இயக்கம் மற்றும் சிந்தனை இவ்விரு சொற்களையும் மாற்றி எழுதும் போது வித்தியாசப்பட்ட இரு பெரும் கருத்துக்கள் தோற்றம் பெருகின்றன. இயக்க சிந்தனை என்றால் என்ன? என்பதை ஆரம்பமாகவும் சிந்தனை இயக்கம் என்பது யாது? என்பதை அடுத்தும் நோக்கலாம்.
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பல்வேறுபட்ட சவால்கள் தோற்றம் பெறவே அவற்றுக்கு முகம்கொடுப்பதற்காக இயக்கங்கள் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு இயக்கமும் தமக்கென்று ஓர் இலக்கு, நோக்கம், வழிமுறை மற்றும் போக்குகளை இட்டுக்கொண்டன. அவற்றுக்கேற்ப தமது அங்கத்தவர்களையும் அவை பயிற்றுவிக்க முனைந்தன. இதனையே இயக்க சிந்தனை என்போம்.
இஸ்லாமிய இயக்கம் எப்போதும் தனது அங்கத்தவர்களை தஃவா, செயல் ரீதியான பயிற்றுவிப்பு, அர்ப்பணம், கட்டுப்பாடு, தியாகம் போன்ற பகுதிகளில் புடம்போட்டெடுக்க முனையும். இஸ்லாமிய இயக்கம் மற்றும் அதன் அங்கத்தவர்களிடம் ஒரு சிந்தனை இருக்கும். அச்சிந்தனை இயக்கத்திற்கு பணிவிடை செய்யக்கூடியதொரு சிந்தனை. அது இயக்கம் வரைந்த கோட்டை பாதுகாக்கக் கூடியது. அச்சிந்தனை இயக்க நிலைப்பாடுகளையும் அதன் தெரிவுகளையும் நியாயம் காணக்கூடியதாக இருக்கும். இயக்க நலவுகளுக்கே அது முன்னுரிமை கொடுக்கும். இவ்வகை சிந்தனையை உஸ்தாத் ரைஸுனி ‘கட்டுபோடப்பட்ட சிந்தனை' அல்லது 'நெகிழ்வுத் தன்மை குறைந்த சிந்தனை' என விளக்குகிறார். இவ்வகையான இயக்க சிந்தனை காலத்திற்கேற்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட புத்தாக்க சிந்தனைகளையும் புணர்நிர்மான கருத்துக்களையும் மிக மெதுவாகவே ஏற்றுக் கொள்கின்றன எனவும் விமர்சிப்பார். ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கு மாற நீண்ட காலம் தேவைப்படுவது இயல்பானது.
சிந்தனை இயக்கம் என்பது கட்டுகளுக்கு அப்பாற்பட்டது. இப்பிரிவினர் சிந்தனைகளை உருவாக்குவதிலும் அதனை விருத்தி செய்து இயக்குவதிலும் மும்முரமாக இருப்பர். அமெரிக்காவில் இயங்கும் IIIT நிறுவனம், கடாரில் இயங்கும் CILE நிறுவனம் போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை. காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளை உருவாக்குவதும் இஸ்லாத்தை அதனூடாக முன்வைக்க முனைவதும் இவர்களது போக்கு.
இயக்கங்களுக்கு வெளியில் பிரத்யேகமாக இயங்கக் கூடிய IIIT, CILE போன்ற சிந்தனை இயக்க நிறுவனங்கள் தோற்றம் பெறுவதும் எமது நாட்டைப் பொறுத்தவரை அவசியமான ஒன்று. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து சிந்தனை இயக்கத்துக்கான தேவை அதிகமாக உணரப்படுகிறது. இஸ்லாம் மீதான பல சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.
சிந்தனை இயக்கத்தின் மூலம் இஸ்லாம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆய்வு ரீதியாக அணுகப்படுவதும் கலந்துரையாடப்படுவதும் அதனூடாக எமது வாழ்வொழுங்கை மென்மேலும் சரிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அதனை முன்னெடுக்கக் கூடிய சிந்தனை வளம் மிக்க புதிய பரம்பரை உருவாக்கம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்படுத்தல்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக