Taare Zameen Par - Psychological Review

இன்றைய கால ஓட்டத்தில் சினிமா கலையியல் அம்சங்களில் உளவியல் துறையினது உடன்சேர்ப்பும் இணைப்பும் பரவலான அவதானமாகும். அவற்றில் உதாரணமாக பின்வரும் திரைப்படங்களை அறிமுகம் செய்யலாம்.

1. Drops of Joy (2014) 2. To Be and to Have (2002) 3. La educación prohibida (2012) 4. Children of the Sun (2007) 5. The Beginning of Life (2016) 6. Please Vote for Me (2007) 7. Mona Lisa Smile (2003) 8. Buddha Collapsed Out of Shame (2007) 9. Blackboards (2000) 10. Kasaba (1997) 11. Anniyan (2005) 12. Kaadhal Kondein (2003) 13. “28 Days” (2000) 14.No Smoking (2007 film) 15. Phobia (2016 film) 16. 18 Vayasu (2002)

இவற்றில் குறிப்பாக கல்வி உளவியல் சார்ந்த திரைப்படங்களில் திரைப்பட வரலாற்றில் அதிக வரவேற்பை பெற்றுள்ள திரைப்பாடமாக இங்கு அறிமுகத்திற்காக தெரிவு செய்துள்ள திரைப்படம் Taare Zameen Par எனும் திரைப்படமாகும்.

"தாரே ஸமீன் பார்" ஒரு அறிமுகம்.

இது அமீர் கான் இயக்கத்திலும் அவரது நடிப்பிலும் வெளியாகிய கல்வி உளவியலை அடிப்படையாக கொண்டு அமீர் கான் புரொடெக்ஷன் தயாரித்து ஹிந்தி மொழியில் (2007) யூ டீவி என்டயிமென்டஸ் இனால் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படமாகும். இது Amole Gupte என்ற கதையாசிரியரின் கதையினை Darsheel Safary என்கின்ற சிறுவனையும் Aamir Khan யும் பிரதானமான பாத்திரங்களாக வைத்து வடிமைக்கப்பட்ட கதையாகும்.

ஆரம்பத்தில் அதீதமாக கல்வியில் பின்னடைவாகவும் , அன்றாட வாழ்வியல் நடத்தையில் பிறழ்வு நடத்தையுடனும் செயல்படும் இஷான் எனும் சிறுவர் கதாப்பாத்திரத்துடன் இக்கதை இயங்குகிறது. அதில் குறித்த சிறுவனின் கதாப்பாத்திரம் கல்வியில் பின்னடைவுடன் இருப்பதும் மற்றும் சமூக சூழலில் ஒரு விதமான துடின நடத்தையுடன் இருப்பதும் ஆசிரியர், பெற்றோரினால் அவன் பற்றிய தாழ்ந்த மதிப்பீட்டை உண்டுன்னும் படியாக கதை நகரவே குறித்த ஒரு நடத்தையின் பின்னர் கண்டிப்பான தந்தையினால் இஷான் விடுதியில் தங்கி படிக்கும் படி ஒரு புதிய பாடசாலையில் சேர்க்கப்படுகிறார்.

அதுவரையில் ஒரு விதமான சேட்டைகரமான பிள்ளையாக கதை நகர்த்தப்பட்டு, பின்னர் உணர்வுகரமானதாக கதையாசிரியரினால் கதை நகர்த்தப்படுகிறது. இதில் இஷான் விடுதி வாழ்வில் சமூக மயமாக முடியாமல் அவதியுறுவதும், தனது கவலையை பல்வேறு கட்டங்களில் வெளிக்காட்டுவதும் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு உள்ளார்ந்த உரைத்தலை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. தனிமை,

ஆர்வமின்மை, விரக்தி, அவதானித்தல் குறைபாடு, கல்வி பின்னடைவு போன்ற குணங்குறிகளுடன் காணப்படும் இஷானின் கல்லூரிக்கு ஒரு கவர்ச்சிகரமான ஆசிரியர் வருகிறார். அதுதான் கதாநாயகன் அமீர்கான். கற்பித்தலில் புதிய அணுகுமுறைகொண்ட இளைஞராக அவர் காணப்படுகின்றார். முதல் நாளே தனது விசேட திறமையினால் எல்லாச் சிறார்களையும் கவர்ந்து விடுகிறார்.

