அந்த கடைசி மூன்று கொரோனா நோயாளிகளும்....

இலங்கையின் ஊடக தர்மமும் ஊடக கலாசாரமும் இந்தளவு அதல பாதாளத்துக்குள் விழுந்து நான் கண்டதில்லை.

அந்த PHI சங்க தலைவரின் கடைசி மூன்று நோயாளிகளால்தான் புதுவருடம் கொண்டாட முடியவில்லை என்ற கவலையும். அந்த மூன்று பேரும் பொறுப்போடு நடந்திருந்தால் "நாடே இன்று மகிழ்ச்சியில்" என்ற அறியாமையையும், களுத்துறை என்று அவர் சொல்ல வந்ததை பேருவளை என்று எடுத்துக்கொடுக்கும் சத்துரையின் இனவாதத்தையும் ரசித்து முடித்துவிட்டோம்.

இவ்வாறான விடயங்கள் இப்போது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வில் நாளாந்த நிகழ்வுகளாக மாறிப்போயின. இவற்றுக்கு முஸ்லீம் சமூகம் எப்படி எதிர்வினையாற்றப்போகிறது என்பது இன்று எம்மத்தியில் உள்ள முக்கிய கேள்விகளில் ஒன்று.

பேரினவாத சமூகத்தில் புரையோடியிருக்கும் முஸ்லீம் எதிர்ப்பு சிந்தனா வாதத்தை பேசுபொருளாக கொள்வதில் உள்ள சங்கடத்தினால் எமது முகங்களை மண்ணுக்கு கீழ் புதைத்து எதையும் கண்டுகொள்ளாமல் வாழ்வதா அல்லது விளக்கமளிப்பதா என்ற வாதத்தில் முரண்பட்ட பதிகள் வருகின்றன.

பர்மாவில் ரோகின்யாக்கள் கொல்லப்பட்ட போது, அவர்களுக்கு அறிவார்ந்த தலைவர்கள் இல்லை, ஆங்கிலம் பேசும் சட்டம் தெரிந்த காவலர்கள் இல்லை, அவர்களுக்கென ஒரு சர்வேதேச வலையமைப்பு இல்லை அவர்களிடம் ஊடகம் இல்லை என்றெல்லாம் பின்விளக்கங்கள் கூறப்பட்டன. இவற்றில் ஏதாவது இலங்கை முஸ்லிம்களிடம் இருக்கிறதா? இருந்தும் பயன் இருக்கிறதா?

இலங்கை முஸ்லிம்கள் எதையும் முறைப்படி அணுகி பழக்கப்பட்டவர்கள் அல்ல, நாம் எமது காரியத்தை சாதிக்க எப்போதும் ஒரு குறுக்குவழியை நாடுபவர்கள். ஒரு அமைச்சரை பிடித்து வேலை எடுப்பது முதல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து கட்டுமானத்துக்கு அனுமதி வாங்குவது வரை ஒருவகை இடைத்தரகர் செயல்பாட்டின் மூலம் காலத்தை ஓட்டிய ஒரு சமூகம். இன்று சிங்கள அரசும் சிங்கள ஊடகமும் துரத்தி துரத்தி அடித்து ஒவ்வொரு உரிமையாக பறிக்கும் போது செய்வது அறியாமல் தவிக்கிறோம்.

கொரோனா வைரஸினால் உயிரிழப்போரை எரிக்கவேண்டும் என்று எல்லா சர்வேதேச விதிகளையும் மீறி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலில் சட்டம் பிறப்பித்து இருக்குறது, அதில் தெளிவாக (all disease) எல்லா நோயும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நேரடியாக முஸ்லிம்களை நோக்கிய ஒரு வர்த்தமானி என்று எல்லாருக்கும் தெரியும், ஆனால் யாராலும் முறைப்படியாக எதையும் செய்ய முடியாமல் இருக்குறது. ஏனெனில் நாம் இப்படியான அநீதிகளுக்கு எதிராக சட்டத்தையோ சர்வேதேசத்தையோ நாடி பழக்கப்பட்டவர்கள் அல்ல. அமைச்சரின் வால் பிடித்து பழக்கப்பட்டவர்கள்.

