குரங்கு மனசு பாகம் 23

"ராபியா ராபியா"

கவலையே வடிவாய் வீட்டு மூலையில் அமர்ந்திருந்த ராபியா, சீறிக் கொண்டு உள்ளே வந்த தன் கணவனைக் கண்டதும் மீள் தேம்பித் தேம்பி அழ,

"போதும் நிப்பாட்டு. என்ன புள்ளயா... புள்ளயா நீ வளர்த்து வெச்சிருக்க? இன்னொருத்தன் கூட போற அளவுக்கு அவள் வளர்ந்துட்டாளா? நீ எங்கடீ பாத்துட்டு இருந்த? உன் கண் எங்க வானத்துலயா இருந்திச்சி. என்னால வெளிய தல காட்ட ஏலாத அளவுக்கு உன் புள்ளய வளத்து வெச்சிருக்கியே!" ரிகான் கோவத்தில் உறும,

"அவள் உங்க புள்ளயும் தான். வாப்பான்ற பேருக்கு சரி நீங்க இருந்தாத் தானே நம்ம புள்ளேட கெட்டித்தனம் எல்லாம் உங்களுக்கும் புரியும்"

"பொத்துடீ வாய"

பதிலுக்குப் பேசிய ராபியாவின் வார்த்தைகளால் வெகுண்டெழுந்த ரிகான், வீட்டுத் தளபாடங்கள் எல்லாம் தூக்கி நிலத்திலடித்தான். ராபியாவை இழுத்து கன்னத்துக்கு மாறி மாறி அறைந்தவன்,

"இந்த புள்ளய பெத்ததுக்கு மாடு ஒன்னு வாங்கி வளக்க இருந்திச்சி ஒனக்கு இனி நீ எப்புடி வேணுமோ இருந்துக்கோ. நான் இந்தப் பக்கம் சரி வர மாட்டன்" புலி போல் பாய்ந்தவன், வேகமாய் வீட்டை விட்டு வெளியிறங்கிப் போனான்.

"ஏன்ட அல்லாஹ்!"

கண்கள் இருளாக அப்படியே நிலத்தில் விழுந்தாள் ராபியா. வீட்டில் யாருமில்லாத நிலையில் அவள் கை கால்கள் எல்லாம் நடுங்கின. கொதிக்கும் சூடு உடம்பில் பரவ எழும்ப முடியாமல் நீண்ட நேரம் தரையில் படுத்திருந்தாள். கணவனின் வார்த்தைகளும் அவன் செயல்களும் உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் வதைக்க, தன் இறுதித் தருவாயோ என்று நினைக்கும் அளவுக்கு  ஒருவித வலியை உணர்ந்தாள் ராபியா.

மெதுவாக நிலத்தால் தவண்டு தவண்டு லேன்போன் இருக்கும் இடம்வரை வந்தவள், அந்த மேசையைப் பிடித்து சிரமத்துடன் எழுந்து நின்றாள். பிறகு  அதே நிலையில்  பக்கத்து வீட்டுக்கு அழைப்பு செய்து அவசரமாய் கொஞ்சம் வந்து போகச் சொல்லி முடிக்கவுமில்லை மீண்டும் பேச்சு மூச்சற்று நிலத்தில் விழுந்தாள்.

உடனே ஓடி வந்த பக்கத்து வீட்டு மரியம் தாத்தா ராபியாவின் நிலை கண்டு பயந்து போனாள். அவசரமாய் ஆட்டோ ஒன்றை வரச் செய்து தன் கணவனுடன் ராபியாவை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தாள். ஆம் ராபியாவின் நிலை விபரீதமாயிருக்க, வைத்தியர்கள் சூழ்ந்து ஏதேதோ பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள்.

"இந்த பேஷன் கூட வந்தவங்க யாரு?

"ஆஹ் நா.. நாங்க தான்."

"இவங்களுக்கு நீங்க என்ன உறவு?"

அந்தத் தாதியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மரியம் தாத்தாவும் அவள் கணவனும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றார்கள். அதே நேரத்தில் இன்னும் சில தாதிகள் வெளியே ஓடிவர, ராபியாவை அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லவே நிலமை மிகவும் விபரீதமென்பதை மட்டும் ஊகித்துக் கொள்ள முடிந்தது மரியம் தாத்தாவால்.

கதை தொடரும்… Aathifa Ashraf

[products]

கருத்துகள்