நிழலாடும் நினைவுகள்

தேடிப்பார்க்கின்றேன்! அடைமழையின் மத்தியிலும் என் கால் தடங்கல் அங்கு சில வேளை பதிந்துக் கிடக்கலாம்!

நாசியினூடாக இதயம் தொட்டுத்தழுவி இரைப்பை நிறைக்கும் இனிய குளிர்காற்றை சுவாசிக்க மறக்க எப்படி முடிந்தது என்னால்!

சில்லிட்ட மார்கழி குளிரில் அள்ளிக் குளித்து, பற்கள் தாளமடித்த பல நாள் நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்

வீதி வழி செல்லுகையில் விருப்போடு கதையளந்த உறவுகளையும் எப்படி விட்டு விலகிப்பிரிய முடிந்தது என்னால்?

நடைத்தூர நேரத்தையும் மைல் தூர காலமாய் மாற்றிவிடும் அயலுறவின் அளவளாவள் எண்ணி இன்றெல்லாம் ஏங்கித் தான் தவிக்கின்றேன்.

கல்லூரி காலங்களில் கலகலத்த நினைவுகளை கற்பித்த பள்ளியில் கரும்பலகையில் - என் கைவாசனையை மீண்டும் காண துடித்துத்தான் கண்ணீர் வடிக்கின்றேன்.

தெல்தோட்டைப் பேருந்தில் தொலைந்து போகும் நிமிடங்களை ஹால்வத்தை செல்லுகையில் மலைகள் தொடும் பேரழகில், மலைத்துப் போன நினைவுகளை, சுவைத்துத் தான் நான் பசி யாறுகிறேன்.

எனதூர் என்பது, என் சுவாசக்காற்று. நேசம் கொண்டு செதுக்கிய - என் நெஞ்சறையின் கல்வெட்டு. மடிந்துபோகும் இனிமேல். என்னோடு என்னூர் நினைவுகள்

நஸீரா பின்த் ஹஸன்

கருத்துகள்