காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 13

"சொல்லுங்க... என்கிட்ட இருந்து எதையோ மறைச்சி இருக்கீங்க... அது என்ன?" என்று கில்கமேஷ் கடும் கோபத்துடன் கேட்டான்.

"அது.. அது.. வந்து..." என ஜெனி தடுமாற

"இப்போ சொல்லப்போறீங்களா இல்லியா?" என்று கத்தினான்.

அவள் பயத்துடன்,"சொல்லிர்றோம்.. சொல்லிர்றோம்.. முதலில் எங்களுக்காக இந்த ஆதாரத்தை கொண்டுவந்ததுக்கு நன்றி.. அடுத்தது நாங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம்."என்று அவள் சொல்ல

ஆர்தரும் மீராவும் சேர்ந்து "எங்களை மன்னிச்சிடுங்க."என்றனர். மறுபடியும் ஜெனி பேசினாள்.

"இந்த விஷயத்தை நீங்க நம்புவீங்களோ இல்லையோ தெரியல்ல... ஒருவேளை இது உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக கூட இருக்கலாம்.. அது என்னன்னா.. நீங்க உங்க நாட்டை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்து இருக்கீங்க... அதோட அது இப்போ உங்க நாடே கிடையாது." என்று சொல்லிவிட்டு உமிழ்நீரை விழுங்கி கொண்டாள்.

"என்ன சொல்றே... நான் வழிமாறி வந்தது எனக்கே தெரியும்... ஆனா உருக் என்னோட நாடே இல்லன்னு. என்ன உளர்ர?" என்று கேட்டான்.

"அவ சொல்றது உண்மைதான் கிங் கில்கமேஷ்... உங்களுக்கு இது எப்படி தெரியல்ல என்னு எங்களுக்கும் புரியவில்லை... ஆனா உங்க பயணத்துக்கு பிறகு நீங்க நாடு திரும்பவே இல்லை...."என்றான் ஆர்தர்.

"ஆமா நான் சாவுக்கடலை கடந்து ஆதிப்பிதா உத்தினபிஷ்டிமை சந்திச்சு உயிர் ரகசியத்தை அடைந்து விட்டு இரண்டொரு வருடங்கள் குகையில் இருந்தேன்..."என்றான்.

"இல்ல சேர்.. நீங்க குகையில் இருந்தது ஒன்றோ ரெண்டோ வருடங்கள் இல்லை.... சுமார் எட்டாயிரம் வருடங்களாகிவிட்டன...."என்றாள் மீரா.

"என்ன?......நீங்கெல்லாம் சொல்றது உண்மையா?..எட்டு.. எட்டாயிரம் வருசங்களா?"என்று அதிர்ச்சியில் கேட்டான்.

"ஆமா... 8000 வருடம்கள் கடந்துவிட்டது... உருக் நகரம் அதோட அடையாளத்தை இழந்தது.... அது வேறு பெயரில் இப்போ அழைக்கப்படுகிறது... மன்னர் ஆட்சி எல்லாம் முடிவுற்றது.... மக்கள் ஆட்சி ஆரம்பித்தது... பல நூறு தலைவர்கள்  ஆண்டுவிட்டனர்... பழைய விடயங்கள் எல்லாம் மக்கள் களிமண் தட்டுகளில், பப்பிரஸ் தாள்களில் எழுதி பாதுகாத்து வந்தார்கள்.... இன்று நவீன காலத்தில் பழையவிடயங்கள் எல்லாமே காட்சிப்பொருளாக மாறிவிட்டன."என்று விளக்கினாள் ஜெனிபர்.

"என்னால இதெல்லாம் நம்பவே முடியவில்லை... அப்போ நான் இன்னும் எதுக்காக இங்க இருக்கேன்.... இப்போ எப்படி என்னோட உயிர் நண்பன் என்கிடுவுக்கு மறுவாழ்வு கொடுப்பேன்." என்று பிதற்றினான்.

இவர்கள் மூவரும் கில்கமேஷ் வருந்துவதை பார்த்து ஆளுக்காள் என்ன செய்வது என்பது போல யோசித்தான்.

