இன்னொரு முறை பிறக்கிறாள்

ஒன்பது மாதங்களிற்கு முன் ஒரு கலத்திணிவாய் கருப்பையை நோக்கி என் பயணம் ஆரம்பிக்கிறது உட்பதிக்கப் படுகின்றேன்

தாயாகப் போகின்றேன் என தாங்காமல் தாராளமாய் தரணியில் தத்தளிக்கும் தவிப்பில் என் தாய் தங்கமென எனை முதல் நொடியிலே முதன் முதலாய் எனைச் சொல்லிக் கொள்கிறாள்

வாந்தி யெடுத்தாலும் வாதம் பிடித்தாலும் வாழ்வை விட அவள் வாழ்வை விட வானமளவு என் மீது தான் நேசம் எனக்காகத் தான் அவள் பாசம் உண்ணவும் முடியாமல் எனக்காய் உண்ணாமலிருக்கவும் முடியாமல் உறங்கவும் முடியாமல் உறங்காமல் இருக்கவும் முடியாமல்

நானோ அவள் கர்ப்பத்தில் பத்திரமாய் இறைவனின் சித்தரமாய்

முதல் மும்மாதம் முடிவடைகையில் நீளமோ ஏழரை சென்றிமீட்டர் தான் நிறையே வெறும் முப்பது கிராம் ஆனால். கண் காது மூக்கு மூளை கை கால் என அவயவங்களை அம்சமாக அசத்தலாய் செதுக்கிவிட்டான் இறைவன்

ஓர் இதயம் இரண்டு இதயங்களை சுமந்த தருணம் அவள் உயிருக்குள் உயிரொன்று உயிர் பெற்று விட்டது என்ற களிப்பில் எனக்காக துடித்த அவள் இதயம் அத்தனை சளிப்புக்களையும் தூக்கி யெறிந்து என் உதிர நாளங்களில் அவள் அளவில்லாக் கருணை கதிர் வீசலடைகிறது.

ஆறு மாத முடிவில் நீளமும் நிறையும் அதிகரிக்க அவள் கனவுகளும் அதிகரிக்கின்றது குட்டித்தலை முடி குட்டையாக வளர்ந்திருக்கும் என் மெல்லிய கண் இமைகள் பிரிந்திருக்கும் இன்று என் முகத் தோற்றம் அன்று மனித இயல்பைக் காட்டும் முகமாக உருப்பெற்றிருக்கும்

இறுதி மூன்று மாதம் செல்ல மகள் நான் எட்டி வயிற்றில் உதைத்த போதும் எல்லையில்லா இன்பத்துடன் யாருக்கும் தெரியாமல் என்னுடன் பேசிய ரகசியங்கள் யாரரிவார்

நான் முழு முதிர் மூலவுருவாய் உருப்பெற்று பூவுலகைக் காண தயாரான தருணங்கள் அது

அந்த ஒரு நாள் வந்தது மரணித்தும் மரணிக்காமல் மரணத்தைத் தொட்ட அந்த வலியில் துடிதுடித்து நரம்பெல்லாம் உருக்கி சதையெல்லாம் சுருக்கி கத்திக் கதறி விடாமுயற்சியுடன், அவள் கர்ப்பத்திலிருந்து விடை கொடுத்தாள் எனக்கு

அழுது கொண்டே பிறக்கிறேன் என் அருமைத் தாய் வலியிலும் சிரிக்கிறாள்

Fasl ahamed

கருத்துகள்