முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதை இஸ்லாம் தடுக்கிறதா?

இந்த ஆய்வு இன, மத பேதமின்றி ஸலாத்தை பரப்புதல் என்ற எண்ணக்கருவை புரிந்து கொள்வதற்கான ஒரு திறந்த வாசிப்பு. மாறாக இங்கு குறித்த விடயம் தொடர்பான சட்டத் தீர்ப்வை முன்வைப்பது நோக்கம் அல்ல. இந்த வாசிப்பு காலத்தின் தேவையையும் நலன்களையும் கருத்திற் கொண்டு சிறந்த தீர்வையும் நடைமுறையையும் நோக்கி நகர்வதற்கான பாதைக்கு வழிகாட்ட வேண்டும் என்றே அவாவுருகின்றோம்.

அவ்வாறே சிந்தனைக்கு வேலி கட்டாமல் பரந்த விரந்த அறிவை தேடிப் பயணிப்பதற்கும் ஆழமான வாசிப்பிற்கும் வழிகோலும் என நம்புகிறோம். மேலும் நபிகளாரின் சுன்னாவை, நபித் தோழர்களும், இஸ்லாமிய அறிஞர்களும் இமாம்களும் எவ்வாறு அணுகியுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளவதற்கும் இந்த வாசப்பு உதவியாக அமையலாம்.

இஸ்லாத்தில் சிறந்தது எது என்று நபிகாளரிடம் ஒரு மனிதன் கேட்டபோது, 'உணவளிப்பதும் உனக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் ஸலாம் சொல்வதுமாகும்' என நபியவர்கள் கூறினார்கள்' (புகாரி, முஸ்லிம்) ஸலாத்தை பரப்புவதில் இந்த ஹதீஸும் இதுபோன்ற இன்னும் பல ஹதீஸ்களும் இன மத பேதமின்றி பொதுப்படையாக அமைந்திருந்தாலும் இலங்கை முஸ்லிம் சமூகம் நீண்ட நெடுங்காலமாக ஸலாத்தை பரப்பும் தஃவா செயற்பாட்டில் தமக்குள் மாத்திரம் அதனை சுருக்கிக்கி வைத்துக் கொண்டு மூடுண்ட வாழ்வொழுங்கையே தொடர்ந்தும் கடைபிடித்து வருகிறது. இந்த வழிமுறையை கடைப்பிடிப்பதன் காரணம் என்ன என்ற தேடலின் போது பின்வரும் உண்மைகளை சட்டப்பரப்பில் காணமுடிகிறது.

அந்நியர்களுக்கு முஸ்லிம்கள் முந்திக் கொண்டு ஸலாம் சொல்வது கூடாது என்ற சிந்தனைப் போக்கு அதிகமான இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் பரவலாக காணப்படும் கருத்தாகும். இதே சிந்தனைப் போக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக் கருத்தாகவே நிலவுகிறது. அதற்கான பிரதான காரணம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நீங்கள் முந்திக் கொண்டு ஸலாம் கூற வேண்டாம் என நபிகளார் தடுத்துள்ள பிரபல்யமான ஸஹீஹான ஹதீஸாகும்.

இது இலங்கை சூழலில் மாத்திரமல்ல சர்வேதச முஸ்லிம் சமூகத்திலும் வேர் பிடித்துள்ள ஒரு சிந்தனையாகவே இருந்து வருகிறது. ஆனால் அந்நியர்கள் முஸ்லிம்கள் மீது ஸலாம் சொன்னால் பதில் கூறுவது குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அது ஆகுமானதே என்பதில் பாரிய சர்ச்கைள், முரண்பாடுகள் எதுவும் இல்லை. இந்த நிலைப்பாடே பரவலாக காணப்படும் பொதுக்கருத்தாக செல்வாக்கு செலுத்துகிறது. எனவே இலங்கை மண்ணிலும் அதே சிந்தனைப் போக்கு வேறூண்டியிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல.

