அருள்மிகு மாதமாம் ஷஃபான் மாதத்தின் இறுதிப்பத்தில் மலர்ந்திட்ட சுவனத்து மொட்டு நீ
என்னிலும் இளையவன் நீ எனக்கே ஆசான் நீ பொறுமையின் உறைவிடம் நீ வீட்டுக்குள்ளிருந்த சுவர்க்கம் நீ
ஓரிடத்தில் தான் இருந்தாலும் ஓராயிரம் விடயங்களை மொழியாமல் கற்றுத் தந்தாய்
என்மீது இறைவன் சொரிந்துள்ள அருட்கொடைகளை புரிய வைத்தாயே பலமுறை உன் முகம் பார்த்து என் மீது இறைவன் அருளிய அருளை நினைத்துள்ளேனே.
எனக்கு இது தான் வேண்டும் என்று ஒரு நாளும் மொழிந்ததில்லை நோய் ஒன்று தொற்றினால் கண்ணீரால் தானே வெளிப்படுத்தினாய்
உன் அழுகையின் மொழியறியாமல் மனங்கலங்கி நின்றேனே நீ படும் வேதனை கண்டு பல முறை கண்கலங்கியுள்ளேன்
தனக்கு விரும்பியதை செய்யவும் முடியவில்லை பிறரிடம் சொல்லவும் முடியவில்லை
நீ பட்ட வேதனைகள் கண்டு பல நேரம் என்னை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து விடும்
உனக்கேற்பட்ட சோதனையை எவ்வாறு தாங்கிக் கொண்டாய் என நான் அறியவில்லை
இறைவன் யாருக்கும் தாங்க முடியா சோதனையை வழங்கிட மாட்டான் என்றெண்ணிய பல முறை மனதை தேற்றியுள்ளேன்
எனக்கோர் சோதனை வந்தால் முதலில் உன் வதனம் தானே நினைவுக்கு வரும்
ஆனாலும் உன்னளவு பொறுமை எனக்கில்லை என்பதே உண்மை
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை
என்னிலும் பலசாலி நீ நீ கடந்த சோதனைகள் எண்ணிலடங்காதவை ஆனாலும் ஒருநாளேனும் உனக்கேற்பட்ட சோதனையைப் பற்றிப் புலம்பியதில்லை.
மனிதர்களில் பலர் தனக்குக் கிடைத்திட்ட அருள்களை மறந்துவிட்டு தனக்குக் கிட்டாத அருட்கொடைகளுக்கே ஆசைப்படுகின்றனர்
யா அல்லாஹ் நீ என்மீது சொரிந்துள்ள அருட்கொடைகளுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது என்பதை நான் அறியவில்லை.
அல்லாஹ்வின் அருட் கொடைகளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை வரையறை செய்து எண்ணிட முடியாது நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்
இரு தசாப்தங்கள் இணைந்தே இருந்து இறை அத்தாட்சிகளை நினைவூட்டி அருள்மிகு ரமழானின் பத்ர் யுத்த தினத்திலே சொல்லாமல் விடைபெற்றுச் சென்றாயே
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
உன்னைப் பிரிந்த பின்பும் உன் புன்னகை மாறா வதனம இன்னும் கண்முன்னே நிழலாடுகின்றதே!
கருத்துகள்
கருத்துரையிடுக