இவ்வுலகின் நகர்வுகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்ற போதிலும் அவ்விடயம் எவ்வாறு? எந்த நேரத்தில்¸ எந்த இடத்தில் நடைபெறும் என்பதை எந்தவொரு மனித ஆத்மாவாலும் நிர்ணயிக்க முடியாதாயினும் நிகழ்தகவுகளாய் ஊகிக்க முடியுமாக இருக்கும். இதனாலேயே ஒவ்வொருவரும் அவரவர் ஆசைகள்¸ கனவுகள் நிஜமான நினைவலைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சில போது வாழ்க்கையை ருசித்தும் ருசிக்காமலும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆக இவ்வுலகின் கதாநாயகன் உலகை அழுகையுடனே ஆரம்பித்து வைக்கின்றான். ஏனெனில் இருளோ ஒளியோ அறியாமல் குறைகளின்றி அனுபவித்த கட்டம் காலாவதியாகி அடுத்த நகர்வுக்குள் உள்வாங்கப்படுகிறான். இவ்வாறு வாழ்க்கையோட்டம் ஒவ்வொரு தருணங்களிலும் புதுப்புது நகர்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஆரம்பமாவதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தத்துவவியலாளர்களும்¸ சமூகவியலாளர்களும் என பல துறைசார் நிபுணர்கள் வரையறுத்துக் காட்டியுள்ளார்கள். அனைத்து மகான்களுக்கும்¸ ஆளுமைகளுக்கும் முதல் ஆசானாக தாய் மடியும் தந்தையின் அன்பும் உலகை காண்பிப்பதாகவும் இருக்கும். ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ளும் போது தென்றலாய் இதமான காற்றும்¸ எதிர்த்திசையில் சூறாவளிகளையும் ஒருவர் காணாவிடின் சாதிப்பதென்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கும்.
சுயமாக சிந்தித்து தீர்க்கமாய் முடிவெடுக்கும் ஆற்றலை இயல்பிலேயே மானிடன் கொண்டிருப்பது இறைவனளித்த வரம். அவ்வரத்தை பலப்படுத்த நீர் நிலைகளில் நீந்தும் மீன்களைப் போல் எதிர்நீச்சல் அடிக்கத் தெரியாவிடின் வாழ்வின் யதார்த்தங்களையும்¸ சுவாரஷ்யமான பக்கங்களையும்¸ சந்தர்ப்பங்கள்¸ வாய்ப்புக்கள் என பலதை இழக்க நேரிடுவதற்கான கட்டம் வந்துவிடும். எந்தவொரு உயிரும் வீணானதல்ல அனைவருக்குள்ளும் பல ஆற்றல்களும்¸ ஆளுமைகளும் இருந்தே தீரும். ஆனால் அதைப்பிரதிபலிக்கின்ற முக்கிய ஊடகங்களில் மனோவலிமையும்¸ மனவெழுச்சிகளும் முதல் தளங்களாக காணப்படுகின்றன.
இவ்வாறு பல போட்டியாளர்களுக்கு மத்தியில் முன்பள்ளி தொட்டு தத்தமது இலக்குகளை அடைய எத்தனிக்கும் ஒவ்வொரு நபரும் தோல்விகளை¸ சவால்களை சந்தித்திருக்காமல் இருக்காது நாம் அனைவரும் அறிந்த நிதர்சனமான உண்மைகளில் ஒன்றாகும். அதிலும் பள்ளிப்பருவம் ஓர் அழகிய வழிகாட்டல்களுடன் அவரவர் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் இடங்களில் ஒன்றாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இங்கு வழிகாட்டல்களுடன் நெறிப்படுத்தப்படுவார்கள். பள்ளிப்பருவங்களில் அறிவால்¸ ஆற்றலால்¸ பண்பால் இனங்காணப்பட்டவர்கள் அடுத்த நகர்வாக உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்கள்¸ கல்வியற்கல்லுரிகள் என பல கலாசாலைகளில் வருடா வருடம் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இன்றைய சமூகம் இடைவெளிகளை நிரப்பும் பல ஆளுமைகளை வேண்டி நிற்கின்றது. அந்தவகையில்¸ பெற்றோர் மற்றும் ஆசான்களின் வழிகாட்டல்களுடன் வளப்படுத்தப்பட்ட ஓர் மாணவன் அல்லது மாணவி உயர்கல்விபீடங்களில் கற்கை நெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.