ஆனால் பல இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர். அவர்கள் பிற மத சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவது ஆகுமானதே என்றும் இஸ்லாத்தை அழகிய முறையில் முன்வைத்தல் என்ற வகையில் இது கண்டிப்பான ஒரு சுன்னா என்றும் அபிபப்பிராயப்படுகின்றனர். பல்லின சமூக வாழ்வில் சகவாழ்வுக்கும் நல்லிணக்கம் பேணி வாழ்வதற்கும் இஸ்லாம் முதன்மைபடுத்துகின்ற மனிதநேய பெறுமனங்களில் ஸலாம் என்ற இஸ்லாமிய முகமன் மகத்தானது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒரு முஸ்லிம் இன, மத வேறுபாடின்றி ஸலாத்தை பரப்புவது மகத்தானதொரு ஒழுக்கமாண்பு என்ற சிந்தனையை பல ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய சட்டக் கலை வல்லுணர்கள் மற்றும் சமகலா இஸ்லாமிய அறிஞர்கள் பலர் பலமான ஆதாரங்களை முன்வைத்து தெளிவு படுத்தியுள்ளனர்.

எதிரும் புதிருமான நிலைப்பாடுகளை கொண்ட இந்தக் கருத்து வேறுபாடு இஸ்லாமிய சட்டப்பரப்பில் தோன்றுவதற்கான காரணம் என்ன? சமூகத் தொடர்பாடல் என்ற வகையில் இது குறித்த அணுகுமுறை யாது? இஸ்லாமிய சட்டப் பின்னணியில் இந்த விவகாரத்தை எப்படி நோக்குவது? போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் தேவைப்படுகிறது. அது மாத்திரமன்றி இலங்கை சூழலில் ஸலாத்தை பரப்புதல் என்ற நடைமுறை குறித்து மிகவும் ஆழமான புரிதல் தேவைப்படுகிறது.

ஏட்டில் இருக்கும் பத்வாக்கள், காலத்தின் தேவையோடு உரசுகின்ற போது சட்ட வரம்பை பேணி புதிதாக ஆய்வு செய்யும் எல்லைக்குள் அது வருகிறது. அப்போது இருப்பதை ஒப்புவிக்க முடியாது.

அல்குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் எழுந்த சட்ட மூலாதாரங்களையும், சட்டவிதிகளையும் பயன்படுத்தி மீண்டும் புதிதாக சிந்தித்து ஒரு சீராண தீர்வு நோக்கி நகர்வது துறைசார்ந்த அறிஞர்களுது கூட்டுப் பொறுப்பாகும். இத்தகைய வடிவமைப்பில் சிந்திப்பது சிறுபான்மைக்கான வாழ்வொழுங்கு குறித்த பொதுவான அடிப்படையாகும்.

நடுநிலை சமூகமாக அனுப்பப்பட்ட முஸ்லிம் உம்மத்தின் அங்கமாக வாழும் நாம், எமது தாயகமான இலங்கை மண்ணில் சிறுபான்மையாக வாழும் போது வழிகாட்டும் சமூகமாக இருப்பதுடன் ஏனைய சமூகங்களுக்கு சான்று பகரும் சமூகமாகவும் சத்தியத்தை அழிகிய முறையில் முன்வைக்கும் சமூகமாகவே வாழ வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். முஸ்லிம் சமூகம் சிறூன்மையாக வாழ முடியும் என்பதற்கான நியாயமும் இதுவே. இந்த அடிப்படை உண்மையை ஆழமாக புரிந்து கொள்ளும் போதுதான் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்தில் ஸலாத்தை பரப்புவது தவிர்க்க முடியாத ஒரு பொறுப்பு என்பதை உணர முடியுமாக இருக்கும்.

எனவே மக்கள் மத்தியில் ஸலாத்தை பரப்பாமல் மூடுண்டு வாழ்ந்தால் சகவாழ்வு மலராது. சகவாழ்வு உள்ளங்களின் திறவுகோள். சத்திய சுடர் படர்வதற்கான பாலம். இந்தப் பேருண்மையை சரிவர புரியும்; போதுதான் மேற்குறித்த கருத்து வேறுபாட்டின் யதார்த்தை உணர முடியும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இது ஒரு பிரச்சினையல்ல. ஆனால் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஸலாத்தை பரப்புவதில் இந்த மூடுண்ட போக்கு பல்லின சமூக உறவுகளில் பாரிய வெடிப்பையும் உணர்வுகளில் பெரும் பாதிப்பையும் கொண்டுவந்துள்ளது. மலர்ந்த முகத்துடன் ஸலாம் கூறி வரவேற்று இனிமையாக பழகுவது பரஸ்பர அறிமுகத்திற்கும் புரிந்துணர்வுக்குமான தோற்றுவாயாகும். அதுவே மூடப்படும் போது உறவுகளின் பாலமான சகவாழ்வும் நல்லிணக்கமும் பழுதுபடுவதில் சந்தேமில்லை.

