இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள அறிவியல் துறை வளர்ச்சி காரணமாக பாடசாலை முதல் பாராளுமன்றம்வரை இடம் பெறுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் எம்மால் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகின்றது.
அவ்வகையில் நவம்பர் மாதத்தில் இலங்கையில் இடம் பெற்ற நிகழ்வுகளின் சுருக்கம் இதுதான்.
முதலிரு வாரத்திலும் இன்றைய தலைவர்கள் வாழுகின்ற பாராளுமன்றம் போரட்ட களமாக மாறியிருந்த நிலையில் இறுதி இரு வாரங்களும் நாளைய தலைவர்கள் வாழுகின்ற பாடசாலைகள் போரட்ட களமாக மாறியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இலங்கையில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதேமாதிரி ஒழுக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இது உணர்த்துகின்றது.
இவ்வாறு இரு சமூகத்தையும் விடுவது தம்மை தாமே அழுப்பது போல் உள்ளது. இதில் பாராளுமன்ற சமூகத்தை தேர்தலை கொண்டு மாற்ற முடியும் என்பதால் தற்போது எப்போக்கில் போக விட்டாலும் பாடசாலை சமூகத்தை அவ்வாறு விடுவது நாளைய தலைமுறையை அழிப்பது போன்றதாகும்.
எனவே இவ்வாறு பாடசாலை சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சி ஏற்படக் காரணம் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்பதை ஆராய்வது சாலச் சிறந்ததாகும்.
அறிவியல் மாற்றம், தொழிலை இலக்காக கொண்ட வாழ்க்கை திட்டம், வாழ்க்கைக்கு பதிலாக பரீட்சையை இலக்காக கொண்ட கல்வித் திட்டம் என்பன இதற்கான சில அடிப்படை காரணமாகும்.
முன்னைய தலைமுறையினர் கூட்டுக் குடும்பத்தில் தாத்தா பாட்டியின் மடியில் நீதிக்கதைகளை கேட்டு வளர்ந்தனர், ஆனால் இன்றைய தலைமுறையினர் தனிக்குடும்பத்தில் தாய் தந்தை மடியில் பொருத்தமில்லாத வீடியோக்களை பார்த்து வளர்கின்றனர். இதனால் சிறு வயதில் நற்கருத்துகள் பதிய வேண்டிய உள்ளத்தில் நச்சு விதைகள் விதைக்கப்பட்டு கட்டிளமைப் பருவத்தில் கொலைகாரனாகவும் மாறிவிடுகிறான்.
முன்னைய ஆசிரியர்கள் பாடசாலைக்கு வராத மாணவர்களை வீட்டுக்கு சென்று அழைத்து பாடசாலையில் அமர்த்தினர். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரும் மாணவனை கிலாஸுக்கு வந்து கற்குமாறு கூறுகின்றனர்.
மேலும் இன்றைய தனியார் வகுப்புக்களின் கல்வித் திட்டம் வாழ்க்கைக்கு விடை எழுதப் பழக்காமல் பரீட்சைக்கு மாத்திரமே விடை எழுதப் பழக்குகின்றது.
பாடசாலை கல்வித்திட்டம் மூலம் மாணவனிடம் எழுத்தறிவு, எண்ணறிவுக்கு மேலதிகமாக போட்டி, தலைமைத்துவம், கட்டுப்படுதல், தீர்மானமெடுத்தல், சகிப்புத்தன்மை, வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளுதல், பொறுமை போன்ற பண்புகள் வளர வேண்டும். இதற்கென பாடசாலையில் இணைப்பாடவிதான, புறக்களச் செயற்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
ஆனால் இன்று புறக்களச் செயற்பாடு குறைந்து பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற நோக்கில் கற்பிக்கப்படுவதால் பொறாமை, விரக்தி, வெறி, அடிதடி மோதல் போன்றன பாடசாலை சமூகத்தில் உருவாகியுள்ளது.
கல்வியில் வீழ்ச்சியுடைய மாணவர்கள் கவனிப்பாரற்ற நிலைக்கு செல்வதால் அவர்களிடம் போதைப்பொருள் பாவனை ஏற்பட்டு விடுகின்றது.
இன்று ஒரு சில ஆசிரியர்கள், அதிபர்மார் மாணவர்கள் வழி தவறும் போது தகுந்த முறையில் தண்டணை வழங்கி நல் வழிப்படுத்த முயற்சித்தால் சில பெற்றோர் தண்டணை வழங்கிய ஆசானுக்கு எதிராக சிறுவர் உரிமை மீறல் வழக்கு தொடர்கின்றனர். இதனால் சில ஆசிரியர்கள் மாணவர்களை அவர்களின் போக்கில் போக விட்டு விடுகின்றனர். மறுபுறம் சில ஆசான்கள் சிறு தவறுக்கும் பாரிய தண்டணை வழங்கி மாணவர் மனதில் வெறுப்பை வளர்த்து விடுகின்றனர்.
இன்று சமூகத்தில் மதத்தை கற்பதற்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை. மறுபுறம் மதங்கள் தமது மதத்தின் நற்கருத்துக்களை மக்கள் மயப்படுத்தாமல் ஏனைய மதங்கள் இயக்கங்களின் தவறுகளை மக்கள் மயப்படுத்தவும் பிற மதங்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும்தான் ஈடுபடுகின்றனர்.
இவை இன்று மாணவ சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சி ஏற்பட ஒரு சில காரணியாகும். அவ்வகையில் இதற்கென ஓர் தீர்வுதான் மாணவர்களுக்கு அவர்கள் பின்பற்றும் மதங்களில் உள்ள நற்கருத்துக்களை போதிப்பதாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக