பகிடிவதைக்கு எதிரான மாற்றீடுகள்.

‘பகிடிவதை’ என்பது பல்கலைகழகங்களுக்கு உட்சேர்க்கப்படும் முதலாம் தர மாணவர்களை தம்வசப்படுத்தும் நோக்கத்தில் மேல்வகுப்பு மாணவர்களால் திணிக்கப்படும் நகைச்சுவை சார் செயற்பாடுகளாகும். இச்செயற்பாடுகள் நகைச்சுவக்காக மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு உட்படும் மாணவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். பகிடிவதையானது பல்வேறு வடிவங்களில் பல்கலைகழக முதல்மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது. வேம்பின் சாற்றை பலவந்தமாக அருந்தச் செய்தல்¸ கடுமையான வெயிலில் அதிக தூரம் நடக்க வைத்தல்¸ இனிப்புப் பண்டமொன்றை ஒருவர் மாறி ஒருவர் சாப்பிடவைத்தல்¸ சுமக்க முடியாத சுமைகளை சுமக்க வைத்தல்¸ நீர் தாரைகளால் விசுறுதல்¸ மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தல் போன்ற பல இன்னோரன்ன செயற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

மேற்படி செயற்பாடுகளை நகைச்சுவைக்காக மேற்கொண்டாலும் அவை பல அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது. பகிடிவதைக்கு உட்பட்ட மாணவர்கள் தமது எதிர்ப்பைக் கூட மேல் வகுப்பு மாணவர்கள் மீது வெளிக்காட்ட முடியாத நிலைக்கே தள்ளப்படகின்றனர். இதன் காரணமாக பட்டப்படிப்பை நிறுத்தி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2017ம் ஆண்டில் பகிடிவதை தொடர்பில் 250க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 2018ம் ஆண்டிலே பகிடிவதை காரணமாக 10க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மேலும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பல்கலைக்கழகத்திலிருந்தே இடைவிளகிச் சென்றுள்ளனர். இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாலும் படிப்பை இடை நிறுத்துவதாலும் மாணவனின் எதிர்காலமும் குடும்பத்தின் நிலையும் சமூகத்தின் நிலையும் கவலைக்கிடமாக மாறுகின்றது.

பகிடிவதை காரணமாக மாணவர்களும் சமூகமும் பாதிக்கபடுமாயின் பகிடிவதை என்பது ஒழிக்கப்பட வேண்டும். எனினும் இன்று கூட தொடர்ந்து வரும் சந்ததிகளுக்கு பகிடிவதையை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையே காணப்படுகிறது. பல்கலைகழக மட்டத்திலும்¸ கல்வி அமைச்சினூடாகவும் இதற்கு எதிர்ப்பார்ப்பாட்டங்கள் நிகழ்ந்தாலும் பகிடிவதையை கட்டுப்படுத்துவதென்பது கடினமாகவே உள்ளது.

பகிடிவதைக்கு மாற்றீடாக ஏதாவது ஒரு உத்தியைக் கையாண்டால் பகிடிவதை காரணமாக ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை கட்டுப்படுத்தலாம். மாணவர்களை சமூக மயப்படுத்தும் நோக்கில் இடம் பெறும் பகிடிவதையானது உடல்¸ உள்ளத்தைப் பாதிக்கக்கூடியதாக அமையக் கூடாது. பல்கலைகழக சூலானது தமது ஆற்றல்களை வெளிப்படுத்தக் கூடியதொரு இடமாகும்.

பல்கலைகழகத்திற்கு காலடி எடுத்து வைக்கும் முதலாம் தர மாணவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரவேற்பதோடு அவர்களிடமுள்ள ஏதாவதோரு ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாணவர்களின் அச்சத்தை போக்கும் விதத்திலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கடும்வெப்பம் நிலவும் வேளையில் நடை பவணியில் ஈடுபட வைப்பதற்குபதிலாக காலை வேளையில் நடைபவணியில் ஈடுபட வைக்க முடியும். இது உடலுக்கு ஆரோக்கியமாவும் அமையும். மாணவர்களுக்கு வழங்கப்படும் செயற்பாடுகள் நிறைவேற்றுவதற்கு தகுந்ததாகவே அமைய வேண்டும். பல்கலைகழக மாணவர்களுக்கு திணிக்கப்படும் பகிடிவதையானது மாணவர்களின் உடல்¸ உள்ளத்தில் பாதிப்பேற்படாத விதத்திலும் ஏனையோர் முன்னிலையில் அவமானத்தை ஏற்படுத்தாத விதத்திலும் அமைவது பொருத்தமானதாகும். பகிடியை உடல்¸ உள்ளத்திற்கு நோவினை ஏற்படுத்தும் விதத்தில் வதையாக வழங்காமல் மாணவர்களின் தைரியத்தை வளர்க்கக்கூடிய செயற்பாடுகளாக அமைவது சிறப்பானதாகும்.

M.A.F. Farisa 1st Year FACULTY OF ISLAMIC STUDIES AND ARABIC LANGUAGE SEUSL

கருத்துகள்