லேபலிங் தியரி ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்

சமூகத்தின் பிறழ்வு நடத்தைக்கு காரணங்களை ஆராயும் போது பல விடயங்கள் சமூகவியல் வியூகத்தில் பட்டியலாகின்றன. அவற்றில் "அடையாளமிடல் / முத்திரையிடல்" என்பதும் சமூக பிறழ்வு நடத்தைக்கு காரணம் எனும் விடயத்தை குறிப்பிடுவதே Labeling Theory ஆகும்.

1960 களில் ஹோவர்ட் பெக்கரின் படைப்புகளில் தோன்றிய , லேபிளிங் கோட்பாடு மக்களின் நடத்தை ஏன் சமூக விதிமுறைகளுடன் மோதுகிறது என்பதை விளக்குகிறது. அதாவது ஒருவருக்கு சமூகம் கொடுக்கும் அடையாளம் அவரை அவ்வடையாளத்திற்கு உரியவராகவே மாற்றுகிறது என்கிறது இக்கோட்பாடு. உதாரணமாக , தீவிர கும்பலுடன் அடிக்கடி நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு இளைஞன் ஒரு தீவிர கும்பல் உறுப்பினராக முத்திரை குத்தப்படலாம். அதன்படி, டீனேஜர் ஒரு தீவிர கும்பல் உறுப்பினரை போல நடந்துகொள்ள ஆரம்பிக்கலாம் அல்லது அதில் ஒருவராக மாறக்கூடும்.

அதாவது மனிதன் மீது விதிக்கப்படும் முத்திரையிடல் அவனில் அவ்வாறான நடத்தையினைத் தோற்றுவிக்கும் என்பதே இக்கோட்பாட்டின் சாராம்சமாகும். இவற்றிற்கு மேலதிகமாக சில ஆய்வுகள் சமூக அந்தஸ்து குறைந்தவர்கள் என்று முத்திரையிடப்பட்டவர்கள் பிறழ்வு நடத்தையாளர்களாகவும் சமூக விழுமியங்களுக்கு விரோதமானவர்களாகுவதற்கும் சந்தர்ப்பம் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இந்த முத்திரையிடல் தொடர்பான சமய வழிகாட்டலை நோக்குகின்ற சமயத்தில் குறித்த சில நபிகளாரின் வாழ்வியல் பாடங்களைச் சுட்டிக்காட்டலாம்.

அவற்றில் மிகவும் பிரபல்யமான ஒரு சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் நடைபெற்றது. நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரழி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டு காலம் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரழி) என்ற நபித்தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசி விடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனையடைந்த பிலால் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் சென்று முறையிட்டார். நபியவர்கள் அபூதர் (ரழி) அவர்களை அழைத்து , உங்களிடம் அறியாமைக்கால பழக்கம் இருக்கிறது என்று கடுமையாகக் கடிந்து கொண்டார்கள். (புகாரி : 30)

நபிகளாரின் வாழ்வியலை எடுத்துக்கூறும் இந்த சம்பவமானது 'சமூக அந்தஸ்து ஒரு மனித அடையாளமாகாது' என்பதைத் தெளிவு படுத்துகிறது. இதுவே நபிகளார் அங்கு போதித்த படிப்பினையாகும்.

இது போன்றே அந்த அழகிய வாழ்வியலைக் காட்டும் மற்றுமொரு நிகழ்வுள்ளது.

"அஸ்த்" குலத்தின் ஒரு கிளையான "ஃகாமித்" கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபியவர்களிடம் வந்து , தான் விபச்சாரம் செய்து தற்போது கர்ப்பமுற்றிருப்பதாகக் கூறி தனக்கு தண்டனை வழங்குமாறு வேண்டுகிறார். அப்பெண் விபச்சாரம் செய்தமை உறுதியாகியதால் , குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தண்டணையைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். பின்னர் விபச்சாரத்துக்குரிய தண்டணையாக கல்லெறிந்து கொலை செய்யப்படுகிறார். அச்சந்தர்ப்பத்தில் மக்கள் கல்லெறியும் போது, அந்த பெண்ணின் இரத்தம் நபித்தோழர்களில் ஒருவரான ஹாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் முகத்தில் தெறிக்கிறது. அதற்கு அந்த ஸஹாபி கோபத்தில் ஏசி விடுகிறார். அந்த இரத்தத்தை விபச்சாரியின் இரத்தம் என அவர் அடையாளமிடுகிறார்.