இஷான் மட்டும் அவருடன் ஒன்ற மறுக்கிறான். ஓவியமும் வரையாமல் ஒதுங்கிச் செல்லும் அவனுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது எனப் புரிந்து கொள்ளும் அவர், அவனுடைய புத்தகங்களை பார்க்கிறார். அவனுக்குக் கற்றல் குறைபாடு (Dyslexia) இருப்பதினை புரிந்துகொண்டு, அவனுக்கு இருக்கும் வேறு திறமைகளைக் கண்டுபிடித்து அந்த வழியில் அவனை ஊக்குவித்து, அவனுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் களையவேண்டும் என்பதினை உணர்ந்து கொள்கிறார். அவனுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்தித்து, அங்கு அவன் வரைந்து வைத்திருந்த படங்களைப் பார்த்து, அவனிடம் இருக்கும் ஓவியம் வரையும் அசாத்தியத் திறனைக் கண்டுகொள்கிறார். ஓவியத்தினைத் தூண்டுதலாக வைத்து அவனது மையப் பிரச்னையிலிருந்து அவனை மீட்க முயல்கின்றார்.

அதன் பின் இஷான், நிகும்ப்புடன் நட்பாகிவிடுகிறான். இஷானுக்கு நம்பிக்கை, ஒளிக்கீற்றாக சுடர்விடுகிறது. தாழ்வுமனப்பான்மை மெல்லமெல்லப் போகின்றது. நிகும்ப் தலைமை ஆசிரியரின் அனுமதியைப் பெற்று, எல்லாப் பாடங்களையும் அவனுக்குத் தனியே கற்பிக்கிறார். அவனால் இப்பொழுது ஓரளவு எழுதவும் வாசிக்கவும் முடிகின்றது. ஒருகட்டத்தில் முழுவதுமாக முன்னேறிவிடுகின்றான்.

பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் திறந்த ஓவியப் போட்டி ஒன்றை நடாத்துகிறார் நிகும்ப்; அதில் இஷானுக்கு முதலிடம் கிடைக்கிறது. பாடசாலையின் ஆண்டு இதழில் முகப்பு அட்டையில் அவன் வரைந்த படம் அச்சாகின்றது. விடுமுறைக்காக அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வந்த அவனின் பெற்றோர், அவனைப் பற்றி ஆசிரியர்கள் பெருமையாகப் பேச மிகுந்த ஆச்சரியப்படுகின்றனர். மீண்டும் இஷானை அழைத்துச் செல்ல முற்பட, அவனோ மறுத்து திரும்பி நிகும்பிடம் ஓடிவர, அவர் அவனைத் தூக்கிக் கொள்ள, நெகிழ்ச்சியாக படம் முடிவைகின்றது.

குறித்த இக்கதையில் ஒரு கற்றல் குறைபாடு (learning disorder ) இனை மையமாக வைத்து கதை வடிவமைக்கப்பட்டமையாலும் மற்றும் அதற்கான தீர்வுகளை ஏற்படுத்த கதாநாயகன் பல்வேறுபட்ட உளவியல் சார் இடையீடுகளை (psychological intervention) மேற்கொள்வதன் மூலமும் இக்கதையினை கல்வி உளவியல்சார் திரையாக அடையாளமிடப்படுவதுடன் சில உளவியல் சார்ந்த அணுகுமுறைகளை இக்கதையில் இருந்து எழுமாறாக அடையாளம் காட்ட முயற்சிக்கிறேன்.

கற்றல் குறைபாடு தொடர்பான பார்வை.

இக்கதையில் இஷான் எனும் சிறுவர் பாத்திரம் Dyslexia எனும் கற்றல் குறைபாட்டை உடையதாக இனம்காட்டப்படுகிறது. இக்குறைபாடானது வாசிப்பதற்கு கடினம் மற்றும் பேச்சின் சத்தத்தை அடையாளம் காண்பதில் எற்படும் கடினத்தன்மை மற்றும் எழுத்துக்கள், சொற்களை அடையாளம் காண்பதில் கடினம் போன்ற மூளையில் மொழி செயன்முறையில் ஏற்படும் பிரச்சினையாகும். இக்குறைபாட்டினை விஷேட கல்வி வழங்குவதன் மூலமும் கல்வி சார் உளவளத்துணை வழங்குவதன் மூலமும் மற்றும் உணர்வு அடிப்படையிலான உறவின் ஒத்துழைப்புடனும் சீரமைக்கலாம் என உளவியல் சார் சிகிச்சை தொடர்பான பிரசுரித்தல் my clinic எனும் இனைய தளம் அடையாமிட்டுள்ளது.

இங்கு இக்கற்றல் குறைபாட்டால் குறித்த மாணவன் சுய எண்ணக்கரு வீழ்ச்சி அடைந்தவனாக அடையாளம் காட்டப்படுவதுடன் பெற்றோரின் பிழையான அணுகுமுறையும் ஆசிரியர்களின் கண்டிப்பான கற்பித்தல் நடத்தையும் மேலும் குறித்த மாணவனை உளச்சோர்வு நிலைக்கு உள்ளாக்கியுள்ளமையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை மையமாக தீர்வினை ஏற்படுத்த கதாநாயகனின் இடையீடுகளை இங்கு பின்வருமாறு அடையாளம் காட்டலாம்.

