- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினையே முஸ்லிம் தனியார் சட்டதிருத்த மாற்றம் தொடர்பாக 9 ஆண்டுகளுக்கு பின்னர் இரு அறிக்கை வெளியிட்டு அதில் எந்த அறிக்கையை ஏற்பது என்பதாகும்.
முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் 196 பக்கத்திற்கு ஓர் அறிக்கையும் அதில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை குறிப்பிட்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தியின் தலைமையில் 9 பக்கத்திற்கு இன்னொரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளில் பிரதானமாக முரண்படும் ஓர் இடம்
- பெண்கள் திருமணம் முடிக்க வலி (பொறுப்பாளர்)அவசியம்
- பெண்கள் திருமணம் முடிக்க வலி (பொறுப்பாளர்) அவசியம் இல்லை
என்பதாகும்.
இன்றைய கலாசார சீர்கேடுகள் நிறைந்துள்ள யுகத்தில் பெண்கள் வலியின்றி திருமணம் முடிக்க அனுமதித்தால் முஸ்லிம் சமூகத்திலும் கலாசார சீர்கேடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதோடு இது இஸ்லாமிய ஷரியாவிற்கும் முரணாக உள்ள ஓர் ஷர்த்தாகும்.
(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணைவைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் அவர்களுக்கு (நம்பிக்கையாளர் களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஒரு ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன்னுடைய வசனங்களை (மேலும்) விவரிக்கின்றான்.(2:221)
மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தில்; பெண்களுக்கு திருமணத்தை நடாத்தி வைக்குமாறு கூறுகிறது. அதற்காக எந்தவொரு தந்தைக்கும், சகோதரனுக்கும் தாம் விரும்பும் நபரை திருமணம் முடித்து வைக்க முடியாது. மாற்றமாக குறித்த பெண் விரும்பும் நபரையே மணமுடித்து வைக்க வேண்டும்.
நீங்கள் தலாக்குக் கூறிய பெண்கள், தங்களுடைய (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர் அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் செய்துகொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும் மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.(2:232)
அது மாத்திரமன்றி திருமணத்தின் போது வலி அவசியமாகும்
“வலி (எனும் பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் இல்லை.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூமூஸா(ரலி) (அபூதாவூத் 520)
மேலும், ஈமான் இறைநம்பிக்கை கொண்ட அடிமைகளல்லாத பெண்களைத் திருமணம் செய்து கொள்ள உங்களில் எவர் வசதி வாய்ப்புப் பெறவில்லையோ அவர் உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளட்டும்! அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறியக்கூடியவன். நீங்கள் ஒருவர் இன்னொருவரிலிருந்து தோன்றியிருக்கிறீர்கள். எனவே அவ்வடிமைப் பெண்களை, அவர்களைப் பராமரிப்போரின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்! மேலும் அவர்களுக்குரிய மஹ்ரை நல்ல முறையில் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அப்பெண்கள் திருமண வரையறைக்கு உட்பட்டவர்களாகவும், தகாத உறவில் ஈடுபடாதவர்களாகவும், மற்றும் கள்ளக் காதலர்களை வைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக (இந்த வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன!) மேலும் அவ்வடிமைப் பெண்கள் திருமண வரம்புக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு ஒழுக்கக்கேடான செயல் எதனையும் செய்து விட்டால் அடிமைகளல்லாத பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு. திருமணம் முடிக்காத காரணத்தால் இறையச்சமுடைய வாழ்விலிருந்து பிறழ்ந்து விடுவோமோ என்ற அச்சமுடையவர்க்கே (அடிமைப் பெண்களை மணந்து கொள்ளலாம் எனும்) இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. ஆயினும், நீங்கள் பொறுமையை மேற்கொள்வதே உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனும் ஆவான்.(4:25)
மேற்படி வசனத்திலும் பெண்களை அவர்களை பராமரிப்போரின் அனுமதியுடனே திருமணம் முடிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இஸ்லாமிய சட்டத்திற்குள் ஒரு திருமணத்திற்கு வலி அவசியம் என்று கூறப்பட்டாலும் ஹனபி மத்ஹப் சார்ந்த அறிஞர்கள் வலியின்றி திருமணம் முடிக்கலாம் என்று பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை வைத்து விளக்கம் எடுத்துள்ளனர்.
