பிற மதத்தவர்களின் பண்டிகை வாழ்துக்கள் நல்லுறவுக்கான கௌரவ உபசாரம்

இந்த ஆய்வு, குறிப்பாக கிறிஸ்மஸ் பண்டிகை வாழ்த்துப் பரிமாறல்கள் பற்றிய இஸ்லாமிய அறிஞர்களின் சிந்தனைகள் மீதான ஒரு வாசிப்பாகும்.

கிறிஸ்தவ புதுவருடத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பரிமாறுவது குறித்து புதுவருடம் மலரும் போது பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அறிஞர்கள் மத்தியில் பிறமத்தவர்களின் விசேட தினங்களில் வாழ்த்துப் பரிமாறுவது குறித்து வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகிறது. வாழ்த்துப் பரிமாறல் குறித்து நேரடியான சட்டவசனங்கள் எதுவுமில்லை என்பதே இத்தகைய வித்தியாசமான சிந்தனைகள் பேசப்படுவதற்கு முதன்மை காரணமாகும்.

இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கிறிஸ்தவ புதுவருட வாழ்த்துக்களை பரிமாறுவது ஹராம் என்று பத்வா வழங்கியுள்ளார்கள். அவர்களின் மாணவரான இமாம் இப்னு ஜவ்ஸியும் கிறிஸ்மஸ் பண்டிகை வாழ்த்துக்கள் கூறுவது ஹராம் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அநேகமான ஸலபி சிந்தனையாளர்கள் இப்னு தைமியாவின் பத்வாவை நகலெடுத்தே கருத்துக்களை முன்வைத்துள்ளர்கள். அந்த வகையில் இமாம் இப்னு பாஸ் (ரஹ்), முஹம்மத் உஸைமின் (ரஹ்), அபல்பானி (ரஹ்) போன்ற பலர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வாழ்த்துப் பரிமாறல் அல்லது கிறிஸ்தவ புதுவருடத்துக்கான வாழ்த்துக் கூறல் ஷரீஆவின் பார்வையில் ஹராம் என்றே பத்வா கொடுத்துள்ளனர்.

இவர்கள் இதற்கான நியாயங்களை முன்வைக்கும் போது இது கிறிஸ்தவர்களின் மதரீதியான பண்டிகை தினமாகும். இதற்காக வாழ்த்துப் பரிமாறுவது அவர்களின் மார்க்க விவாகாரங்களில் ஒப்பாகுவதற்கு சமனாகும். இஸ்லாம் பிற சமூகத்திற்கு ஒப்பாகுவதை ஹராமாக்கியுள்ளது. மேலும் வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் அவர்களின் பண்டிகையில் நாம் பங்கேற்கின்றோம். அவ்வாறே வாழ்த்துப் பரிமாறுவதை அனுமதிப்பதானது முஸ்லிம் நாடுகளை கிறிஸ்தவர்களுக்குரிய விழாவை அறபுலகில் இறக்குமதி செய்து கொண்டாடுவதற்கு சந்தர்ப்த்தை வழங்குவதாக அமையும்.

எனவே கிறிஸ்தவர்களின் மத அனுஷ்டான சொற்பிரயோகங்களை பயன்படுத்தியோ அல்லது பொதுவான வாழ்த்துக்குரிய சொற்பிரயோகங்களை பயன்படுத்தியோ வாழ்த்துக்களை பரிமாறுவதும் அன்பளிப்புக்களை வழங்குவதும் ஹராம் ஆகும் என இமாம் இப்னு தைமியாவின் சிந்தனையை பின்பற்றும் சில நவீன கால அறிஞர்கள் பத்வா வழங்கியுள்ளனர்.

வாழ்த்துப் பரிமாறல் கௌரவ உபசாரம்

கிறிஸ்தவ புது வருட வாழ்த்துக்களை பரிமாறுவது அல்லது பிற மதத்தவர்களின் விசேட தினங்களில் அல்லது வேறுவகையான தேசிய விசேட தினங்களை முன்னிட்டு வாழ்த்துப் பரிமாறுவது மனித நேயம் என்ற வகையில் கௌரவ உபசாரமாகவே நோக்க வேண்டும் என நவீன கால அறிஞர்கள் கூறுகின்றனர். பெரும்பான்மையான நவீன கால சட்டத்துறை அறிஞர்கள் இதுபோன்ற வாழ்த்து தெரிவிப்பதில் தவறில்லை என்றே கருதுகின்றனர்.

