அனேகமான மோட்டிவேஷன் புத்தகங்கள் சுய அனுபவம் என்ற பெயரில் கதை அளக்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். பட்டிமன்ற பேச்சைப் போல "நம்ம பக்கத்து வீட்டுப் பையன்...." "நம்ம ஆபீஸ்ல...." என்று ஊர் குப்பைகளுக்கு சாயம் பூசுகின்றனர் என்பதை நான் மறுப்பதற்கில்லை.

ஆனாலும் இந்த நியாயமூட்டலின் அடிப்படையில் அனைத்து விதமான மோட்டிவேஷன் புத்தகங்களையும் மறுப்பது அறிவுடைமையாகாது.

ஞஅவற்றிற்கு பின்வரும் பிரதானமான இரண்டு நியாயங்களை அடையாளப்படுத்தலாம்.

1) மோட்டிவேஷன் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட கலை ஆகும்.

வெட்டித்தனமாக பேசுவதெல்லாம் மோட்டிவேஷன் இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சுய அனுபவங்களை பேசி உபதேசங்கள் செய்வது அறிவுரை கூறுதல் (Advice) என்று கூறலாமேயொழிய , அது மோட்டிவேஷன் ஆகாது. மோட்டிவேஷன் என்பது ஆய்வுகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பிரயோகம் செய்ய வேண்டிய கலையாகும். இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு மோட்டிவேஷனல் கோட்பாடுகளை சுட்டிக்காட்டலாம்.

உதாரணமாக : Herzberg's Motivation Hygiene Theory , McClelland's Needs Theory , McGregor's Participation Theory , Urwick's Theory Z , Argyris's Theory , Vroom's Expectancy Theory , Porter and Lawler's Expectancy Theory... போன்ற கோட்பாடுகளை குறிப்பிடலாம்.

இதற்கும் மேலதிகமாக உளவியலின் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டும் மோட்டிவேஷன் மேற்கொள்ளவும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எனவே இதற்கமைய ஆய்வியலில் அங்கீகாரமுடையதும் மோட்டிவேஷனல் அடிப்படைகளை உள்ளடக்கியதுமான புத்தகங்களுடனான வாசிப்பு தனி மனிதனுடைய மாற்றத்தின் ஆரம்பமாக அமையும்.

2) உளவியல் சிகிச்சைகளின் போது கையாளப்படும் ஒரு முறைமையாக உளக்கல்வி வழங்கல் (Psycho Education) முறைமை வழங்கப்படுகின்றது. இன்று அனேகமான பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணம் உளக்கல்வி இன்மையாகும். அதாவது தன்னை கையாளத்தெரியாமை, பிறரைக் கையாளத்தெரியாமை மற்றும் நிகழ்வுகளை கையாளத்தெரியாமை போன்ற உளக்கல்வியின்மை சார்ந்த பிரச்சினைகளின் மூலம் சமூக சர்ச்சைகள் (Social Issues) பிரஸ்தாபனமாகி அதன் விளைவாக சமூகப் பிரச்சினைகள் (Social Problems) வரையில் விஸ்தீரமடைகிறது.

இந்த உளக்கல்வி வழங்கும் பணியை மோட்டிவேஷனல் புத்தகங்கள் அதிகம் செய்கின்றன. அதிலும் சிறப்பம்சமாகக் கூறுவதாயின் , இந்த மோட்டிவேஷனல் புத்தகங்கள் உளவளத்துணையாளன் இன்றியே இலகு மொழிநடையில் உளக்கல்வியை வழங்குகின்றன.

இன்னும் புரியும் படி கூறுவதாயின் ஒரு சினிமா காட்சியில் சமுத்திரகனி கூறுவது போல "துவண்டு கிடப்பவனுக்கு , 'உன்னால் முடியும்' - 'நீ நல்லா வருவ' - 'நீ பெரிசா சாதிக்க போற' என்று கூறுவதற்குத் தான் யாரும் இல்லை" என்று ஒரு டயலாக் பேசுவார். அதுபோன்றே அனேகமானவர்கள் சுய முன்னேற்றம் சார்ந்த கருத்தியலை மீள் சீரமைக்காமல் , சுயம் சார்ந்த அறிவின்றியே வாழ முனைகின்றனர். இதன் விளைவாகவே பலர் வாசிப்புப் பழக்கம் இருந்தும் , கல்விமான்களாக இருந்தும்கூட மனநல பிரிவுகளிலும் உளவளத்துணை அறைகளிலும் அமர வேண்டியதாகியுள்ளது.

ஆனாலும் யதார்த்தத்தை மறுப்பதற்கில்லை. இன்று சுயமுன்னேற்ற புத்தகங்கள் முதலீட்டு சாதனமாக மாறியுள்ளன. அதையும் கடந்து சக்கைத் தனமான எழுத்துக்களும் மோட்டிவேஷன் புத்தகங்களாகியுள்ளன. ஆனாலும் தமிழில் ஆய்வியல் அடிப்படையிலான கோட்பாடுகளைக் கொண்ட சுயமுன்னேற்ற புத்தகங்கள் இல்லாமலில்லை. குறிப்பாக வல்லியப்பன் , பிரையன் டிரேஸ் மற்றும் ஜான் மேக்ஸ்வெல் போன்றோரின் பல தமிழாக்க புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதை விடுத்து சில காதல் நாவல்கள் எழுதும் நூலாசிரியர்களின் சக்கைத் தனமான பேச்சுக்களை ஆயிரங்கள் கொடுத்து வாங்கி வாசித்து விட்டு மோட்டிவேஷன் புத்தகங்களை திட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மேலும் சில சமயங்களில் மோட்டிவேஷன் கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட புத்தகங்களை நாம் வாசிக்கும்போது அப்புத்தகத்தின் மோட்டிவேஷனல் அப்ரோச் தொடர்பான அறிவில்லாத சமயத்தில் , அது சக்கை எழுத்தாகவே தெரியும். எனவே விமர்சன வியூகத்துடன் மோட்டிவேஷனல் புத்தகத்தை அணுகும் சமயத்தில் மோட்டிவேஷனல் அப்ரோச் மற்றும் கோட்பாடு தொடர்பான அறிவு அவசியம் என்பதும் ஞாபகமூட்டப்பட வேண்டியுள்ளது.

ஆனாலும் தமிழில் இலகு மொழிநடையிலும், மோட்டிவேஷன் அப்ரோச்களையும் மற்றும் கோட்பாடுகளையும் உள்ளடக்கிய அடிப்படையியலில் கவனம் செலுத்திய மோட்டிவேஷன் புத்தகங்களின் தேவை இன்னும் அதிகமாகவே அவசியமாகிறது. குறிப்பாக இலகு நடையிலான மோட்டிவேஷனல் கோட்பாடுகளை உள்ளடக்கிய புத்தகங்களை அதிகம் வெளியிடுவது தமிழ் எழுத்துக்கு நாம் செய்யும் மிகப் பெரும் சேவையாகும்.

என்னைப் பொருத்தவரையில் என்னிடம் புத்தகம் வாசிக்க ஆரம்பிப்பதற்கு இலகு வழி கேட்டால் , நான் ஒரு போதும் எந்த நாவலினது பெயரையும் கூற மாட்டேன். அதிகமாக நான் கூறுவது நூஹ் மஹ்ழரியினுடைய புத்தகங்களையும், வல்லியப்பனுடைய மோட்டிவேஷன் புத்தகங்களையும் தான்.

மோட்டிவேஷன் புத்தகங்களை வாசிப்போம்.

Don't judge a book by the cover.

Fazlan A Cader

கருத்துகள்