நீங்கள் தலாக்குக் கூறிய பெண்கள், தங்களுடைய (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர் அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் செய்துகொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.(2:232)
ஹனபி மத்ஹப் கருத்தை நிரூபிக்கும் விதத்தில் இந்த அல்குர்ஆன் வசனம் மாத்திரமே கிடைக்கப்பெற்றது. இதில் பெண்கள் தான் விரும்பும் ஆணை திருமணம் செய்துகொள்வதை தடுக்காதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதற்காக ஒரு பெண்ணுக்கு தன் பிறப்பு, (வளர்ப்பு) என்பவற்றில் பங்களித்த தந்தை, சகோதரனின் உதவியின்றி தனியாக திருமணம் முடிக்க விடுவது சரியா தவறா என்பது ஆய்வு செய்ய வேண்டிய விடயமாகும்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் 12 வயதுக்கு பின்னர் திருமணம் முடிக்கலாம், ஹனபி மத்ஹப் சட்டத்தின் கீழ் பெண்ணுக்கு வலியின்றி திருமணம் முடிக்கலாம் என்றுள்ளது. இதனை பயன்படுத்தி இன்று பல இளைஞர் யுவதிகள் பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணத்தில் இணைகின்றனர்.
இன்று சமூகத்தில் கட்டிளமைப் பருவ இளைஞர்கள், யுவதிகளிடம் சினிமா கலாசார தாக்கம் காரணமாக திருமணத்திற்கு முன்னால் இஸ்லாம் தடை செய்துள்ள காதல் உறவுகள் உருவாகியுள்ளது. இதில் சிலர் பெற்றோரின் அனுமதியுடன் திருமண பந்தத்தில் இணைகின்றனர். ஆனால் பலர் பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் (ஓடிப் போய்) திருமண பந்தத்தில் இணைகின்றனர். இவர்கள் தமது திருமணத்தை பதிவு செய்துகொள்ள ஹனபி மத்ஹப் என்று பதிவு செய்கின்றனர்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி இவ்வாறு ஒழுக்க சீர்கேடான விடயத்தை நடாத்தும் நிலையில் முழுமையாக பெண்களுக்கு வலியின்றி திருமணம் முடிக்கலாம் என்று அனுமதித்தால் சமூக சீர்கேடு அதிகரிப்பதோடு இதனால் பெண்கள்தான் பாதிப்படைவார்கள்.
இலங்கையில் இடம்பெற்றுள்ள காதி நீதிமன்ற வழக்கு அறிக்கைகளின் படி 95% சம்பவங்களில் ஆண் தரப்பால் பெண் தரப்புக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அதில் சில பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் எதிர்ப்பால; கவர்ச்சி காரணமாக இடம்பெற்ற திருமணங்களாகும். அதாவது இவ்வாறு பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் இடம்பெற்று பல வருடங்கள் வாழ்ந்து குழந்தைகளையும; பெற்றதன் பின்னர் பிணக்குகள் ஏற்பட்டு காதி நீதிமன்றத்தை நாடிச் செல்கின்றனர். பிணக்கத்தை தீர்ப்பதற்கு பெண்ணின் சார்பில் வலியில்லாத பட்சத்தில் பிணக்கு இன்னும் பூதாகரமாகின்றது. இதனால் குழந்தைகள் பெற்றோரின் அன்பை இழக்க நேரிடும். மாற்றமாக ஒரு பெண் தான் விரும்பிய நபரை வலியின் பொறுப்பின் கீழ் திருமணம் செய்தால் ஏதாவது பிணக்கு ஏற்பட்டாலும் வலியினூடாகவே தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.
அல்குர்ஆன் ஹதீஸுக்கு மிக நெருக்கமாக உள்ள விடயமே திருமணத்தின் போது பெண்ணுக்கு வலி அவசியம் என்பதாகும். எனவே இலங்கையில் சீர்திருத்தவுள்ள இஸ்லாமிய திருமண சட்டத்திலும் இதனை உள்ளடக்குவதே சிறந்தாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக