பெற்றோர்களுக்கு நேரத்தை ஒதுக்குவோம்

ஒரு அரபி மகன் தனது தாய்க்கு அழைப்பை எடுக்கிறார்: உம்மி உங்களைவிட்டும் தூரமாக குடும்பத்துடன் வசிப்பதால் நீண்ட நாட்களாகவே அலுவல்கள் காரணமாக பேச முடியவில்லை, வந்து பார்க்கவும் முடியவில்லை சுகமாக இருக்கிறீர்களா? என்று கேட்கிறார்.

அல்-ஹம்துலில்லாஹ் அல்லாஹ்விற்கே புகழனைத்தும், சுகமாக இருக்கிறேன் மகனே, நீயும் மனைவி பிள்ளைகளும் சுகமாக இருக்கிறீர்களா? முடியுமாயின் ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கு வாருங்கள் என்று அழைக்கிறார்.

[products]

சில நாட்களில் திடீரென தாய் வீட்டிற்கு தான் வருவதாகவும் மனைவி பிள்ளைகளை மற்றுமொருநாள் அழைத்து வருவதாகவும் தொலைபேசியில் அறிவிக்கிறார். உம்மி, ஆனால் நாங்கள் இருவரும் ஒரு மத்அம் (உணவகம்) சென்று சாப்பிடுவோம் தயாராக இருங்கள் என்று கூறுகிறார்

தாய் வீட்டிற்குச் செல்லும் பொழுது வாப்பா வபாஃத்திற்கு முன் வாங்கிக் கொடுத்த புது ஆடையை அணிந்து மகனுக்காக காத்திருந்தார், வாப்பாவின் மரணத்திற்குப் பின் புதிய ஆடையணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லும் முதல் தடவை என்பதனை அவர்கூற மகனது கண்கள் கலங்குகின்றன.

மத்அமில் உணவுபான பட்டியல் அட்டையை எடுத்து தாயாரிடம் கொடுத்து விரும்பியதை தெரிவு செய்யுமாறு கூறவே மகனே வழமைபோல் உனக்கு விருப்பமானதையே நான் தெரிவு செய்வேன் என்பதை அறிவாய், நீயே பார்த்து கட்டளையை கொடு என்று அன்பாக சொல்லுகிறார்.

இருவரும் உரையாடியபடி சிறுபராய நினைவுகளை கடந்த கால அனுபவங்களை மீட்டிய வண்ணம் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருகிறார்கள். உம்மாவின் நெற்றியை கரங்களை முத்தமிட்டு விடை பெறும் பொழுது தயார் மகனின் கரத்தைப் பிடித்து,

அடுத்த முறை வரும் பொழுது மனைவி பிள்ளைகளுடன் வா மகனே! அதே மதஅமில் நாங்கள் எல்லோரும் இராபோசனம் எடுப்போம் என்றார். இன்ஷா அல்லாஹ் என உடன்பட்ட மகனிடம் அது எனது செலவில் என்று சொல்லுகிறார். மகனும் விடைபெற்று சென்று விடுகிறார்.

சில நாட்களாக மீண்டும் அலுவலாக இருந்து விடுகிறார், ஒருநாள் மாரடைப்பினால் தாயார் வஃபாத் ஆகிவிட்டதாக செய்தி கிடைக்கிறது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், உடனே குடும்ப சகிதம் சென்று இறுதிக் கடமைகளை முடித்து விட்டு திரும்பி விடுகிறார்கள்.

இரண்டொரு வாரம் கழித்து அவருக்கு ஒரு அழைப்பு வருகிறது. இந்த வார இறுதியில் உங்கள் குடும்பத்தின் பெயரில் இராபோசனம் முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது. தரப்பட்டுள்ள இலக்கங்களில் ஒரு இலக்கம் தொடர்பு கொள்ள முடியவில்லை. அது உங்கள் தாயாருடையது என அவர்கள் ஏற்கனவே சென்ற மத்அமில் இருந்து அந்த அழைப்பு வந்திருக்கிறது.

படிப்பினை:

திருமணம் முடித்த பின்னரும் உங்களுக்காகவே காத்திருக்கும் உம்மா வாப்பாவுடன் தொடர்பில் இருங்கள், அவர்களை சென்று சுகம் விசாரிப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். மனைவி குழந்தைகளோடு சுற்றுலாக்கள் உணவகங்கள் செல்லும் பொழுது முடிந்த வரை அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் அல்லது அவர்களுக்கு விரும்பிய உணவு பான வகைகளை கொண்டு போய் கொடுங்கள்!

நீங்கள் மாத்திரமன்றி உங்கள் மனைவி மக்களையும் அவர்களோடு அன்பாக பாசமாக பழகும் சூழலை சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுங்கள். அதேபோன்றே உங்கள மனைவிமாரது பெற்றோர் விடயத்திலும் அவர்களது உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்!

சிறுவயதில் உங்கள் விருப்பங்களுக்கு ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே தமது உணவு ஆகாரங்களை தெரிவு செய்த அவர்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களது தேவைகள் ஆசைகள் உணவு உடை மருத்துவ செலவினங்கள், சதகாக்கள் போன்றவற்றிற்கான பணம் காசு இருப்பதனை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

கருத்துகள்