"நீங்க ஒன்னும் கவலை பட வேண்டியதில்லை... எங்களுக்காக எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க.. உங்களை நிச்சயம் நாங்க தோற்க விடமாட்டோம்..." என்றாள் ஜெனி.

"என்ன சொல்லுறீங்க... இப்போ என்கிட்ட என்ன இருக்கு.. எதுவுமே இல்லை... என்கிடு இறந்தபோது இருந்த மனநிலையை நான் மறுபடியும் உணர்றேன்...." என்றான்.

"அப்படி இல்லை... நீங்க ஒரு ஹீரோ... உங்களை போல யாருமே இந்த உலகத்தில் கிடையாது..... சாவை ஜெயிச்சவரு நீங்க.. நீங்க இப்படியெல்லாம் மனசு உடைந்து பேசக்கூடாது... நாங்க உங்களுக்கு உதவுறோம்...." என்றான் ஆர்தர்

"ம்ம்" என்று ஒப்புவித்தாள் மீரா.

"என்ன?"

"முதலில் நாங்க போலீஸ்ல சரணடைந்து நிரபராதி என்று நிரூபித்து விட்டு உங்க கிட்ட வருவோம்.

என்கிடுவோட பாதுகாக்கப்பட்ட உடலை கண்டுபிடிப்போம்.. அந்த மோதிரத்தையும் மீட்போம்... நிச்சயமாக உங்க நண்பருக்கு மறுவாழ்வு கொடுப்போம்..." என்று உறுதியாக சொன்னாள் ஜெனி.

அப்போது தான் கில்கமேஷ்ஷுக்கு உண்மையில் உற்சாகம் பிறந்தது. அவர்கள் சொன்னவற்றை ஏற்றுக்கொண்டான். அவர்கள் திட்டத்தின் படியே கில்கமேஷ் கிட்ட ஆர்தர் இந்த ஊரில் உள்ள நண்பன் ஒருவனின் வீட்டில் தங்கும் படி சொன்னான். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தான். ஆர்த்தரின் போன் வேலை செய்யவில்லை. உள்ளே இருந்த மெமோரி ஷிப்பை எடுத்து கொண்டார்கள். பொலிஸில் இருந்து வரும்வரை இந்த கடத்தல் கும்பல், ப்ரொபெஸர் பற்றி எல்லாம் சிந்திக்காமல் ரிலெக்ஸா இருக்கும் படி ஜெனி கில்கமேஷ் கிட்ட கேட்டுக்கொண்டாள்.

அதன்பின்னர் அன்று மூவருமாக பொலிஸில் சரணடைந்தனர். ஏற்கனவே பொலிஸார் இவர்கள் மீது பயங்கர கோபத்தில் இருந்ததால் சிறைக்குள் அடைத்து எஃப் ஐ ஆர் போட்டுவிட்டனர்.

மறுநாள் நீதிமன்றம் அழைத்து சென்றனர்... அங்கு வைத்து உண்மை எல்லாவற்றையும் சொல்லி குற்றவாளி அந்த ப்ரொபெஸர் என்பதை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டினார்கள். உண்மையை அறிந்து கொண்ட நீதிபதி ப்ரொபெஸர் லோரன்ஸை கைது செய்ய உத்தரவிட்டார். அத்தோடு அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

அதேபோல் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் மூவரையும் மாணவர்கள் என்பதாலும், நிரபராதிகள் என்பதாலும் ஏற்கனவே சுமத்தப்பட்ட திருட்டு மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்த குற்றங்களில் இருந்தும் விலக்களிக்கப்பட்டு, இவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டது.

"ஹே....... ஹு...நாம ஜெயிச்சிட்டோம்.... வாங்க இந்த சந்தோஷத்தை கில்கமேஷ் கூட போய் கொண்டாடுவோம்..." என்று ஆர்தர் கத்தினான்.

மீரா மற்றும் ஜெனியும் மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே  ஆர்த்தரின் நண்பனின் வீட்டை நோக்கி பயணித்தனர். ஆனால் அங்கு போய் சேர்ந்த பின்னர்தான் அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்