குரங்கு மனசு பாகம் 29

[products]

ஆம்! அந்த மேசையில் கிடந்த சர்மியின் மொபைலை எடுத்து சர்மி இறுதியாய் டயல் பண்ணியிருந்த பிலால் இலக்கத்தை ரீடயல் செய்தவளாய், பிலாலுக்காக அழைப்பிலே காத்திருந்தாள்.

"ஹலோ என்னடீ? திரும்ப கோல் பண்ணிட்டு? உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா? ஐ ஹேட் யூ.. ஹேட் யூ.. ஹேட் யூ"  அழைப்பில் இருப்பது சர்மி என்ற நினைப்பிலே பிலால் உறும, தன் மகளின் நிலை குறித்து உணர்ந்து கொண்டாள் ராபியா.

"என்ன மகன் இது? எதுக்கு இப்புடி எல்லாம் பேசுற?" பதிலுக்கு  மாமியாரின் குரல் கேட்ட பிலாலுக்கோ கோவம் இருமடங்காகிப் போனது.

"ஓஹ் நீங்களா? நான் எதுக்கு இப்புடி பேசுறன்னு புரியல்ல போல..."

"பழசு எல்லாம் மறந்துடுங்க மகன். தப்பு என்மேல தான். உங்ககிட்ட மன்றாடி கேக்குறன். என்கூட இருக்குற கோவத்த என்புள்ள மீது காட்டாதீங்க. பிளீஸ் மகன்... பிளீஸ்..."

"ஹஹ் பாவம் என் மாமி.. புள்ளமேல அவ்வளவு பாசம் போல?"

"உங்க கோவத்துக்கு நியாயம் இருக்கு மகன். எனக்கு என்ன வேணுமோ சொல்லுங்க... என் புள்ள வாழ்க்கையில மட்டும் மண்ணள்ளி போட்டுடாதிங்க..."

"நான் எதுக்கு உங்க புள்ளயோட வாழ்க்கையில மண்ணள்ளிப் போடனும்? நான் தான் தொழிலில்லாம கிடக்குறனே. உங்க புள்ளய நல்லா பார்த்துக் கோங்க... இனி அவள் என் யாருமில்ல.."

"ஐயோ அப்புடி எல்லாம் பேசாதிங்க மகன். சர்மி உங்களுக்கு எதுவும் பண்ணல்லயே!"

"ஓஹ் போதும் மாமி... இதுக்கு மேல பேசி என்வாயில இருந்து நல்ல வார்த்தைகள கேட்டுக்காம போன வைங்க... உங்க புள்ளக்கி டிவோஸ் லட்டர் வரும்..."

"ஐயோ வேணாம் மகன்... அப்புடி எதுவும் பண்ணாதீங்க... பிளீஸ் மகன்... பிளீஸ்... வேணாம் மகன்"

தன் மகளுக்காக தாய் ராபியா கண்ணீர் விட்டு மன்றாட, கோவத்துடன் அழைப்பைத் துண்டித்தான் பிலால்..

"யா அல்லாஹ்!"

தலையில் கைவைத்துக் கொண்டவளாய் உட்கார்ந்த ராபியா மகளின் நிலைகண்டு உருகிப்போனாள்.

"என் மூடத்தனமான காரியத்தால என் புள்ள வாழ்க்க நாசம் போயிட்டே!" தன்னால் விளைந்த விபரீதம் குறித்து உடைந்து போனாள் ராபியா.

"சர்மி.. ஐயோ! என் தங்கமே! என்ன மன்னிச்சிக்கமா..."

சகித்துக்கொள்ள முடியாத ராபியா கதறி அழுதாள்.

"உம்மா.. உம்மா... ஏன்மா? ஏன் அழுகுற?"

தன்னை சமாளித்தவளாய் அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்த சர்மி, தாயின் கண்ணீருக்கான காரணம் காண முயற்சித்தாள்.

"சொல்லுங்கமா.. என்ன ஆவின?"

"பி...பிலா..பிலால்.. விஷயம் என்னம்மா?"

"ஐயோ! உம்மா அத விடுங்க பிளீஸ்.."

"பிலால் விஷயம் இனி கைகூடாதேமா..."

"உம்மா பிளீஸ் அத விடுங்க..."

"நான் பிலால் கூட பேசினன்மா..."

"உம்மா என்ன சொல்றீங்க?"

ஆச்சரியத்துடன் தாயிடம் வினவ, அழுகை அடைத்துக் கொண்டு வந்தது சர்மிக்கு.

கதை தொடரும்… Aathifa Ashraf

கருத்துகள்