அன்புள்ள வாப்பா

முத்தாக மூணு மகள் பெத்தீங்க வாப்பா முத்துக்களுக்கு சொத்து சேர்க்க கத்துக்கடல் தாண்டி தொலைதேசம் போனீங்களே

வாழ்வின் விடியலை நோக்கி வாழும் வழிமுறை காண நாளும் உழைத்திட்ட நீங்க நல்வாழ்வை நமக்களித்தீங்க

பாடுபட்டும் பலன்கள் உமக்கின்றி வலிகளையே வரமாய்ப்பெற்று சிதையாமல் அதை சிரிப்பாகவே தந்தீங்க

கடும்பனியே பொழிந்திட்டாலும் வெந்தழலாய் வெயிலடிச்சாலும் சலியாது உழைச்சீங்க - பிள்ளைகளின் கலியாணக் கனவுக்காகத்தானே

பஞ்சுமெத்தையில நாங்க புரள பட்டுச்சட்டை உடுத்தி மகிழ பட்டினியா பல நாட்கள் பரிதவித்தீர்களே வாப்பா

நேரதிலே பார்த்திருந்தால் நெஞ்சமதும் வெந்திடுமோ பஞ்சம் தீர்க்க உழைத்திடும் கஞ்சமில்லா உந்தன் தேகமோ

வகை வகையா சாக்லேட்டும் விலையுயர்ந்த வாசங்களும் வியர்வையை விற்று அலுக்கும் வரை வாங்கித்தந்தீங்க வீடே விழாக்கோலம் காண விலையற்ற வாலிபத்தையே தொலைத்தீங்களே

மூத்த மகளாய் மூச்சயர்ந்து நிற்கிறேன் வாப்பா முதுமையிலும் முழுமையாக பராமரிக்கும் பாக்கியத்தை வேண்டியபடியே!

நிலாக்கவி நதீரா முபீன், புளிச்சாக்குளம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

கருத்துகள்