இதை அவதானித்த நபியவர்கள் அந்த ஸஹாபியிடம், அல்லாஹ்வின் மன்னிப்பு பாவங்களை நீக்கிவிடும் , அந்தத் தண்டனை மூலம் அவர் பரிசுத்தமானவராகி விட்டார் என்று கூறினார். அதாவது இங்கு நபிகளார் போதித்த பாடம் 'முத்திரையிடல் மற்றும் தீர்ப்புக் கூறும் அதிகாரம் மனிதனுக்கு கிடையாது, அது இறைவனது பணியாகும் என்பதே'. பூரணமாக உறுதியாக குற்றமாயினும் அதற்கு முத்திரையிடுவது தவறாகும் என்பதையே இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

இவ்விரு சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து இரு பிரதானமான படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். (லேபளிஙிற்கு ஆதரிக்காத இது போன்ற பல வரலாற்று ஆதாரங்களை , நபியவர்களாரின் வாழ்வியலில் பார்க்கலாம்.)

  1. சமூகம் சார்ந்த அந்தஸ்து குறைவினை அடையாளம் காட்டுவது இஸ்லாத்திற்கு எதிர்ப்பதமான ஜாஹிலியத் ஆகும்.
  2. தவறுகளை அடிப்படையாகக்கொண்டு குறித்த நபர்களை முத்திரையிடுவது நபியவர்களினால் தடுக்கப்பட்ட காரியமாகும்.

இப்போது நமது பொது அவதானத்தை சற்று மீட்டிப் பார்க்க வேண்டும். அடையாளமிடல் மற்றும் முத்திரை குத்துதல் செயன்முறை நமது சமூகத்தில் தவிர்ப்பதற்கில்லை. குற்றங்களை அடிப்படையாகக்கொண்டு குடிகாரன், விபச்சாரி, வட்டிக்காரன் என்று பட்டம் சூட்டும் பழக்கம் இன்றைய நமது ஊர்களில் தொடர்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். இது நாளைய நமது தெருக்களில் கூச்சமற்ற விபச்சாரிகளையும், நமது பொது இடங்களில் வெட்கமற்ற குடிகாரர்களையும், கௌரவ தலைமைகளில் பிறர் சொத்தை சுரண்டுபவர்களை உருவாக்குவதற்கான ஆரம்ப நிலை என்பதை எவரும் உணர்வதாக இல்லை.

மேலும் சமூக தரத்தினை அடிப்படையாகக்கொண்ட அடையாளமிடல் நமது பாடசாலை முதல் பள்ளிவாசல் வரையும் தொடர்ந்துள்ளன. பாடசாலையிலே படிக்காத மாணவன் என்ற முத்திரையிடல் சமூக விரோதிகளை நம் பள்ளிகளில் உருவாக்கும் ஆரம்ப நிலையாகும். மேலும் பாமரர்கள், உள நோயாளர்கள், கருப்பினர்கள் என்ற முத்திரையிடல் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

அதிலும் நமது சமூகத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு அடிப்படையான முத்திரையிடல் முறைமையினை இப்பதிவில் சற்று கூறிவிடுவது ஏற்றமானதாக இருக்கும் என நினைக்கிறேன். நம்மில் 'மௌலா முஸ்லிம்' என்ற ஒரு லேபளிங் உள்ளது. இந்தப் பெயர் முறைமையே இஸ்லாமிய அடிப்படையிலேயே இல்லாத ஒரு முறையாகும். இஸ்லாத்திற்கு புதிதாக வந்தவர்களைப் பிரித்து நோக்கும் பண்பாடு, அவர்களுடன் திருமண உறவுகளை மேற்கொள்ளாமை மற்றும் பள்ளிவாசல் பதவிகளில் அவர்களை நியமிக்காமை போன்ற முத்திரையிடல் நடத்தை நமது இஸ்லாமிய உயரிய பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் நம்மிடையே இலையோடியுள்ளது. இந்த துச்ச நடத்தைக்கு அங்கீகாரம் வழங்குவதில் பள்ளிவாசல் மற்றும் ஆன்மீக தலைமைகளின் மறைமுகமான பங்களிப்பும் இல்லாமல் இல்லை. இக்குழுமத்தின் மீதான முத்திரையிடல் நம்மில் ஒரு கீழ்த்தர வர்க்கத் தோற்றத்தை மெதுவாக ஆரம்பித்துள்ளது. தலைமுறைகள் மாறும்போது சமூக விரோதிகள் மற்றும் சமூக பாவிகளின் உருவாக்கத்திற்கு இந்த அடையாளமிடல் வழிவகுக்கிறது.

இப்படி பல்வேறுவிதமான லேபளிங் நம்மில் ஒன்றித்துள்ளன. அதற்கு மரபு, கலாச்சாரம் என்று நீங்கள் கூறினால் அதற்கு நான் கூறுவது ஜாஹிலியத் என்றே. இதுவே குறித்த ஹதீஸ் தொடர்பான எனது புரிதலாகும். நமது முத்திரையிடல் வியாதி சமூக வியாதிகளை விசாலமாக்கி கொண்டுள்ளன என்ற புரிதல் பொதுத் தகவலாக பலதரப்பினரும் உணர வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.

Fazlan A Cader

கருத்துகள்