கலாநிதி யூஸுப் கர்ளாவி அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது கால, சூழ்நிலைகளின் மாற்றம் காரணமாக ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியாவின் சிந்தனையோடு உடன்பட முடியாதுள்ளது எனக் குறிப்பிடுகிறார். இன்று கிறிஸ்வர்களும் முஸ்லிம்களும் சமாதான சகவாழ்வோடு வாழுகிறார்கள். அன்று காணப்பட்ட சிலுவைப்போர் சூழல் இன்றில்லை.

இன்று முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே தேசத்தில் வாழும் சம உரிமை - கடமைகள் கொண்ட குடிமகன்களாகவே திகழ்கின்றனர். அவர்களுக்கு மத்தியல் திருமண பந்தங்களும் காணப்படுகின்றன. அதனால் ஏற்படும் சொந்தங்கள், குடும்ப உறவுகள் வளர்ந்துள்ளன. முஸ்லிம்களை அண்டி வாழும் அயலவர்கள், பள்ளித்தோழர்கள், அலுவலக சகபாடிகள் என இருசாராருக்கும் மத்தியில் பலமான உறவுகளும் தொடர்புகளும் வளர்ந்துள்ளன.

எனவே இத்தகைய சமாதான சகவாழ்வு சூழல் நிலவும்போது நல்வாழ்த்துக்களை பரிமாறுவது தவறல்ல. இஸ்லாம் இத்தகைய கௌரவ உபாசாரங்களை வரவேற்பது மாத்திரமின்றி அதனை தூண்டியுமுள்ளன. அல்குர்ஆன் ஸுரா மும்தஹினாவின் ஏழாவது வசனத்தில் சமாதானமாக வாழும் அந்நியர்களுடன் நல்ல முறையில் உபகாரம் செய்யுமாறும் நீதியுடன் நடந்து கொள்ளுமாறும் முஸ்லிம்களை பணிக்கிறது.

ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய ஒன்றியம் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் கிறிஸ்தவ புதுவருட வாழ்த்துக்கள் பரிமாறுவதை ஆதாரங்கள் அடிப்படையில் ஆகும் என்றே பத்வா வழங்கியுள்ளது.

போராடாத சூழழில் ஒரு முஸ்லிம் தனிநபர் அல்லது இஸ்லாமிய நிறுவனங்கள், அமைப்புக்கள் வாழ்த்துக்களை பரிமாறுவது அல்லது வாழ்த்தட்டடைகளை பரிமாறுவது ஆகுமானதே. இஸ்லாம் அனுமதிக்காக மத சின்னங்கள், அடையாளங்கள் பொறிக்கப்படுவதை தவிர்ப்பதையும் அகீதாவிற்கு முரணான வார்த்தை பிரயோகங்களை தவிர்ந்து கொள்வதுமே இங்கு கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் என பத்வா ஒன்றியம் வழிகாட்டியுள்ளது.

கிறிஸ்தவ புதுவருடத்தை முன்னிட்டோ அல்லது அதுபோன்ற விசேட தினங்களை முன்னிட்டோ வாழ்த்துப் பரிமாறும் போது பயன்படுத்தப்படும் பதப்பிரயோகங்கள் பிற மதத்தினரின் நம்பிக்கை கோட்பாட்டை ஏற்று அங்கீகரிப்பதாக அமையாமல் இருக்க வேண்டும் என்பதையே நாம் மனங் கொள்ள வேண்டும். இந் நிபந்தனைகளுடன் இன, மத பேதமின்றி சாதாரணமாக சம்பிரதாய அடிப்படையில் மக்கள் மத்தியில் காணப்படும் வழக்கமான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள், அன்பளிப்புக்கள் என்பன கௌரவ உபசாரமாகும். நல்லுறவைப் பேணும் உபசரிப்பாகவே இஸ்லாம் இதனைப் பார்க்கிறது.

எனவே அந்த வகையில் அன்பளிப்புக்களை பெறுவதோ அல்லது அதற்கு பதிலீடாக வழங்குதோ ஆகுமானதே. நபி (ஸல்) அவர்கள் எகிப்து கிறிஸ்தவ மன்னன் முகவ்கிஸிடமிருந்து அன்பளிப்புக்களை மனமுவந்து ஏற்றுள்ளார்கள்.

அயலவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ற வகையில் பிற மதத்தவர்களின் பண்டிகை வாழ்த்துக்கள் ஆகுமானதே என கட்டார் பல்கலைகழ போராசிரியர் முஹம்மத் தஸுக்கி அவர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளார். மரியாதைக்கான உபசாரம், நல்லுறவு பேணுதல் என்ற வகையில் கிறிஸ்வ புதுவருட வாழ்த்து ஆகுமானதே என இஸ்லாமிய சட்டத்துறையிலும் உஸுல்களிலும் பெரும் பாண்டித்தியம் உள்ள உஸ்தாத் முஸ்தபா ஸர்கா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே முஹம்மத் ரஷீத் ரிழா (ரஹ்), அஹ்மத் ஷர்பாஸி (ரஹ்), அப்துல்லாஹ் பின் பய்யா போன்ற இஸ்லாமிய சட்டக்கலை வல்லுனர்கள் கிறிஸ்தவ புதுவருட வாழ்த்து ஆகுமானதே என பத்வா வழங்கியுள்ளனர்.

புரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்:

1. வாழ்த்துக்கள் பிற மதத்தவர்களின் தீனை ஏற்று அங்கீகரித்ததாக அமையாது. உங்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் என்பதன் மூலம் அவர்களது கொள்கையை திருப்தியோடு ஏற்று அகீதாவை பின்பற்றியொழுகியதாக அர்த்தம் கிடையாது. முஸ்லிம்களுடன் போராடாத, அவர்களது இருப்பிடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றாத சமாதானமாக வாழும் பிற இன, மத்ததவர்களுடனான உறவுகள் பற்றிய கொள்கையை அல்குர்ஆன் விளக்கும் போது அவர்களுக்கு முஸ்லிம்கள் செய்யவேண்டிய நற்கருமமாகவே இதனை குறிப்பிடுகிறது.

2. அந்நியர்களுடனான தொடர்பின் அடிப்படை சமாதானம் என்பதே பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். அதுவே ஷரீஆ வேண்டி நிற்கின்ற பெறுமானமாகும். மனிதனை மனிதனாக பார்ப்பதற்கு கற்றுத் தந்த இஸ்லாம் இந்த அடிப்படையை தவிற வேறு எதனைத்தான் குறிப்பிட முடியும். எனவே பிற மத சகோதரர்களுடனான உறவுகள் குறித்த எமது பர்வை பழுதுபடாமல் பாத்துக் கொள்வதே இன்றைய முதன்மை தேவையாகும்.

3. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் மத்தியில் காணப்படவேண்டிய உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல் பின்வருமாறு:

• சாமர்த்தியமாகவும், சமயோசிதமாகவும் கலந்துறவாடி அணுகும் உறவு. • அன்பாக பேசி பண்பாக உரையாடும் உறவு • உயர்ந்த ஒழுக்க மாண்புகளுடன் பழகும் உறவு • மனித நேய உறவு • நலன்கள் மீது எழுப்பப்படும் சகல விவகாரங்களிலும் பரஸ்பர ஒத்துழைப்பு உறவு

எனவே பிற இன, மத, சமூகங்களுடனான உறவுகள் குறித்த இஸ்லாமிய அணுகுமுறை வெட்டி விலகுவதல்ல. ஒட்டி உறவு கொள்வதே. வாழ்த்துப் பரிமாறுவதோ அல்லது பதில் வாழ்த்து தெரிவிப்பதோ ஷரீஆவின் வட்டத்திற்கு வெளியில் உள்ள விடயம் அல்ல. எனவே இங்கு அந்நியர்களுடனான உறவாடல் பற்றிய சிந்தனையை புரிவதில் ஏற்பட்ட கோளாறு தான் பிரச்சினையிலன் மையமாக காணப்படுகிறது.

4. அந்நியர்களுடனான உறவு எப்படி அமைய வேண்டும் என்பதை சூரா மும்தஹனாவின் ஏழாம் எட்டாம் வசனங்கள் தெளிவாகவே தந்துள்ளன. மார்க்கத்தின் காரணமாக போராடாத மற்றும் உங்கள் வாழ்விடங்களில் இருந்து உங்களை வெளியேற்றாத முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்ல முறையில் உபகாரம் செய்து நடந்து கொள்ளுமாறும் நீதியாக நடந்து கொள்ளுமாறும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இங்கு சம நீதிக்கு அப்பால் நற்கருமங்கள் செய்யுமாறும் உபகாரம் புரியுமாறும் ஏவப்பட்டுள்ளமை கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

சமாதான சூழலில் வாழும் அந்நியர்களுடன் மிகுந்த பண்பாடாக நடக்கும் முஸ்லிம்களை அல்லாஹ் விரும்புகிறான் என்றே அந்த வசனம் முடிகிறது. நாம் அல்லாஹ்வின் விருப்பத்தையும் திருப்தியையும் பெற்றுக் கொள்ளவே எமது வாழ்வை அர்ப்பணம் செய்கிறோம்.