பூகோள அரசியல், அறிவியல் நிலைமைகளோடு தன்னை இணைத்துக்கொள்ளாமல் தூர நோக்கு இல்லாமல், தொடர்புகளை வளர்த்துக்கொள்ளாமல் தனது உரிமையையும் இருப்பையும் காலப்போக்கில் இழந்து பேரினவாதத்தின் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக மாறிய சமூகங்ளின் பட்டியலில் இலங்கை முஸ்லிம்களும் இணைகிறார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது.

சத்துர இந்த PHI போன்ற இனவாதிகளின் செயல்பாடுகள் பற்றி சமூக ஊடகங்களில் வரும் மடத்தனமான விவாதங்களுக்கு பதில் சொல்லி அவற்றை ரசிப்பதை விடுத்தது, எமது சமூகத்தின் போக்கு எதிர்காலம் குறித்து ஒரு அறிவார்ந்த விவாதத்துக்கு முஸ்லீம் தலைமைகளை "போராளிகள்" தூண்டவேண்டும்.

சமூக வலைத்தளங்களை மட்டும் Facebook/ WhatsApp பை மட்டும் தனது அறிவுக்கான முக்கிய வழியாக நம்பி இருப்பவனிடம் விவாதிப்பதில் பிரயோகமில்லை. சிங்கள பெரும் சமூகத்தை ஆக்கிரமித்திருக்கும் பலம் வாய்ந்த ஊடக இனவாதத்தை எதிர்கொள்ள முஸ்லிம்கள் நிறுவன ரீதியில் ஒரு பலமான கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்.

இதுவரை காலமும் இந்த ஊடகங்கள் இனவாதிகளுக்கு சிங்கள வாக்குகளை அதிரித்துக்கொடுக்கத்தான் முஸ்லிம்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆசாத் சாலியும் முஜுபூர் ரஹ்மானும் தெரணையில் வந்து ஒரு file லை உயர்த்தி பிடித்து உடைந்த சிங்களத்தில் "பொதுபல சேனாவை உருவாக்கியது கோத்தா தான்" என்று கூறிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மஹிந்த குடும்துக்கு சிங்கள பேரினவாத வாக்குகள் அதிரித்தன என்பது இவர்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது

கிடைக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் அற்ப அரசியல் லாபங்கள் குறித்த பேச்சுக்களுக்கு கைதட்டாமல் இப்படியே போனால் இது எங்கு போய் முடியும் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியை தலைவர்களிடம் கேளுங்கள்.

சமூகத்துக்கு நல்லது செய்வதாக நினைத்து எல்லாவற்றையும் பகிராதீர்கள். தனிமைப்படுத்தும் நிலையங்களில் கிடைக்கும் ராஜ கவனிப்பு பற்றிய voice clip களும் கட்டுரைகளும் உலா வருகின்றன.

Quarantine center களுக்கு போக மக்கள் பயப்பட தேவை இல்லை அவை concentration camp போன்று இல்லை என்று கூறி மக்களின் அச்சத்தை போக்குவது வேறு, ஆமிக்காரன் ஆப்பிள் கொடுத்தான் ஆரஞ்சு கொடுத்தான் நோன்பு பிடிக்க சகருக்கு ஊட்டி விட்டான் என்ற அதீத புகழாரங்கள் எல்லாம் கோயபல்ஸின் உத்திக்குள் நீங்கள் உள்வாங்கப்பட்டு அவர்களின் அழுக்கு துணியை துவைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு ஜனாஸாவை எரித்து விட்டு வந்து "மாஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடியா நடந்தது" என்று சொன்ன ஒரு voice clip பின் மடத்தனத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. அவன் இறுதிக்கிரியைக்காண உன் அடிப்படை உரிமையை பறித்துவிட்டு பதில் கூடாமல் சொல்லாமல் ஏளனமாக பார்க்கிறான். இதில் புகழாரம் வேறு.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது யூதர்கள் ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு சமூகமாக அனைத்தையும் இழந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள், பின்னாளில் எப்படி தன்னை நிலைநிறுத்த உலகின் கவனத்தையும் என்னத்தையும் மாற்றி இன்று முழு உலகிலும் தாக்கம் செலுத்தும் மக்களாக மாறினார்கள் என்று வரலாறு எமக்கு சொல்லி இருக்குறது.

இலங்கை முஸ்லிம்கள் தம் இருப்பையும் உடைமைகளையும் சுய கவுரவத்தையும் பாதுகாத்துக்கொள்ள இன்னும் நேரம் இருக்குறது. கொஞ்சம் நேரம்தான்.!

Farzan Baseer
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்