தேர்தல் என்ற தேர்வினிலே தலைசிறந்த தலைமையைத் தேர்ந்து தன்னுரிமையாய் புள்ளடியிட்டு துல்லியமாய் புள்ளி வழங்கிடும் குடிமக்களின் உரிமையிது
நாளைய எம் எதிர்காலம் கறையில்லா நிறை வாழ்வாகிட நம் விரல் நுனியதனை நீலக் கறை கொண்டு நனைத்திடும் தேர்தலின் அடையாளமிது
எட்டுத் திசைகளிலும் திட்டுத் திட்டாய் படிந்திருக்கும் அகலா அரசியல் அழுக்குகளை துகிலுரித்திடும் ஆயுதமிது
வாழும் தலைமுறையின் வளமான வருங்காலத்துக்காய் தாயகம் நல்கிடும் தாய்மையின் ஓர் அங்கமிது
நாளைய எம் விடியலுக்காய் நாம் செலுத்தப் போகும் வாக்கு நயவஞ்சக அரசியல்வாதிகளுக்காய் நாமிடும் தூக்கு
வாய்மை வலிமை பெற்றால்வாக்குரிமை மதிக்கப்படும் வேட்பாளர்களின் வாய் வாக்குகளும் வையகத்தில் நிஜமாகிடும்
வேலியே பயிர் மேயும் கலியுகமிது.... வாக்கினை விலைபேசும் வஞ்சகர்களின் நஞ்சம்புகளுக்கு அஞ்சிடாது உரிமையை உய்திடச் செய்து உலகெங்கும் வெற்றியை முழங்கிடுவோம்
தழைக்கும் விலைவாசியும் முளைக்கும் இன முறுகலும் நிலைக்கா தேசம் வேண்டி அலையெனத் திரண்டிடுவோம் ஒற்றை விரல் புரட்சிக்காய்
வாக்குரிமை என்றும் எம் வாழ்வுரிமை....
கருத்துகள்
கருத்துரையிடுக