நாளாவித ஆசையெல்லாம் நாளுக்கு நாள் பெருகி நாணிய பருவமும் நீங்கி நரைமுடிகளும் நையாண்டி பண்ண நகர்ந்திடும் நாட்களை எண்ணியபடியே விரல்களும் தேய்ந்திடும்
காலத்தின் சுழற்சியிலே கட்டவிழ்க்கப் படாத கடுமைச் சமுதாயத்தின் கட்டுக்கோப்புகளால் கன்னி இவளின் காயாத காயங்களை தனிமையும் உரசிப் பார்க்கிறது
பிணந்தின்னும் சாத்திரத்தை மண்ணுலகில் வகுத்ததாரோ? சீதனச் சந்தையிலே சீர்கெட்ட சங்கதியும் நாட்டில் நிறை தொற்றுநோயாய் நாளாந்தம் பரவுகையில் நச்சரிப்புகளும் உச்சமாகிறது
பேரம் பேசும் கோழைகளே போதனைகள் பண்ணலாமோ? சத்தியம் உரைத்திடாமல் நித்திய நிம்மதியும் நிலைத்திடவே நினைக்கலாமோ?
எண்ணக் குமிழ்கள் உடைந்து ஓடுகையில் நெஞ்சத்து வடுக்களும் மடைதிறந்த வெள்ளமாய் படையெடுத்தே வருகிறது
எத்தனை காலமாய் அத்தனை சோதனைகளால் சித்தமும் குழைந்திட கசிந்துருகும் கண்ணீரில் இங்கே கருணை காட்ட யாருமில்லை
கணவனாக ஒருவன் காத்திருக்கும் காரிகையின் கரங்களைப் பற்றிக் கொண்டால் கணப்பொழுதில் கவலைகளும் கரைந்திடுமே - மறுநொடியில் இவள் வாழ்வும் மலர்ந்திடுமே!
நிலாக்கவி நதீரா முபீன் புத்தளம்
கருத்துகள்
கருத்துரையிடுக