மரித்துப்போன மனிதம்

உருகும் மெழுகாய் உருகி எரியும் மனதின் வலியை உணர்நதிட இங்கு மனிதம் இல்லை

கறைபடிந்த பிறப்புக்களும் கனிவில்லாக் கயவர்களும் மந்திகளாய் உருவெடுக்க மருந்தாக முகர்ந்திடவும் மனிதம் இங்கில்லை

அறிவுச் சாலைகளும் ஆயுதக் கிடங்குகளாக கூலிப்படைகளாய் நாளும் கூட்டமாய் மடிகின்றனர்

பொய்மைதனை வாய்மையாக்கி வதந்திகளுக்கு உயிர்ப்பளித்து சாதியும் பணமுமென்ற சாக்கடையில் சகதிகளாய்

குணம்மாறி இனம் மறந்து புன்மைகளைப் புவனத்தில் அழுத்தி நன்மைகளை நலிவடையச் செய்யும் நெஞ்சற்றவர் ஆகின்றனர்

ஊனக்குணம் படைத்து பணத்தில் குறிவைக்கும் பச்சோந்திகளுக்கு குணத்தின் குறிக்கோள்கள் தெரிந்திடுமா?

கால மாற்றம் கருத்தினை மாற்றிட காலனாகி மனிதம் கொல்ல கலிகாலமும் தரணியில் கருக்கொண்டது

நிலாக்கவி நதீரா முபீன் புளிச்சாக்குளம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்