1) உளவியல் சுட்டிக்காட்டும் பிரதானமான ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்ற விதியாகும். இதனையே கால் றொஜேஸ் என்ற உளவியலாளர் 'ஒவ்வொருவருக்கும் தனித்துவமானதும் , இரகசியமானதுமான உலகம் உள்ளது' என அடையாளம் காட்டுகிறார். இதுவே இந்த திரைப்படத்தின் மையப்பொருளுமாகும். இத்திரைப்படம் ' அனைத்து சிறுவர்களும் சிறப்பானவர்கள்' என்ற தொனிப்பொருளிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறையில் கதாநாயகன் கல்வியில் பின்னடைவுகள் காணப்படும் மாணவன் மீது விசேட கவனம் செலுத்துவதும், குறித்த மாணவனது புத்தகத்தை விசேடமாக அவதானிப்பதும் மேற் கூறிய கால் றொஜேஸின் கூற்றிற்கு ஆதாரமூட்டுவதாக திரையில் அமைந்துள்ளது.

2) ஆரம்பமாக கதாநயகனின் அறிமுகம் ஒரு கற்றல் சார்ந்த பாரிய உளவியல் யதார்த்தத்தினை சுட்டிக்காட்டுகிறது. கதாநாயகன் ஒரு நகைச்சுவை பாணியுடனும் சுவாரஸ்யமான தோற்றத்துடனும் திரையில் மாணவர்கள் மத்தியில் அறிமுகமாகிறார். இதன் மூலம் உறவை கட்டியெழுப்பும் செயன்முறை ஆசிரியர் என்ற ஸ்தானத்தில் இருந்து மாணவர்களது உளவியல் நிலைப்பாடு தொடர்பான புரிந்துணர்வுடன் நடைபெற்றமை ஊர்ஜிதமாகிறது. இதனையே கல்வி தத்துவங்கள் அதீதமாக வலியுறுத்துகிறது என்பதனை ஆசிரியர்கள் புரிந்து மாணவர் , ஆசிரியர் சுதந்திரம் பாதிக்காத விதத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்பது அவசியமானதாகும்.

3) உளவியல் சிகிச்சைகளின் போது கையாளப்படும் ஒரு வழிமுறைதான் உளக்கல்வி (psycho education) வழங்கும் முறையாகும். இதனை ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மத்தியில் நகைச்சுவைகரமாக கதை கூறுவதன் மூலம் இஷான் எனும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உளக்கல்வி வழங்குகிறார். மேலும் பொற்றோர்களை சந்தித்து அவர்களது பாணியில் அவர்களுக்கு தன் பிள்ளையின் நிலை தொடர்பான உளக்கல்வி வழங்குகின்றமை அவதானிக்கத்தக்கது.

4). கதையில் ஆசிரியர் ஒரு சமயம் வகுப்பறையில் குறித்த பிரச்சினையுடன் இருந்து சாதித்த சாதனையாளர்களை வித்தியாசமாக அடையாளம் காட்டுகிறார். குறித்த பிரச்சினையினை அறிமுகம் செய்த பின் இப்படியெல்லாம் ஒருவனுக்குத் தோன்றியிருக்கு; அவன் யார்? என்று கேட்க, இஷான் தன்னைத்தான் கூறுகிறார் என்றெண்ணி திகைக்கிறான். முதலில் ஐன்ஸ்டைனின் படத்தைக் காண்பிக்கிறார். ஆச்சரியத்துடன் அவனிருக்க – வரிசையாக டாவின்சி, எடிசன், அபிஷேக்பச்சன் போன்ற பிரபலங்களின் படங்களைக் காட்டுகிறார். அவனது தாழ்வு மனப்பான்மையை நீக்க அவர் கையாளும் உத்திகள், அற்புதமாக காட்சிப் படிமங்களாகின்றன. இது உளவியல் சிகிச்சைகளில் கையாளப்படும் உதாரணம் கூறல் (modelling ) வழிமுறைக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

5) உளவியல் சார்ந்த பிரச்சினைகளின் தீர்வுக்குக் கையாளப்படும் ஒரு வழிமுறைதான் 'சுய வெளிப்பாடாகும்'. அதாவது தன் அனுபவங்களை கூறி வலுப்படுத்தும் வழிமுறையாகும். இதையும் இக்கதையில் கையாளப்பட்டுள்ளமைக்கு பின்வரும் காட்சி எடுத்துக்காட்டாக அமைகிறது. கதாநாயகன் இஷானிடம் தனியாக “இந்த பாதிப்புக்குள்ளான இன்னொருவனைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை” எனச் சொல்ல, மீண்டும் இஷான் திகைக்க “அது நான்தான்” என்கிறார் நிகும்ப்.

