''டீச்சர்... நானும் ஒங்களோட போக வாற'' எனக்கூறிய படியே என் முன்பாக பையை கழுத்தில் மாட்டிய படியே வந்தாள் அகீலா. அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு ''சரி..சரி... அவசரமா போம் மழ வர போர மாதிரி...'' எனக் கூறிய படியே வழமை போல நடந்தேன். அகீலா என்னையே ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தும் மௌனியாகவே பயணத்தைத் தொடர்ந்தேன்.
சிறிது நேரத்தில் அவளே பேச ஆரம்பித்தாள் ''டீச்சர் நீங்க மத்ரஸாலீந்து வெலகப் போறா?'' குரலில் ஏக்கம் கலந்திருந்ததை கண்டுபிடித்தேன் சற்று நேரம் அவளை உற்று நோக்கிவிட்டு ''ஓ புள்ள...'' நானும் பெருமூச்சு விட்டேன். மீண்டும் அவளது முகம் வாடியது. '' டீச்சர் போகாங்கோ... நீங்க போனா நானும் வெலகீடிய....'' கண்கள் கலங்கியிருந்ததைக் கண்டதும் மனது துடிதுடித்தது.
''அல்லா... புள்ளஅழாத.... எனக்கு கெம்பஸ் கெடச்சிருச்சி அதான் போகோணுமேன்..'' எனது வார்த்தைகளால் அவளைத் தேற்ற முயன்றேன். அவளுக்கு அது புரிந்ததோ என்னமோ? மீண்டும் என்னை நோக்கி '' டீச்சர் கெம்பஸீக்கு எந்துகன் போற?'' அவளின் அறியாத்தனமான கேள்வியால் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு ''புள்ள... அங்கேகி போறது படிச்சதுகு..'' என்றவுடன் மீண்டும் என்னைப் பார்த்து''அப்ப... நீங்க இன்னும் படிச்சி முடியலயா?'' முகத்தில் கேள்விக்குறி படிந்திருந்தது. சிரித்தபடியே ''இல்ல புள்ள... இன்னும் படிச்சோணுமே... அதான் போக போற...'' என்றதும் மறுபடி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த படி ''நீங்க போனா நானும் வெலகீடிய..'' மீணடும் பழைய கிராமபோன் போல அதையே சொல்லவும் எனக்கு சட்டென கோபம் வந்தது. புருவத்தை உயர்த்தியபடியே ''எந்தேன் அகீலா.. அப்டி செல்லிய? நீங்க இன்னும் ஓதோணும் முப்பது ஜீஸீம் முடியல்ல?'' என்றவுடன் என் முகத்தையே சற்று நேரம் பார்த்தவள் ''டீச்சர்... நீங்க தான் எங்களோட எரக்கம். அடிச்சியல்ல.. மத்த டீச்சர் அடிச்சிய..'' என்றவுடன் எனதுள்ளம் ஊமையாய் அழுதது. இந்த அன்பை யாரிடம் சொல்ல?
உலகே மறந்து சில நிமிஷங்கள் அவளின் வார்த்தைகளிலேயே மனம் ஒன்றியது. அவள் என் கையைப் பிடித்து ''டீச்சர் பெய்ட்டு வாரன். அஸ்ஸலாமு அலைக்கும்...'' எனக்கூறியபடியே வழமை போல அவளது வீடு இருக்கும் தெருப்பக்கம் நடந்தாள். நானும் வீடு நோக்கி நடந்தேன். என்னுள் ஆழ்ந்த சிந்தனை மேலோங்கியது. ' நான் பிள்ளைகளுள் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தினேனா?' உள்ளம் அழுதது.
மறுநாள் மீண்டும் மத்ரஸாவிற்குச் சென்றேன். வழமையை விட இந் நாள் மாற்றமான நாள். வகுப்புக்குச் சென்றதுமே பிள்ளைகள் ''நிப்ல டீச்சர் வநது....'' என குதூகலிப்பதைக் கண்டதும் உளம் மகிழ்ந்தது. ஆயினும் பிள்ளைகளின் முகங்களில் வழமையான மகிழ்ச்சி இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை ஸுரதுல் பாத்திஹாவுடன் வகுப்பு ஆரம்பித்தது. ''சரி புள்ளேக! இன்டேகி ஒங்களுகளுக்கு ஒரு ஸாமன் கொணந்தீச்சி.... நல்ல புள்ளேகளுக்கு தார..'' என்றதும் அகீலா எழுந்து '' டீச்சர் எப்பேகன் நீங்க வெலகிய?'' அக்கேள்விக்கணை நெஞ்சில் பாய்ந்நது போலிருந்தது எனக்கு சற்று நேர அமைதியின் பின் ''அது புள்ள.... இன்டேகி.....'' என்றதும் ரஹ்மா எழுந்து ''உண்மேகுமா?''ஆச்சரியக்குறி அப்பிஞ்சு முகத்தினிலே.
என்னால் பதில் பேச முடியவில்லை. சமாளித்தபடியே ''சரி...சரி... ரிப்காடீச்சர் ஒங்களுகளுக்கு ஈச்சி தானே... எல்லாரும் நல்லா ஓதோணும் ...'' என்றுவிட்டு வழமை போல தொடங்கினேன். எனது ஞாபகங்களில் உள்ளத்தை ஓட்ட விட்டேன்.
அது ஏ/எல் பரீட்சை முடிந்து. வீட்டிலிருந்த சமயம். அருகலுள்ள மத்ரஸாவிற்கு பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக்கொடுக்க அங்கு போனேன். பிள்ளைகள் கொஞ்ச நாட்களிலேயே என்னுடன் ஒன்ற ஆரம்பித்து விட்டனர். ஆதில் என்றொரு பையன். யாருடனும் கதைக்கமாட்டான்,குர்ஆன் கூட ஓதத் தெரியாது. அவன் கூட என்னுடன் கூடிப் பழகுமளவுக்கு இருந்தது அது ஒரு கனாக்காலம். பெருமூச்சு விட்டபடியே இருந்த என்னை யாரோ தோளைத்தொட்டு கூப்பிடுவது போல உணரவும் சட்டேன நிமிர்ந்தேன். அருகே ஸபீயா நின்று கொண்டிருந்தாள். 'என்ன?' என்று கண்களால் பேசியதை புரிந்து கொண்டவள் போல '' டீச்சர்... ஆதில் அடிச்ச.....'' முறைப்பட்டு நின்றவுடன் ''சரி இரிங்கோ... நான் பாக்கியன்.... ஆதில்.... ஆதில் வாங்கோ...'' என்றவனை அழைத்தேன்.
என் மடியில் அவனை அமர்த்தி ''எந்துகன் ஸபீக்கி அடிச்ச..'' என்றதும் பெரிய கண்களால் என்னைப் பார்த்து ''இல்ல... அவள் செல்லிய நீங்க பொப்பறாம்.. மறுபடி வாரில்லயாம்..'' என்றவுடனே நான் அழுது விட்டேன்.
ஓ.... என்னில் பாசம் காட்ட இத்தனை பேரா? இவர்களையா பிரியப் போகிறேன். நெஞ்சு விம்மியது.
கருத்துகள்
கருத்துரையிடுக