2015ம் ஆண்டு டிஸம்பர் மாதம் இலங்கை; தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்ற மத நல்லிணக்கம் தொடர்பான கருத்தாடலின் போது கலந்து கொண்ட சங்கைக்குரிய மதகுரு ஒருவர், முஸ்லிம்கள் பிற மதத்தவர்களுக்கு ஸலாம் சொல்வதுமில்லை, பிற மத சகோதரர்கள் ஸலாம் சொன்னால் அதற்கு முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் பதில் சொல்வது போல் 'வஅலைக்கும் ஸலாம்' என்று பதில் சொல்வதுமில்லை. 'வலைக்கும்' என்று மாத்திரம் சுருக்கிக் கூறுவார்கள் என தனது நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது ஒரு துளி மாத்திரமே இது போன்று மனங்களில் வெதும்பும் ஆதங்கங்கள் ஏராளம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.

எனவே நாம் இது பற்றி சீரியஸாக சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கை சுழலில் ஸலாத்தை பரப்புவதில் ஷரீஆ ரீதியான தடைகள் உள்ளனவா? இன, மத நல்லிணக்கம் பாதிக்கும் வகையில் தானா இஸ்லாமிய முகமன் (ஸலாம்) அமைந்துள்ளது. ஸலாத்தை பரப்புவது பற்றி அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படைக் கொள்கை எப்படி அமைந்துள்ளது? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் போது தான் நடுநிலையான பாதைக்கு திரும்பி வர முடியம்.

பிற மத சகோதரர்களுக்கு முஸ்லிம்கள் முந்திக் கொண்டு ஸலாம் சொல்லும் விடயம் கடுமையான கருத்துவேறுபாடு நிலவும் ஒரு சர்ச்கைக்குரிய விவகாரம் என்பது உண்மைதான். இந்த சர்ச்சை மனித உறவுகளில் பாதிப்பை உருவாக்குகிறது. அந்நியர்களுடனான உறவுக்கு அடிப்படை சமாதானம், நல்லிணக்கம், அமைதி என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும். அதுவே ஷரீஆ வேண்டி நிற்கின்ற பெறுமானமுமாகும். மனிதனை மனிதனாக பார்ப்பதற்கு கற்றுத் தந்த இஸ்லாம் இந்த அடிப்படையை தவிற வேறு எதனைத்தான் குறிப்பிட முடியும். எனவே பிற மத சகோதரர்களுடனான உறவுகள் குறித்த எமது பர்வை பழுதுபடாமல் பாத்துக் கொள்ளதே இன்றைய முதன்மை தேவையாகும்.

பிற இன, மத, சமூகங்களுடனான தொடர்புகள், உறவுகள் குறித்து இஸ்லாமிய அணுகுமுறை இவ்வாறிருக்கும் போது ஸலாம் கூறாமல், வெட்டி விலகி பழகும் அணுகுமுறையை இஸ்லாம் ஒரு போதும் கொள்கை ரீதியாக அங்கீகரி;க்காகு என்பது தெளிவாகிறது. எனவே இந்த விடயத்தை துள்ளியமாக புரிந்து கொள்வதில் விட்ட தவறுதான் நமது கோளாறாகும்.

இன, மத வேறுபாடின்றி ஸலாத்தை பரப்பும் பண்பாடு முஸ்லிம் சமூகம் என்ற எல்லைக்குள் மாத்திரம் சுருங்கிவிடுவதால் வெளியில் உள்ள இஸ்லாத்தின் எதிரிகள் இதனை ஒரு துரும்பாக பயன்படுத்தி தமது சுயலாபங்களுக்காக பல்லின சமூகத்தின் உள்ளே பல பிளவுகளையும் உட்பூசல் களையும் தோற்றுவித்து அதில் குளிர்காய்கின்றனர்.

அவ்வாறே பல்லின சமூகமாக வாழும் போது அவ்வப்போது கசிந்துள்ள சின்ன சின்ன பிரச்சினைகளை பூதாகரமாக்குவதற்கும் ஸலாம் என்ற விவகாரமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் பல்லின சமூகத்தில் ஸலாத்தை பரப்பும் பணி சுருங்கும் போது, ஒன்றாய் இருக்கும் சமூகத்தை குட்டிச் சுவராக்கி குளிர் காயும் விசம சக்திகளுக்கு அது பல்வகையிலும் வாய்பாகவே அமைகிறது.

இனி இறுக்கமான சிந்தனை பரவலுக்கு காரணமாக அமைந்த ஹதீஸ் குறித்து நோக்குவோம். அந்நியர்களுக்கு ஸலாத்தை பரப்பும் விடயத்தில் வந்துள்ள பின்வரும் ஹதீஸ் மிகவும் பிரபல்யமானது. 'நீங்கள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முந்திக் கொண்டு ஸலாம் சொல்ல வேண்டாம். அவர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் 'வஅலைக்கும்' என பதில் சொல்லுங்கள். ஆதாரம் புகாரி.

இந்த கருத்தில் இன்னும் பல ஸஹீஹான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை தொகுத்து நோக்கும் போது குறித்த ஹதீஸை எப்படி புரிய வேண்டும் என்ற உண்மை புலனாகும்.

மேற் கூறிய ஹதீஸின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை மற்றம் அதன் பின்னணியை நோக்கும் போது நபிகளார் ஏன் அவ்வாறு ஸலாம் சொல்வதை தடுத்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். யூதர்கள் குரோதம் கொண்டு நபிகளாரையும் நபித்தோழர்களையும் இழிவு படுத்தும் வகையில் 'அஸ்ஸாம் அலைக்கும்' என கூறுவார்கள். அதன் பொருள் உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்பதே. அப்போது ரஸுல் (ஸல்) அவர்கள் 'வஅலைக்க' என மாத்திரம் பதில் கூறி கூறுவார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆயிஷா (ரழி) அவர்கள் யூதர்களைப் பார்த்து உங்களுக்குத்தான் மரணம் உண்டாகனும். மேலும் உங்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டாகட்டும் என்று கடிந்து கொண்டார்கள். உடனே நபிகளார் (ஸல்) அவர்கள் தமது அன்பு மனைவியை நோக்கி 'ஆயிஷாவே பொறுமைகாத்துக் கொள்ளுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து விவகாரங்களிலும் மென்மையைத்தான் விரும்புகிரான். வன்முறை வார்த்தைபிரயோகங்களை தவிர்ந்து கொள்ளுங்கள். 'வஅலைக்க' என மாத்திரம் நான் பதில் கூறியதை நீங்கள் கவனிக்க வில்லையா எனக் கேட்டார்கள்'

எதிரிகள் வீட்டு வாசலுக்கு வந்து உணர்வுகளை காயப்படுத்தி வம்புக்கு இழுத்த சமயத்தில் கூட இன்முகம் காட்டி பண்பாடாக நடக்க வேண்டும் என்றுதான் கருணை நபி வழிகாட்டினார்கள். இது பகை கொண்ட யூதர்கள் ஸலாம் என்ற பெயரில் திட்டும் போது முஸ்லிம்கள் அவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை நபிகளார் தடை செய்வதற்கான பின்னணயின் ஒரு வடிவமாகும். இருந்தும் கூட இங்கிதமான முறையில் பதில் கூறியமை இஸ்லாம் எடுத்தியம்பும் மகத்தான மனித நேயப் பெறுமானமாகும்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் இறைதூதர் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தை பின்வருமாறு விளக்கியுள்ளார்கள். அஹ்ஸாப் யுத்தத்தின் பின்னர் மதீனா வந்தடைந்த நபிகளார் தம்முடனான உடன்படிக்கையை முறித்து, இக்கட்டான கட்டத்தில் துரோகம் செய்த யூத கோத்திரமான பனூகுறைழாக்களின் கோட்டையை முற்றுகையிட சென்ற சமயம் 'நீங்கள் யாரும் அவர்களுக்கு (போராடும் யூதர்களுக்கு) ஸலாம் கூற முந்த வேண்டாம் என்றும் அவர்கள் உங்கள் மீது ஸலாம் சொன்னால் 'வஅலைக்கும்' என மாத்திரம் பதில் கூறும் படியும் பணித்தார்கள்' இது தான் அந்நியர்களுக்கு ஸலாம் சொல்ல முந்த வேண்டாம் என்று வந்துள்ள ஹதீஸ்களின் பின்னணியாகும். எனவே ஒரு சந்தர்ப்பத்திற்கான வழிகாட்டலை பொதுமைப்படுத்தி நோக்குவது பிழையான அணுகுமுறையாகும்.

யுத்த சூழலில் நேரடியாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் போது கூட ஸலாம் கூறும் ஒழுங்கு யாது என்பதைத்தான் இங்கும் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். நெருக்கடியான அந்த கெடுபிடி நேரத்தில் கூட பதில் ஸலாம் சொல்வதை மனித நேயமாகவே பாத்துள்ளர்கள். எனவே சமாதானமாக வாழும் பாதுகாப்பான சமூக சூழலில் முகமலர்ச்சியுடன் ஸலாம் கூறுவதை நபிகளார் தடை செய்யவில்லை.