6) உளவியலில் பிரதானமாக அடையாளமிடப்படும் நடத்தை மாற்று சிகிச்சையில் நடத்தை மாற்றத்திற்கான ஒரு நுட்பமாக 'தண்டனையும் - பரிசும் ' எனும் நுட்பம் கையாளப்படுகிறது. அதாவது இங்கு பாதிப்புக்குள்ளாகியவர் செய்யும் சாதனையை பாராட்டி அவருக்கு ஆர்வமூட்டுவதற்காக இவ்வழிமுறை கையாளப்படும். ஒரு சமயம் கதையில் இஷான் தண்ணீரில் மிதக்கும் விளையாட்டுப்பொருளை வடிவமைக்கவே ஆசிரியர் நிகும்ப் கைதட்டி வாழ்த்துக்கூரியதுடன் ஏனைய மாணவர்களையும் ஊக்கமூட்ட வைக்கிறார். இதுவும் ஒரு உளவியல் சார் அனுகுமுறையாகும்.

7) ஆள்மையக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு மனிதனது சுய எண்ணக்கருவினை விருத்தி செய்வதற்கும் புலக்காட்சியை விருத்தி செய்வதற்கும் 'தன்னைப்பற்றிய முழுமையான புரிந்துணர்வு (total individual ) ' எற்படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது. இதனடிப்படையில் கதையில் கதாநாயகன் ஓவியங்கள் வரைய சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் அவனது திறமைகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் அவனது கற்றல் குறைபாட்டினை தாண்டி ஏனையதிறன்களை அடையாளப்பĺடுத்துவதன் மூலம் 'முழு தனிமனித' ஆற்றலை புரியவத்து புலத்தோற்ற களத்தினுல் மாற்றத்தை ஏற்படுத்துகிறார் கதையாசிரியர்.

8). குறித்த உளப்பிரச்சினைக்கு விஷேட கல்வி முறை என்பது உளவியல் சிகிச்சையில் அவசியமானது. அதற்கமைய கதாநாயகனால் பாதிக்கப்பட்ட மாணவன் மண்ணில் எழுதுதல் போன்ற பல்வேறு வழிமுறையில் கற்பிக்கப்படுவது ஒரு உளவியல் யதார்த்தினை சுட்டிக்காட்டுகிறது

9) மாணவர்களது ஆர்வம் தொடர்பான புரிந்துணர்வுடன் கற்றல் செயன்முறை நடைபெற வேண்டும் என்பது கல்வி உளவியளாளர்களின் கருத்தாகும். இதற்கமைய கதை கூறல் மற்றும் விளையாட வைத்தல் வழிமுறைகளை கதாநாயகன் கையாள்வதன் மூலம் குறித்த உளவியல் சார் வழிகாட்டலிற்கான தகுந்த உதாரணம் காட்டப்படுகிறது.

இதுபோன்று பல்வேறுவிதமான உளவியல் யதார்த்தங்களை குறித்த மாணவனின் கல்வி நடவடிக்கையினை மையமாக வைத்து இத்திரைப்படம் சித்தரிக்கிறது.

குறிப்பாக இத்திரைப்படத்தில் காட்சி வடிவமைப்பு மற்றும் சுவாரஸ்யமான கதை நகர்த்தும் வழிமுறை என்பன அதிகம் வரவேற்கத்தக்கது. இன்னும் குறித்த மாணவனின் உளவியல் குணங்குறிகளை சில காட்சிகளின் மூலம் விரிவாக அறிமுகம் செய்வதன் மூலம் அறிவியல் சார்ந்த ஆக்கமாகவும் இது தரம் பெற்றிருக்கும். மேலும் இதனை முழுமையாக உளவியல் திரை என வியாக்கியானம் செய்ய முடியாது. இது சமூகவியல் வியூகமும் வழமைபோன்ற சினிமா வழிமுறைகளும் தவறால் உள்வாங்கப்பட்டுள்ளமை மறுப்பதற்கில்லை.

இத்திரைப்படம் அதிகமாக கல்வி செயற்பாடுகள் சார்ந்த உளவியல் வழிகாட்டல்கள் உள்ளமை விளிப்புணர்வுடனான அவதானிப்பு மூலம் புலனாகிறது.

< h6 style="text-align: right;">Fazlan A Cader

கருத்துகள்