வீடியோ விளையாட்டுக்களும் விளைவுகளும்

இன்று இளம் தலைமுறையினரின் பொழுதுபோக்குகளில் ஒன்றாக காணப்படுபவை இந்த கணினி மற்றும் மொபைல் வீடியோ விளையாட்டுகள். தொழில்நுட்ப வளர்ச்சியின் பக்க விளைவுகளாகவே இவற்றின் விளைவுகளையும் நோக்க வேண்டியுள்ளது.

வீடியோ விளையாட்டுக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அவை விளையாடுபவர்களின் நடத்தை மற்றும் அறிவுசார் திறன்களில் ஏற்படுத்தும் நேர் மற்றும் எதிர்வினைகளை எடுத்துரைக்கின்றன.

வீடியோ விளையாட்டுக்கள் நல்கும் ஆதாயங்கள் குறித்து சிறிது அலசுவோம்.

1. மனதை ஒருமுகப்படுத்திக் கிரகிக்கும் திறன் மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது.

லோவா பல்கலைக்கழகத்தினால் குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மத்தியில் அவர்களில் வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவோர் மற்றும் விளையாடாதவர்கள் என இரு குழுக்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி அவர்களில் தமது நேரத்தில் 3 மணி நேரமாவது வீடியோ விளையாட்டுகளில் செலவிட்டோர் ஏனையவர்களை விட 30% வேகமாகவே தமது பணியை முடித்திருந்தனர். அவர்களுடைய வேலையில் இருந்த வழு வீதமும் 40% வீதமாக குறைவடைந்திருந்தது.

2. வேகமும், விவேகமும், தனிநபர் உள்ளறிவாற்றலும் அதிகரிக்கிறது.

வீடியோ விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் ஏனையவர்களை விட கடினமான நிலைகளில் கூட செம்மையாகவும் விரைவாகவும் தனது குறிக்கோளை அடைய வல்லவர்களாக மாறுகின்றனர். ரொசெஸ்டர் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்று இக்கூற்றினை மேலும் மெய்ப்பிக்கிறது.

3. சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளர்கிறது.

வீடியோ விளையாட்டுக்கள் என்றாலே முழுக்க முழுக்க சவால்களும் அறைகூவல்களும் நிறைந்ததே. இத்தகைய விளையாட்டுகள் மூலம் சவால்களை எதிர்கொண்டு அவற்றை வெற்றிகொள்ளும் திறன் பெருகுகிறது.

4. வருமானம் ஈட்டும் வழியாக மாறலாம்

இன்று சர்வதேச ரீதியில் கூட கணினி, மொபைல் மற்றும் ஒன்லைன் விளையாட்டுப் பந்தயங்கள் நடாத்தப்படுகின்றன. இவற்றில் பங்கேற்று வெற்றிகொள்ளும் வெற்றியாளர்கள் பெருந்தொகையான பரிசுப் பொருட்களை வெல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.

தொழில் நுட்பத்தின் மூலம் எண்ணற்ற நன்மைகளை நாம் பெற்றாலும் எதிர்வினை கொண்ட அதன் முகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு வீடியோ விளையாட்டுக்களும் விதிவிலக்கல்ல.

இன்று பல இளைஞர் யுவதிகள் இவ்விளையாட்டுக்களுக்கு அடிமையாகி வருகின்றனர். பொழுதுபோக்கு எனும் எல்லையைத் தாண்டி தமது பொன்னான நேரங்களை இவ் விளையாட்டுக்களில் தொலைக்கின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் 2018 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த சர்வதேச நோய்கள் வகைப்படுத்தல் அறிக்கையின்படி (International classification of diseases) வீடியோ விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் ஒரு மனநோயாக (mental disorder) வகைப்படுத்தியுள்ளது. இதன் பாரதூரத்தை நான் புரிய வைக்க வேண்டியதில்லை.

இவை தவிர,

1. நடத்தை மற்றும் மன ரீதியான மாற்றங்கள்.

பல நாழிகைகள் அறையொன்றில் உள்ளே கணினி விளையாட்டுக்களில் தேங்கியிருக்கும் ஒரு பிள்ளை பிற மக்களுடன் உறவாடி சமூக மயமாகும் வாய்ப்புகள் அரிது. இவை வன்முறைக் குணம் மிக்க, தன்னம்பிக்கையற்ற, ஆளுமை விருத்தி அற்ற தலைமுறையின் உருவாக்கத்திற்கு அடித்தளமமைக்கின்றன.

2. உடல் நலக் குறைபாடுகள்.

முன்பெல்லாம் விளையாட்டு என்றாலே அவை மைதானங்களில் தான். அவை உடல், உள விருத்தியை உறுதி செய்தன. ஆனால் இன்றைய தலைமுறையினர் ஒரே இடத்திலேயே அமர்ந்து வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவதனால் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். உடற்பருமன் கண்பார்வைக் குறைபாடு போன்றவை அவற்றுள் சிலவாகும்.

அதிலும் குறிப்பாக இவற்றுக்கே முன்னுரிமை அளிப்பதனால் ஏனைய கல்வி, ஆரோக்கியமான விளையாட்டுகள், சமூகமயமாக்கல் முதலிய விடயங்களில் மந்த நிலைமையை காணமுடிகிறது.

3. மூளை வளர்ச்சி குன்றுதல்

சிந்தனைத் திறன்களால் மூளையை விருத்தி செய்யும் பல வீடியோ விளையாட்டுக்கள் விருத்தி செய்யப்பட்டிருந்தாலும் வரம்பு மீறி அவற்றை விளையாடுவதால் மூளைவளர்ச்சி குறைவதாக ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

4. கண்பார்வை குறைபாடுகளும் தூக்கமின்மையும்

இன்று சின்னஞ்சிறு குழந்தைகள் கூட மூக்கு கண்ணாடி அணியும் நிலையை காண்கிறோம். தொடர்ந்து பல மணிநேரங்கள் காட்சித் திரையினைப் பார்ப்பதனால் கண்களில் குறும்பார்வை (myopia) ஏற்பட்டு விரைவில் மூக்குக் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

பொதுவாக கணினி காட்சித்திரை மற்றும் கைப்பேசிகளின் காட்சித் திரையிலிருந்து காணப்படும் நீல ஒளியானது எமது தூக்கத்திற்கு காரணமான மெலதொனின் ஹோமோனின் பரம எதிரியாகும். இக் காட்சித் திரைகளைப் பல மணிநேரங்கள் பார்ப்பது தூக்கமின்மை (insomnia) நோய்க்கு வழிசமைக்கின்றன.

வீடியோ விளையாட்டுகளின் சாதக பாதக விளைவுகளை ஓரளவு அலசியிருந்தோம். இவ்விளையாட்டுக்களை விளையாடுவது தவறல்ல. ஆனால் அவை எம்மை ஆட்கொண்டு விடலாகாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

Shaifur Rahman M. Sadhaka University of Sri Jayewardenepura 08.10.2019 விடிவெள்ளியில் பிரசுரமானது

கருத்துகள்