ஒரு சமயம் நபிகளார் (ஸல்) அவர்கள் யூதர்களை யுதர்கள் என்று அறிந்த நிலையில் அவர்களுக்கு ஸலாம் கூறி பின்னர் நீண்ட நேரம் அவர்களுடன் கதைத்து விட்டுச் சென்ற ஒரு நம்பகமான செய்தியை இமாம் நஸாஈயின் ஆசிரியர் அபூ யஃலா அறிவித்துள்ளார். (முஸ்னத் அபீ யஃலா:6830)

எனவே குறிப்பிட்ட ஒரு காலக் கெடுவில் விதிவிலக்கான ஒரு சூழ்நிலையில் கடைபிடிக்க வேண்டிய ஸலாத்தின் ஒழுங்கை பொதுவான சட்டமாக நோக்கும் பேதுதான் பார்வைகள் வேறுபடுகின்றன. மக்கள் மத்தியில் இறுக்கமான சிந்தனைகள் தோன்றுகின்றன. அது ஒரு குறிப்பிட்ட கால, சூழலுக்குரியது என்பதை ஏனைய ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்கள் நபிகளாரின் நடைமுறை வாழ்வு எமக்கு தெட்டத் தெளிவாக விளக்கிய பின்னர் அந்த நபி வாக்கை பிரத்யேகமான சூழலுக்குரிய சட்டமாக நோக்குவதே இஸ்லாமிய சட்ட மரபாகும் பிற மத சகோதர்களளுக்கு ஸலாம் கூறுவது கண்ணியக் குறைவு அல்ல.

ஸலாம் என்பது முஸ்லிம்களது முகமன். அது அவர்களுக்கு மத்தியில் மாத்திரம் பரப்பப்படவேண்டிய மூடுண்ட வாழ்த்து முறை அல்ல. சகல இன, மத, குலங்களக்கும் மத்தியில் பொதுவாக பரிமாறப்படும் யாவரும் அறிந்த இஸ்லாமிய வாழ்த்துப் பிரயோகமாகவே ஸலாம் இருந்து வந்துள்ளது. நபிகளாரின் வழிகாட்டலும் அதுவே. பிற மத சகோதரர்களுக்கு ஸலாத்தை கூறுவதால் அவர்களை போற்றிப் புகழந்து அவர்களின் தரத்துக்கு மேலால் அவர்களை உயர்த்தி மதித்ததாக பொருள் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.காரணம் யூதர்கள் ஸலாம் என்ற வார்த்தையை மாற்றி உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்று கூறிய போதும் கூட ரஸுல் (ஸல்) அவர்கள் 'வஅலைக்கும்' என பதில் கூறியுள்ளார்கள். எனவே யூதர்களுக்கோ அல்லது கிறிஸ்தவர்களுக்கோ அல்லது இறை நிராகரிப்பாளர்ககளுக்கோ சமாதான சூழலில் ஸலாம் சொல்ல முந்திக் கொள்வது அல்லது அவர்களின் ஸலாத்திற்கு பதில் சொல்வது அவர்களின் தகுதிக்கு அப்பால் உயர்த்தி மெச்சிப் போற்றுவது என்ற பொருளுக்கு இடமே இல்லை.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதற்கு முந்திக் கொள்வது இறை நிராகரிப்பாளர்களை கண்ணியப்படுத்தியதாக அமையும் என சிலர் எண்ணுகின்றனர். அந்நியருடனான தொடர்புகள் குறித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை புரிவதில் வந்த தவறே இந்த எண்ணத்திற்கு காரணம். அவர்களுடன் அந்நியோனிய உறவும் தொடர்பும் உருவாகும் வகையில் தான் பரஸ்பர அறிமுகமே உள்ளது. எனவே தான் ரஸுல் (ஸல்) அவர்கள் 'அவர்களுடன் யார் ஸலாத்தை கொண்டு ஆரம்பிக்கின்றானோ அவன் தான் மக்களிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமுள்ளவன்' என்று கூறியுள்ளார்கள். கண்ணியமானவன் யார் என்றால் பிறருக்கு மத வேறுபாடின்றி ஸலாம் கூறுபவனே என நபிகளார் விளக்கியுள்ளார்கள்.

இன, மத வேறுபாடின்றி ஸலாத்தை பரப்புவது பொதுவான ஒரு சுன்னா என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

ஸுரதுன் நூரில் நீங்கள் வீடுகளுக்கு சென்றால் ஸலாம் கூறி நுளையுங்கள் என்று வழிகாட்டும் போது 'வீடுகள்' என்றே குறிப்பிடுகின்றது. மாறாக முஸ்லிம் வீடு என்றும் காபிர் வீடு என்றும் பாகுபடுத்திப் பேசவில்லை.

இமாம் தபரியவர்கள் ஸுரா இப்ராஹீமின் வசனமொன்றுக்கு விளக்கம் சொல்லும் போது 'நீங்கள் யூத வீடுகளுக்குள் நுளைந்தால் 'அஸ்லாமு அலைக்கும்' என்று சொல்லுங்கள். அங்கு யாரும் இல்லையென்றால் 'அஸ்ஸலாமு அலைனா' என உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளர்கள்.

ஸுரா கஸஸின் 55 வசனத்தில் எங்களுடைய செயல் எங்களுக்கு. உங்களுடைய செயல் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று நம்பிக்கை கொண்டோர் பதில் கூறுவார்கள் என அல்குர்ஆன் கூறுகிறது. இங்கு முஸ்லிம்கள் நிராகரிப்பார்களுக்கு ஸலாம் கூறியதை அல்லாஹுத் தஆலா உயர்ந்த பண்பாடாகவே சிலாகித்து கூறியுள்ளான்.

இப்ராஹீம் (அலை) தனது தந்தையைப் பார்த்து உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறினர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை ஒரு காபிர் என்பது தெளிவான உண்மையாகும்.

மேலும் முஃமின்களின் பண்புகள் குறித்து ஸுரா புர்கானின் இறுதிப்பகுதி பேசுகிறத. அதில் முஃமின்கள் அறிவீனர்களுடன் உரையாட நேர்ந்தால் அறிவீனர்களைப் பார்த்து ஸலாம் என்று கூறுவதை முஃமின்களின் நற்பண்பாகவே எடுத்தியம்புகிறது.

பல்லின சமூகத்தின் உறவுக்கான அடிப்படைகளை அல்-குர்ஆன் முன்வைக்கும் போது பரஸ்பர அறிமுகம் முக்கிய ஒரு கூறாகவே பிரஸ்தாபிக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கே உரிய ஸலாம் என்ற வாழ்த்தைக் கொண்டுதான் அந்த அறிமுகத்தை மேற்கொள்ள வேண்டும். அது சகவாழ்வக்கு வழிவகுக்கும். சகவாழ்வு நாளைய நல்லிணக்கத்திற்கு பாதை காட்டும். நல்லிணக்க சூழல் இஸ்லாம் என்ற மாபெரும் அருளை சுவைக்க வாய்பாக அமையும். அந்த வகையில் தான் ஸலாத்தை பரப்புவது தஃவா ரீதியான ஒரு தர்மீக பொறுப்பு என இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே இன, மத வேறுபாடின்றி பிறருக்கு ஸலாம் சொல்வது மனித வாழ்வின் இயல்பான ஒரு கருமம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விதிவிலக்கான யுத்த சூழலைத் தவிர. அந்த விதிவிலக்கான போராட்ட சூழல் நிலவும் போது மாத்திரம் ரஸுல் (ஸல்) அவர்கள் தவிர்ந்து கொள்ளுமாறு கூறிய ஹதீஸ் அமுலுக்கு வரும்.

சுன்னாவில் ஸலாத்தை பரப்புவது குறித்து வந்துள்ள ஹதீஸ்கள் :

'தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுங்கள்' (புகாரி, முஸ்லிம்) இந்த ஹதீஸ் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத சகலரையும் குறிக்கும். ஏற்கனவே குறிப்பட்டது போல் குறிப்பிட்ட யுத்த சூழலில் இஸ்லாத்திற்கு எதிராக போராடும் குழுவினருக்கு மாத்திரம் ஸலாம் கூறுவதைத்தான் நபிகளார் தடுத்துள்ளார்கள்.

