எஸ்தர் மந்திரத்தை பயன்படுத்தி தன்னை பழைய மாதிரி மாற்றி கொண்டாள்.
"நீ உண்மையிலேயே சாமர்த்தியசாலி ஜெனிபர் உனக்கு என்னோட முன்கூட்டிய வாழ்த்துக்கள்." என்றவள் கில்கமேஷ் பக்கம் திரும்பி...
"என்னால இன்னிக்கி என்னோட கடமையை சரியா செய்ய முடியல என்றாலும்... உன்னோட உன்னத நோக்கத்துக்காக தோல்வி அடைந்ததால் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் உங்களுக்காக என்கிடு அறையின் கதவுகள் காத்திருக்கின்றன. நீங்கள் யாவரும் தாராளமாக உள்ளே செல்லலாம். நான் தேவலோகம் திரும்புகின்றேன்." என்றவள் ஜெனியை பார்த்து கண்ஜாடையால் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தாள்.
அந்த அறையானது முன்பிருந்த சுவர்க்க தோற்றமும் அல்லாமல் பிறகு ஏற்பட்ட நெருப்பு தோற்றமும் அல்லாமல் உண்மையில் அந்த அறை எவ்வாறு இருக்குமோ அப்படி மாறிப்போய் இருந்தது. கில்கமேஷுக்கும், ஆர்தருக்கும் நடந்த எதையும் நம்ப முடியவில்லை. எஸ்தர் இப்படி விட்டுக்கொடுப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. ஜெனி சிரித்து கொண்டே அவர்களிடம் வந்தாள்.
"ஏய், நீ என்ன பண்ண ஜெனி... காவல் தேவதை ஹாய் சொல்லிட்டு போயிடுச்சு..." என்று ஆர்தர் ஆச்சரியமாக கேட்டான். கில்கமேஷும் எதுவும் பேசாது அதிர்ந்து போய்த்தான் நின்றான். அவனுக்கு முன்னாடி சுடக்கு போட்டு....
"ஹெலோ... காவிய நாயகரே...! என்ன யோசனை...?" என்று ஜெனி வேண்டுமென்றே அவனை சீண்டினாள்.
"வாவ்.. அமேஷிங் ஜெனி... உண்மையிலேயே நீ இன்னிக்கி கலக்கிட்டே... ஆமா அவகிட்ட ஏதோ ரகசியமாக சொன்னாயே.. அது என்ன?" கில்கமேஷ் ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டான்.
"ஊஹூம்.. ரகசியமாக இருக்கட்டும் என்று தானே அவ காதுல சொன்னேன். சரி இப்போ நாம முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து இங்க நிக்குறோம். உனக்கு என்கிடுவை பார்க்க ஆசை இல்லையா?"என்று அவனை நிஜத்துக்கு கொண்டு வந்தாள்.
"அட ஆமா... வா கில்கி... உள்ளே போய் உன்னோட பிரண்டை பார்ப்போம்..." என்று ஆர்தர் கூப்பிட அவனை முறைத்தாள் ஜெனி.
மூவரும் அந்த பெரிய கதவை நெருங்கி விட்டனர். ஜெனியையும் ஆர்தரையும் மாறி மாறி பார்த்த கில்கமேஷ் பெரிதா ஒரு மூச்சு விட்டபின்னர் கதவை திறந்தான். அந்த அறை என்கிடு உடலை பாதுகாப்பாக வைத்திருக்க பார்த்து பார்த்து கட்டியது. வெளிக்காற்று உள்ளே நுழையாமல் அடைத்து கட்டியது. உடலெல்லாம் பதனிட்டு நறுமணம் பூசி சுமேரிய முறையில் மம்மிபிகேசன் செய்து என்கிடு உடலை பாதுகாத்து வைத்திருந்தனர். திறக்கப்பட்ட கதவு வழியாக விழுந்த வெளிச்சத்தில் என்கிடு உடல் அப்படியே அங்கு இருப்பது கண்டு வியப்படைந்தனர் ஜெனியும் ஆர்தரும்.
கில்கமேஷ் கொஞ்சம் முன்னாடி சென்று என்கிடு உடலை நெருங்கினான். இவர்கள் பின்னாடியே வந்து சேர்ந்தனர். உயிரோட இருக்கும் சதையும் ரத்தமும் நாளங்களும் அந்த உடலில் இல்லை. இயற்கை மரணம் எய்து இருந்தான். ஆதலால் எந்த காயங்களும் அந்த உடலில் இல்லை. உயிர் பெற்றால் தான் இவன் உண்மையான உருவம் தெரியும். கில்கமேஷும் அவனை தடவி பழைய நியாபகங்களை எல்லாம் வருவித்து கொண்டிருந்தான்.
"நாம நினைச்சது நடக்க போகுது.... இப்போ என்கிடு உடல் நம்ம கிட்ட இருக்கு... இப்போ அந்த மித்ரத் கிட்ட இருந்து மோதிரத்தை எடுப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை..." என்றான் கில்கமேஷ்.
"ஆமா, உன்னோட 8000 வருட கனவு நனவாக போகுது. உன்னோட உயிர் நண்பன் என்கிடு மறுபடியும் இந்த பூமிக்கு வரப்போறான். உன்னோட இருக்க போறான்." என்றான் ஆர்தர்.
"எல்லாம் சரிதான் இங்கிருந்து நாம என்கிடு உடம்பை எப்படி கொண்டு போகப்போறோம்...?" என்று கேட்டாள் ஜெனி..
"நான் தூக்கிட்டு வந்துடுவேன். இருந்தாலும் கொஞ்சம் ஏதோ தப்பாக நடப்பது போலவே எனக்கு தோணுது...."என்றான்.
அந்த நேரத்தில் திடீரென மித்ரத் குரல் கேட்டது.
"நீ ரொம்ப சரியா சொன்னே... கில்கமேஷ்." என்ற சத்தம் கேட்டு மூவரும் அதிர்ச்சியோட திரும்ப.
அங்கே மித்ரத் நின்றுகொண்டிருந்தான்.
"இவன் எப்படி கரெக்ட்டா இங்க வந்தான்?" என்று தனக்குள் யோசித்த ஆர்தர் அப்படியே தன் கையை பார்க்க அதில் அந்த ட்ராக்கிங் டிவைஸ் தொங்கி கொண்டிருந்தது.
"என்னோட வேலையை ரொம்ப ஈஸி ஆக்கிட்டே இல்லேன்னா நான் கொஞ்ச நேரம் சிரமப்பட்டு இருக்க வேண்டும்." என்றான்.
என்கிடு உடலை கைப்பற்றி விட்ட தைரியத்தில் இனி இவனை சமாளிப்பது இலகுவான காரியம் என்றே மூவரும் நினைத்தனர்.
"ஒருவேளை நீ நான் தான் கில்கமேஷ் என்று கண்டுபிடிச்சி இருக்கலாம். வாழ்த்துக்கள். ஆனா உனக்கு இந்த கில்கமேஷ் என்னென்ன பண்ணுவான் அவன் பலம் என்ன என்றெல்லாம் நானே சொல்ல வேண்டியதில்லை." என்றான் கில்கமேஷ்.
மித்ரத் சிரித்து கொண்டே... உன்னை பற்றி எனக்கு உன்னை விட அதிகமாவே தெரியும். பாவம் உனக்கு தான் என்னை பற்றி இன்னும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு என்றவன் ஜெனியை பார்த்து.... சிரித்து கொண்டே...
"ஓஹ்..உங்களுக்கு இன்னொரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்த போறேன். "என்றவன். அப்படியே பின்னாடி திரும்பி பார்க்க...
அவனுக்கு பின்னாடி அவனுடைய ஆட்கள் இருவர் ராபர்டுக்கு கழுத்தில் கத்தி வைத்தபடி அவனை இழுத்து வந்தனர். இவர்கள் மூவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக