பணமற்ற பிணம்

சிதைக்க நினைக்கும் போதெல்லாம் சித்திரமாகிறேன் கண்கள் கசிந்த படி

இவள் நினைத்த நினைப்பெல்லாம் துவழ்ந்து கொட்டுதே நீர் உறுஞ்சிய சுவர்களைப் போல்

சமுத்திரத்தருகே ஒரு குட்டையாகக் கிடந்தேன் அலையில் ஒரு துளி வீழ்ந்ததோ என்னவோ கொஞ்சம் ஆடி அதிர்கிறது சரீரம்

பூக்கள் என்று மோரச் சென்றேன் இதழ்கள் கூட முட்கள் நீட்டியிருக்குமோ என்னவோ என் மூக்கிலும் வடிகிறது குருதி

அவர்கள் எல்லாம் என்னவர்கள் என்று உறவில் கசிந்தேன் ஏனோ பசை காய்ந்த தாள்கள் கொஞ்சம் கொஞ்சமாக களர்வதைப் போல் பிரிகிறார்கள்

உள்ளத்தின் வலிகளை களைந்து தாங்கிய கைகள் உடல் வலி உணர மறுக்கிறது புறு புறுத்தே என்னை புதைக்கிறது

என் கால்கள் என்று நினைத்தவை எல்லாம் வெறும் தூண்கள் என்று நிரூபித்து அவைகளுக்குப் பதிலாக என்னை வெடித்துச் சிதற வைக்கிறது

பணமற்ற பிணமான நான் பாசப்புதையலருகே பரிதாப நிலையில் இன்னும் உணரப்படாத ஊமையாக

க.ஷியா வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்