'அல்லாஹுத்தஆலா முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களை படைத்து விட்டு ஆதமை நோக்கி அங்கே அமர்ந்திருக்கின்ற மலக்குமார்களுக்கு ஸலாம் கூறுமாறும் பின்னர் அவர்கள் உங்களுக்கு ஸலாம் கூறுவதை அவதானிக்கு மாறும், அவர்கள் கூறுவது தான் உமதும் உமது பரம்பரையினருக்குமான (ஸலாம்) வாழ்த்தாகும் என்றும் கூறினான். அவர் அங்கு வந்து 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றார்கள். அதற்கு மலக்குமார்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினர்கள்' (புகாரி-முஸ்லிம்)

எனவே முதல் மனிதன் ஆதமுக்கும் அவர்களின் சந்ததியினர்களுக்குமான இஸ்லாமிய வாழ்த்து இதுதான். ஆதமின் சந்ததியில் முஸ்லிம், காபிர் இருப்பது தெரிந்ததே. இருந்தும் அனைவருக்கும் பொதுவான வாழ்த்தாகவே அல்லாஹ் இதனைக் கற்றுக் கொடுத்தான். எனவே மனிதர்கள் யாவரும் சகோதரர்கள. சகோதரர்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதில் வேறுபாடு தேவையில்லை என்பதையே அல்லாஹ் இங்கு கற்றுத் தருகின்றான். 'மனிதர்கள் யாவரும் சகோதரர்களே' என்பது ஒரு நபி மொழியாகும்.

'ஸலத்தை பரப்புங்கள்' என்று ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. அவை முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரம் என வரையரை செய்யவில்லை. பொதுவாக அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் என்றே வந்துள்ளன.

பிற மத சகோதரர்களுக்கு ஸலாம் சொல்லுவதில் ஸலபுஸ் ஸாலிஹீன்களது நடைமுறை:

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது பற்றி குறிப்பிடும் போது ஸலாம் கூறுவது தோழமை பாராட்டுவதின் உரிமை எனக் கூரியுள்ளார்கள் (அஹ்காமுல் குர்ஆன், ஜஸ்ஸாஸ் (ரஹ்), பாகம் 5, பக்கம் 315) அதாவது ஒரு தோழன் அவன் யாராகவும் இருக்கலாம் அவன் மீது ஸலாம் சொல்வது கடமை.

அபு உமாமா (ரழி), அபூ தர்தா (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு மஸ்ஊத், இப்னு உமர் (ரழி) கதாதா (ரழி), இப்னு முஹய்ரீஸ், உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்ற இன்னும் பல ஸஹாபாக்களும் தாபியீன்களும் பிற மத சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவதுடன் அது நல்லதொரு சுன்னா என்பதையும் விளக்கியுள்ளர்கள்.

அந்த வரிசையில் இமாம் ஷஅபி, ஸுப்யான் பின் உயைனா, இமாம் அவ்தாஈ, இமாம் மாவர்தி போன்ற இன்னும் பலருடைய கருத்தும் அனைவருக்கும் ஸலாம் கூறுவது ஆகமானதே என்பதாகும். நான்கு மத்ஹபை சார்ந்த பல புகஹாக்களும் இந்த கருத்தை ஆதரித்தே கருத்து வெளியிட்டுள்ளனர்.

நவீன கால இஸ்லாமிய அறிஞர்களான பலரும் மேற் கூறிய விதிவிலக்குடன் ஸலாத்தை பரப்புவது தஃவா என்றவகையில் முஸ்லிம்கள் மீதுள்ள பொறுப்பு என்ற சிந்தனை முன்வைத்துள்ளனர்.

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் அந்நியர்களுக்கு ஸலாம் கூறுவது ஆகும் என்றே கூறியுள்ளார். மேலும் இந்தக் கருத்தை இப்னு அப்பாஸ் (ரழி), அபூ உமாமா (ரழி), இப்னு முஹைரீஸ் (ரழி) ஆகியோர் கூறியுள்ளனர் என்றும் ஷாபி மத்ஹப் சார்ந்த இமாம்களின் ஒரு கருத்தும் இதுவே எனவும் அவர் தனது ஹதீஸ் விளக்கவுரை நூலில் குறிப்பிட்டுள்ளர்.

பிற மத சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவது சம்பந்தமாக இமாம் அவ்ஸாஈயிடம் வினவியபோது 'நீர் ஸலாம் சொன்னால் உனக்கு முன்னர் ஸலபுஸ் ஸாலிஹீன்களும் ஸலாம் கூறித்தான் இருக்கின்றார்கள். நீர் ஸலாம் சொல்வதை தவிர்ந்து கொண்டால் உம் முன்னோரான ஸாலிஹீன்களும் தவிர்ந்துள்ளார்கள்' என்றே பதில் கூறினார்கள்.

