விழிகளைத் திறந்தால் வழிகள் பிறக்கும்.

இடியப்பச் சிக்கல் போல் வாழ்வில் பல்வேறு குழப்பங்கள் வரலாம். எதிர்பாராத அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகள் எம்மைச் சூழ நிகழலாம். இடி வீழ்ந்தது போல் சுக்கு நூறாகி சிதறிக் கிடக்கலாம். எழும்பவே முடியாததாகிவிட்து என்றெல்லாம் கவலைப்பட்டு அவதிப்படலாம். தனக்கு மட்டுமே அனைத்தும் இவ்வாறு நிகழுகின்றது என்றும் சிலவேளை ஒப்பாரி வைக்கலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் நம்பிக்கை அறுந்து போய், சடலமாக, முடமாக கிடந்து விடுகின்றோம். அசைவற்று, இயக்கமற்று கண்ணீரையும் கவலைகளையும் நாம் தத்தெடுத்துக் கொள்கின்றோம். இச் சூழ்நிலையில் பிரச்சினை சிறியதோ பெரியதோ எந்த நிலையிலும் அல்லாஹ் அவற்றியிருந்து விடுபட ஒரு வழியை அமைத்துள்ளான் என்பதை உறுதியாக நம்ப வேண்டும். விடுதலை பெற ஏதோவொரு சிறிய வழி, சந்தர்ப்பம், நேரம் ,காலம், சூழல் அமையும் என்பதை மிகவும் உறுதியாகவே எண்ணுவது மிகவும் முக்கியமானது. நம்பிக்கை இல்லையென்றால் நகர்வு சாத்தியமில்லை.

எல்லாவற்றிற்கும் இரு நிலைகளை அமைத்திருப்பது இறைவனின் நியதி. எல்லா ஒட்டமும் அவ்வாறே சுழலுகின்றது. நம்பிக்கை இழந்து போவதே அனைத்து தோல்விக்கான வாசல். வலிகளை சுமக்கின்றோம். வழிகளை கண்டுபிடிக்க இயலாமைத் தன்மையில் உழல்கின்றோம். விழிகளைத் திறந்தால் வழிகள் பிறக்கும்.

எம்.ரிஸான் ஸெய்ன்
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்