காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 79

"நிறுத்து...."

"நீங்கள் பெண்களை மதிப்பீர்கள் என்று நம்பி உங்களுக்கு முன்னாடி இருக்கிறேன். இந்த கதையை முழுவதும் கேட்பதாக எனக்கு வாக்களித்து இருக்குறீங்க."

என்றாள் கொஞ்சம் பயத்துடனே!

"கண்டிப்பாக, ஆனா எனக்கு ஒருவிஷயத்தை மட்டும் சொல்லிடு நான் உருவாக்கப்பட்ட காரணத்தை நீயே சொல்லிட்டே ஆனா இந்த கதை பலநூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்கிறாய்."

என்று குழப்பத்துடன் கேட்டான்.

"ஓஹோ... அப்போ இவனுக்கு இந்த எட்டாயிரம் வருடங்கள் கடந்ததும் கூட மித்ரத் இன்னும் சொல்லல போல இருக்கு சோ அதையும் இவனுக்கு புரியும்படியாக சொல்லணும்."

என்றெண்ணி கொண்டாள்.

"நீங்க பொறுமையா இருந்தா கண்டிப்பாக அதையும் நான் சொல்லுவேன்."

என்றாள். ரொம்ப நேரமாக இருவரும் அறையில் ஏதோ பேசிக்கொண்டிருப்பது மட்டுமே மித்ரத்தின் ஆட்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்களில் ஒருவன் மித்ரத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வந்திருக்கும் லீஸா என்ற பெண் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக சொல்லிவிட்டான். அவனாலும் சென்ற இடத்தில் வேலையை சரியாக செய்ய முடியவில்லை. ஒரு வேளை வந்தது கில்கமேஷின் ஆட்களாக இருந்தால் என்கிடுவை மாற்றும் முயற்சியில் தான் இறங்குவார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். இப்போதைக்கி டாக்டர்களை தேடுவதை விட என்கிடுவை தனது பக்கம் வலுப்படுத்தி வைத்திருப்பதே அவசியம் என்று அவனுக்கு தோன்றியது.

"அவங்கள க்ளோஸ்சா வாட்ச் பண்ணுங்க... அடிக்கடி ரூம்குள்ள எதையாவது எடுத்துட்டு போய் என்ன பேசுறாங்கன்னு கேளுங்க உங்களுக்கு அவள் கில்கமேஷ் ஆளுன்னு தெரிஞ்ச மறுகணமே அவளை கொன்னுடுங்க நான் வந்துட்டே இருக்கேன்."

என்றான். கேமராவில் அவர்களின் பேச்சொலி கேட்காது. வீடியோ மட்டும் தான் அதனால் ஒருத்தன் அதில் கவனம் செலுத்த மற்றவன் மித்ரத்தின் ஆலோசனைப்படி ஜூஸ், ஸ்னாக்ஸ் என்று எதையாவது எடுத்து செல்ல முடிவு செய்தான். இவர்கள் தமது உரையாடலை தொடர்ந்தார்கள்.

"உங்க ரெண்டு பேரோட நட்பை பார்த்து தேவலோகத்தில் இருக்குற கடவுள்களுக்கே பொறாமை ஏற்பட்டது. உனக்காக அவனும் அவனுக்காக நீயும் உயிரையே கொடுக்கும் அளவு நெருக்கமாக இருந்தீங்க. தாய் நின்சுன் உங்களுக்கு அன்பை அள்ளி வழங்கினார்கள். ஊரே மெச்சும் படியாக இருவரும் இணைந்து இந்த நாட்டை செங்கோல் ஆட்சி செய்து வந்தீர்கள். உன்னோட புத்தி சாதுர்யமும், நிதானமும் கில்கமேஷுக்கு பக்க பலமாக இருந்தது."

என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போக. அந்த எண்ணங்கள் கண் முன்னாடி நடப்பது போலவே என்கிடு உணர்ந்தான். திடீரென கதவை திறந்து கொண்டு மித்ரத்தின் ஆள் வந்ததும் ஜெனி பேசுவதை நிறுத்தி விட்டாள்.

"சார்! டின்னர் ஏற்பாடு பண்ணி இருக்கோம்."

"அறிவில்லாத முட்டாள் கதவை தட்டிட்டு உள்ளே வரமாட்டியா.".என்று என்கிடு சத்தமிட,

"ஸாரி சேர் இனிமேல் இப்படி நடக்காது. நீங்களும் வாங்க மேடம்."

என்றவன் அவளை சந்தேக கண்கொண்டு பார்ப்பதை அவள் உணர்ந்தாள்.

"இப்போ நாம போகல என்றால் இவனுக்கு சந்தேகம் வந்திடும்."

என்றெண்ணியவள்.

"நாம சாப்பிட்டு கிட்டே பேசலாம்."

என்றபடி எழுந்தாள்.

"இந்த கதையை ரொம்ப ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தேன்."

என்றவன் அவனும் எழுந்தான்.

"அ. ஆஹ்.. ஆமா... என்னோட சோகத்தை வேறு யார்கிட்ட சொல்லுவேன்."

என்று சமாளித்து கொண்டு இருவரும் இரவு உணவை உண்பதற்காக அறையை விட்டு வெளியேறினார்கள். அந்த நேரத்தில் ஜெனி டிவைசை காதில் மாட்டி கொண்டு லாவகமாக முடியை முன்னாடி போட்டு மறைத்து கொண்டாள். ஆனால் ஸ்விச்சினை ஆன் செய்யவில்லை.

**********

இருட்டி ரொம்ப நேரம் ஆகியும் அந்த மலைப்பகுதியில் இருவரும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டு பலமணி நேரங்கள் அங்கேயே இருந்தனர். விக்டர் இருவருக்கும் அழைப்பை ஏற்படுத்தியும் இருவரின் ஃபோனும் ஸ்விச் ஆஃப் ஆகி இருந்ததால் அவனும் பதற்றமாக இருந்தான். உண்மையில் விக்டர் அப்படி ஒரு கேள்வி கேட்க ஒரு நியாயமான காரணம் இருந்தது. அவன் கில்கமேஷ் மனதை புண்படுத்த விரும்பவில்லை. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தெளிவான முடிவை எடுக்க அவனுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இப்படி புறப்பட்டு செல்வான் என்றெல்லாம் நினைக்கவில்லை. எப்படியும் டிடானியா அழைத்து வந்துவிடுவாள் என்றெண்ணியே அவன் கூலாக அமர்ந்து இருந்தான். இப்போது இருட்டியும் விட்டது.

"கில்கமேஷ், நேரமாயிடுச்சு ஜெனி கிட்ட இருந்து ஏதாச்சும் தகவல் வந்திருக்குமா என்னும் தெரியல... வா போகலாம்."

என்று டிடானியா அழைக்க அவனும் எழுந்து இருவரும் வீட்டுக்கு வர வண்டியை எடுத்தனர்.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்