எனவே இது நெகிழ்ந்து கொடுக்கும் விவகராம். இதில் கருத்து முரண்பாடு உண்டு. தான் பிடித்தது தான் சிரியானது எனக் பிடிவாதமாக இருக்கத் தேவையில்லை என்பதே இமாம் அவ்தாஈ சூட்சுமமாக குறிப்பிடும் கருத்தாகும்.

முஸ்லிம்கள், யூதர்கள், இணைவைப்பாளர்கள், சிலை வணங்களிள் எனப் பலரும் உள்ள ஒரு மஜ்லிஸை இறை தூர் ஸல் அவர்கள் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் கூறியாதாக ஸைத் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதி போன்ற ஸஹீஹான கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

அபூ உமாமா (ரழி) அவர்கள் முஸ்லிம், கிரிஸ்தவர்கள், யூதர்கள்;, பெரியோர், சிறியோர் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் ஸலாம் சொல்லுவார்கள். அதற்கான நியாயத்தை அவர் விளக்கும் போது அது நபி வழி என்ற சிந்தனையைத்தான் முன்வைத்தார்கள். (தபராணி).

ஸஹாபாக்களின் இந்நடைமுறையானது ஆழ்ந்து நோக்கப்படவேண்டிய விடயமாகும். ஸலாம் கூறுவதை இறை தூதர் (ஸல்) ஏன் தடுத்தார்? அதற்கான பின்னணி யாது? என்பதை மிகச்சரியாக புரிந்ததனால் தான் அவர்கள் சகல மனிதர்களுக்கும் ஸலாம் கூறியுள்ளார்கள்.

ஸஹாபாக்கள் ஸலாத்தை பரப்புவது பற்றி வந்த ஹதீஸின் இலக்கை நோக்கியுள்ளார்கள். யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஸலாத்தை கொண்டு நீங்கள் ஆரம்பிக்க வேண்டாம் என்பதை குறிப்பிட்ட பேராட்ட சூழலில் மாத்திரம் தடுக்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஸஹாபாக்களின் அந்த அணுகுமுறையை அடியொட்டியே பல புகஹாக்கள் இன, மத வேறுபாடின்றி பொதுவாக ஸலாத்தை பரப்புவது ஒரு சுன்னா என நோக்கியுள்ளார்கள்.

உண்மையில் இஸ்லாமிய வாழ்த்தான ஸலாத்தை கூறி பரஸ்பரம் அறிமுகமாவது சகவாழ்வுக்கான தோற்றுவாய். பல்லின சமூகத்தில் சகவாழ்வு நாளைய நல்லிணக்கத்திற்கான பாதை. எனவே இலங்கைக் சூழலில் இன, மத வேறுபாடின்றி ஸலாத்தை பரப்புவது முஸ்லிம்கள் மீதுள்ள பொறுப்பாகும்.

அந்த வகையில் பிற மத சகோதரர்களுக்கு ஸலாம் சொல்வது குறித்து இலங்கை முஸ்லிம் சமூகம் ஆழமாக புரிந்து, தெளிவாக விளங்கி அறிவார்ந்த முறையில் நடைமுறைக்கு கொண்டுவருவது காலத்தின் அவசியத் தேவையாக காணப்படுகிறது.

பல்லின சமூகத்தில் வாழும் நாம் எமது உறவுகளையும் தொடர்புகளையும் பலமாக கட்டியெழுப்புவதற்கு பரஸ்பர அறிமுகமும் நலன்களை முதன்மைபடுத்தி செயற்படுவதும் இன்றியமையாதது. இன, மத வேறுபாடு பார்க்காமல் அடுத்தவர்களுக்கு ஸலாம் சொல்லுவது அதில் முதலிடம் பெறுகிறது.

ஷரீஆவில் அதற்கு எந்த தடையும் இல்லை என்பதையே வரலாறு புகட்டும் பாடமாக உள்ளது. மிஞ்சிப் போனால் இது ஒரு கருத்துவேறுபாடுள்ள விடயம். கருத்து வேறுபாடுள்ள ஒரு விடயம் வெறுக்கத்தக்க ஒரு பாவமும் அல்ல. தடுக்கப்பட வேண்டிய தீமையும் அல்ல. எனவே இது குறித்து விரிந்த உள்ளத்துடன் நோக்கப் பழகுவேத நடுநிலைச் சிந்தனையை சுமந்துள்ள முஸ்லிம்களின் உயர்ந்த பண்பாடாகும்.

முஹம்மத் பகீஹுத்தீன்

கருத்துகள்