பொலிஸ் வேலை

கண்ணாடி முன் நின்று நேராக முகம் பார்த்து நீ பொலிஸ் என்று தானாக சிரிந்த அந்த நிமிடங்கள் காணமல் போய் விட்டது காத்திருப்புக்கள் நீடிக்கையிலே

காத்திருப்பின் நீடிப்பால் எதிர் பார்ப்பில் ஏக்கங்கள் கூடுகின்றது என் தேசத்திற்காய் என் சுவாசம் தீரும் வரை நான் நேசம் கொண்ட வேலையை என் சுவாசம் போல் சுவாசிக்க காத்திருக்கிறேன் கடிதம் இன்னும் வந்து சேரவில்லை

தபாற்காரன் வீடு வருவான் என்று தெருநாய் போல் வீதியோரத்தில் அமர்ந்து பாதையில் பார்வைகளை குவித்துக் கொண்டிருக்க கற்பனைக்கும் கல்போல் சொல்லெரிந்து செல்கிறான் கடதாசி வரவில்லை இன்னும் என்று

கைநிறைய சம்பளம் வாங்கிடவா காக்கி சட்டைக்கு ஆசைப் பட்டோம் காவற்காரன் போல் கதவருகே கற்பனையில் இன்னும் கடதாசி வருமென்று வாழ்ந்திட

ஆசையில் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவமானமாய் வந்து சேர்கிறது அடுத்தவர் முன்னிலையில் அடி எடுத்து வைக்கையில்

என்று வரும் என் கடிதம் காக்கி சட்டை கொண்டுவருமா இல்லை கற்பனையிலே வாழ்ந்து கொண்டிரு என்றே நின்றுவிடுமா

காத்திருக்கிறேன் கடலலை போல் கோபங்களும் வெறுப்புகளும் அணிவகுப்பாய் வந்தும் அமைதியாக என்றாவது என் வீடு தேடி வரும் அந்தக் கடிதம் என்ற நம்பிக்கையோடு

கவியிதழ் காதலன் ஐ.எம்.அஸ்கி அட்டாளைச்சேனை -08

கருத்துகள்