அதில் முக்கியமாக பல்கலைக்கழக அனுமதி எனும் போது பலர் மனதிலும் உதிக்கும் சொற்களாக இருப்பது சுதந்திரக் கல்வியும்¸ பகிடிவதையுமாகும். ஆக பகிடிவதை என்ற எண்ணக்கருவில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னைய காலங்களில் தீவிரப்படுத்தப்பட்டு இன்று மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே காணப்படுகின்றன. பகிடிவதை என்றால் என்ன? அதனால் நாடப்படும் விடயம் என்ன? என்பதை அறியாததன் விளைவே வரையரைகளைத் தாண்டி பல இன்னல்களுக்கும்¸ ஆபத்துக்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது எனலாம். மனிதன் என்பவன் சமூகப் பிராணி என்ற வகையில் அவனது நடத்தைக் கோலங்கள் அச்சமூகத்தை ஒன்றித்த போதிலும் பல பிரச்சினைகள்¸ சவால்கள்¸ தோல்விகள்¸ இடர்பாடுகளை எதிர்நோக்காமல் அவனது நாட்காட்டி நகர்வதில்லை. ஆகையால் இவற்றைக் கருத்திற் கொண்டு சமூகத்தை வலுப்படுத்திக் கொண்டு செல்வதற்கான திறன் எல்லோருக்கும் இல்லாமல்; இருக்கலாம். அதற்கே உரியவர்களே அத்தேவை நிவர்த்தி செய்வதற்கான கடமை மற்றும் வகிபாங்கைப் பெறத்தகுதியானவர்களாக இருக்கின்றனர்.
உயர்கல்வி எனும் போது அது கண்காணிப்பாளர்களின்றி சுதந்திரமாக கற்றுக்கொள்வதற்கான ஒரு இடமாக காணப்படுவதால் ஒவ்வொருவரும் அவரவருக்கான பொறுப்புதாரிகளாக காணப்படுகின்றனர். இதன்காரணமாகவே முதலாம் வருட மாணவர்களின் வழிகாட்டல் மற்றும் உதவியை நாடக்கூடியவர்களாகவும்¸ அவர்களோடு உறவை வலுப்படுத்த வேண்டும் என்ற அவாவே பகிடிவதை எனும் பெயரில் நடைமுறையில் சித்தரித்துக் கொண்டிருக்கின்றது.
எல்லா மதங்களும் சகிப்பு மற்றும் சகோதரத்துவத்தை பேணவேண்டும் என்ற கோட்பாட்டில் வாழ்க்கை நெறிமுறைகளை முன்வைக்கின்றனர். சமூகத்தின் தொண்டர்களை¸ தலைவர்களை¸ காவலர்களை உருவாக்குகின்ற பல்கலைக்கழகங்களும் அதற்கான செயற்பாட்டுக்களத்தை தருகின்றது. இதனை நிர்வகிக்கின்ற¸ இயக்குகின்ற சக்தியும் அவரவர் கையிலே இருக்கின்றது. கற்கை நெறிகளுக்கு அப்பால் இதர ஆற்றல்களை வளப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் பல்கலைக்கழகங்களில் இல்லாமல் இல்லை. பயன்பாட்டாளர்கள் இன்றியே இயங்குநிலை அற்று காணப்படுவதேயன்றி வாய்ப்புக்கள் ஏராளமாக காணப்படுகின்றன. ஒவ்வொரு அணியினரும் ஏனைய அணிகளுக்கு மத்தியில் ஒன்றறக்கலந்து வாழ்வதற்கான தருணங்கள் அதிகமாக உண்டு. மார்க்க விடயமான நிகழ்ச்சிகள்¸ இணைப்பாடவிதான புறக்கீர்த்திச் செயற்பாடுகள்¸ விளையாட்டுப் போட்டிகள்¸ கலை நிகழ்ச்சிகள்¸ வெளிக்களச் செயற்பாடுகள்¸ அமைப்புக்கள்¸ ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்கள் என வித்தியாசமான கோணங்களில் இணங்காணப்படுவதன் ஊடாக அறிமுகமாகிக் கொள்வதன் மூலம் முறையாக வழிகாட்டவும்¸ உறவுகளைப் பலப்படுத்துவதற்குமான சந்தர்ப்பமாக அமையும்.
பகிடிவதை எனும் போது அது முறையாக ஒழுங்கமைக்கப்படாமையினாலே அதன் வெளிப்பாடுகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வழிகாட்டல்கள் வினைத்திறனாக அமைய மேற்பார்வைகளின் கீழ் பிரயோகிக்கப்பட்டால் அதன் பயன்கள் தளர்வுகளின்றி புதுப்பயிர்கள் செழிக்கச்செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் உலகின் நியதிகள் போல் காலாவதிக்கு முன் அடைவுகளை நோக்கிப் பயணிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக