அறிவுக்கான மூலாதாரம்

அறிவை பெறுவதற்கான மூலாதாரம் எது என்ற கேள்விக்கு மேற்கத்தய சிந்தனை முன்வைக்கும் விடை இஸ்லாமிய சிந்தனை முன்வைக்கும் விடையிலிருந்து வித்தியாசப்படுகிறது. மேற்கு ஐம்புலன்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டவைகளை நம்புகிறது. மறை உலகை அது நம்புவதில்லை. இறைவன், மறுவாழ்வு போன்ற உரையாடலை மனித வளர்ச்சிக் கட்டத்தின் 'சிறுபிள்ளை கட்டம்' என ஒகஸ்ட் கொம்ட் போன்றவர்கள் குறிப்பிட்டுக் காட்டுவர். இவ்வகை ஆய்வு முறைமையில் உருவாகும் சமூக அமைப்பை அலி இஸ்ஸத் பெகோவிஷ் 'ஹழாரா' என்ற பதத்தினூடாக விளக்குவார்.

இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஆய்வுகுறைமையை பாதினிய்யா போன்ற குழுக்கள் பின்பற்றுகின்றன. மறை ஞானம் அல்லது உள உதிப்பு என்பவை மூலாதாரங்களாக கருதப்படுகின்றன. விஞ்ஞான முடிவுகளையோ இறைவசனங்களையோ விட உள உதிப்பை முதன்மைப்படுத்துகின்றனர்.

அல்குர்ஆன் இவ்விரு ஆய்வுமுறைமைகளுக்கும் மாற்றமான, நடுநிலையானதொரு சிந்திப்பை முன்வைக்கிறது. அல்குர்ஆன் "ஆயத்" என்ற பதத்தினூடாக விளக்குகிறது. ஆயத் என்ற சொல்லை இறைவனின் அத்தாட்சி எனக் கூறலாம். அல்குர்ஆன் இச்சொல்லை இரு வகையான அத்தாட்சிகளுக்கு பயன்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஒன்று அல்குர்ஆன் வசனங்கள். மற்றது உலக படைப்புகள்.

அல்குர்ஆன் இறைவனின் எழுத்து வடிவிலான அத்தாட்சி. பிரபஞ்சப் பொருட்கள் கற்புலனாகும் அவனது அத்தாட்சிகள். ஒன்று அடுத்ததை விளக்குகிறது. ஒன்றையொன்று பலப்படுத்திக் கொள்கிறது.

அல்குர்ஆனில் எவ்வித கருத்து முரன்பாடுகளும் இல்லாத திட்டவட்டமான வசனங்கள் இருப்பது போல உலக ஒழுங்கிலும் மாற்றமுறாத, ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகள் இருக்கின்றன. அல்குர்ஆனில் பல கருத்துக்களுக்கு இடம்பாடான வசனங்கள் இருப்பது போல பன்மைத்துவ ஒழுங்குக்கான அடிப்படைகள் பிரபங்சப் பொருட்களிலும், உலக ஒழுங்கிலும் இருக்கின்றன. மொழி, கலாசாரம், இனம், மதம் என அனைத்தும் பன்மைத்துவ கட்டமைப்பு கொண்டவை. கோத்திரங்கள், சமூகங்களாக நாம் உங்களை ஆக்கியிருப்பது நீங்கள் பரஸ்பரம் அறிந்துகொள்வதற்கே என அல்குர்ஆன் இவ்வுண்மையை விளக்குகிறது.

அல்குர்ஆன் மற்றும் பிரபஞ்சம் ஆகிய இரு மூலாதாரங்களினூடாக திட்டவட்டமானவை, பன்மைத்துவ கட்டமைப்பு கொண்டவை ஆகிய இரு அகுதிகளையும் புரிந்து மனிதன் தன் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும், அதுவே அவனது வாழ்வை நெறிப்படுத்தும், ஒன்றை புறக்கணித்து அடுத்ததில் மாத்திரம் தங்கிருப்பது மனித சமூகத்தை பின்னோக்கி தள்ளிவிடும் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய செய்தியாகும். இவ்வொழுங்கை அலி இஸ்ஸத் பெக்கோவிஷ் 'சகாபா' என்கிறார்.

Rishard Najimudeen Naleemi வியூகம் வெளியீட்டு மையம்
 

கருத்துகள்