இந்த வசனம் மிகவும் பொதுவான வழிகாட்டலாகும். இதில் கிறிஸ்தவர்கள், யூதர்கள், மக்கா காபிர்கள், ஏனைய பிற மத சகோதரர்கள் அனைவரையும் உள்வாங்கியே அவர்களுடன் மேற்கூறிய நிபந்தனைகளுடன் மிக நல்லமுறையில் உறவை பேணுமாறு அல்-குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.

5. உலக மக்களுடன் பொது உறவு இப்படி இருக்க, இஸ்லாம் வேதம் கொடுக்கப்பட்டவர்களான யூதர்கள், கிறிஸ்தவர்களுடனான உறவாடல் பற்றி பிரத்தியேகமாகவே பேசுகிறது. அவர்களை அல்-குர்ஆன் எப்போதும் வேதம் கொடுக்கப்படடவர்கள் என்றே விழிக்கிறது. காரணம் அவர்கள் அடிப்படையில் இறைவேதம் அருளப்பட்டவர்கள். அவர்களுக்கும் எமக்கும் மத்தியில் இரத்த உறவும், நெருக்கமும்; அன்று முதல் தெடர்கிறது என்பதை சூரா பகராதவின் 136ம் வசனம் கூறுகிறது. அவர்களுடன் வாதிடும் போது மிக அழகான முறையில் வாதிடுமாறு சூரா அன்கபூத் (வசனம் 46) பணிக்கிறது. கிறிஸ்தவ புதுவருட வாழ்த்துக்கள் ஆகும் என பேசும் அறிஞர்கள் இந்த குர்ஆனிய சிந்தனையையும் கருத்திற் கொண்டுள்ளனர்.

6. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அறுத்ததை முஸ்லிம்கள் சாப்பிடுவதற்கும் அவர்களுடைய பெண்களை திருமணம் முடிப்பதற்கும் ஷரீஆ அனுமதித்துள்ளது. திருமணம் என்பது அன்பு, மன அமைதி, இரக்கம் என்ற அடிப்படைகள் மீது எழுந்த பந்தமாகும். அதனடியாக வரும் சொந்த பந்தங்கள், குடும்ப உறவுகள் என்பன இயற்கையானது. அந்த உறவுகளின் கொண்டாடங்களில் இஸ்லாமிய வரையரைகளை பேணி கலந்து கொள்வுது, வாழ்த்துப் பரிமாறுவது, ஸலாம் சொல்வது போன்ற நல்லுறவு பேணுவதை இஸ்லாம் எப்படி தடுக்க முடியும்? திருணம் முடித்து வாழ்வது ஆகுமானது என்று கூறும் ஷரீஆ, நல்லுறவு பேணுவதை ஒரு போதும் தடை செய்யாது. எனவேதான் சமாதான சூழலில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் சிநேக பூர்வமாக நடந்து கொள்வதை இஸ்லாம் விதியாக்கியுள்ளது.

7. இது வேதம் கொடுக்கப்பட்டவர்களுடன் பொதுவாக நடந்து கொள்ளும் இஸ்லாத்தின் கொள்கையாகும். ஆனால் கிறிஸ்தவர்கள் இதனைவிடவும் நெருக்கமாகவே உறவுகொள்ள தகுதியுடையவர்கள் என இஸ்லாம் வழிகாட்டுகிறது. சூரா மாயிதா 82ம் வசனம் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதை பிரஸ்தாபிக்கின்றது.

எனவே மேற்கூறிய நியாயங்களையும் ஷரீஆ நிலைப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பெரும்பான்மையான நவீனகால இஸ்லமிய அறிஞர்கள் கிறிஸ்மஸ் பண்டிகை அல்லது புதுவருட வாழ்த்துக்களை பரிமாறுவது தவறல்ல என்ற கருத்தை அழுத்தமாக கூறியுள்ளனர்.

முஹம்மத் பகீஹுத்தீன்

கருத்துகள்