காத்திருந்த காலமெல்லாம் வேர்த்திருந்த கால்கள் கூறும் நேத்திருந்து நேரமில்லை இடைவெளியின்றி துடித்திட இதயம் இளைப்பார இடமிருந்தும் களைப்பார காலமில்லை
ஓடாத கால்களோ ஓட்டம் எடுத்தது தேடாத கண்களோ நோட்டம் கொடுத்தது கேட்காத செவிகளோ இன்று பல கேள்விக்கு பெயர் கொடுத்தது மண்மூடும் என மனமறிந்தும் கண்மூட துணிவிருந்தா கள்வன் போல் களவாடுகிறாய் உன் உயிரை நீயே
புத்தகப் பைக்குள் பல பேர்களில் போதைப்பொருட்கள் பாதைகளை மறைக்கும் எத்தனையோ போத்தல்கள் பார்த்துத்தானே கால் வைக்கிறோம்
வீரம் விளைந்த இம்மண்ணில் குடி உதிரம் உறைக்கிறது நம் கண்கள் அதை பார்த்தும் தடுக்க நெஞ்சம் வேர்க்கிறது போதைக்கு அடிமையாகி வேளாண்மை செய்பவன் தொடக்கம் வெளிநாடு செல்பவன் வரை ஆண்மையை இழந்துதானே போகிறான்
தம்பி தப்பிச் செல் அப்பா வருகிறார் என்கிறான் அண்ணன் தடுக்கும் கைகளில் போத்தல்களைத் தாங்கியவனாய் இன்றைய உலகில் கேட்டுத்தானே இருக்கிறோம்
பாதை மறந்து படுத்துறங்கும் குடிகார புருசன் பணப்பைக்குள் பத்திரமாய் இருக்கும் பாக்கு களைப்பை போக்க கஞ்சாவாம் எத்தனை பேரில் என்னவெல்லாம் வருகிறது கேட்கும் போதே என் கைகள் கத்தி தேடுகிறது புரட்சிக் கவிதையல்ல இது புது யுகம் படைக்க முயற்சிக் கவிதை
உண்மையில் நீ ஆணாக இருந்தால் அண்மையில் நடக்கும் போதையை அழி ஆண்மையில் பிறக்கும் பெண்மை கூட துணிவு பெறும் தூரத்து குடிகாரர்களை துரத்தியடிக்க போதையை ஒழிப்போம் புதுயுகம் படைப்போம்!!
ஐ.எம்.அஸ்கி கவியிதழ் காதலன் அட்டாளைச்சேனை-08
கருத்துகள்
கருத்துரையிடுக