இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். இங்கு பெரும்பான்மையாக பௌத்தர்களும் சிறுபான்மையினர்களாக இந்துக்கள்¸ முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்த போதும் அவர்கள் தாம் தேசத்திற்கு நல்கியுள்ள பங்களிப்புக்களை சிறுமையானவை என மதிப்பிடுவது தவறானதாகும். முஸ்லிம்கள் தாம் வாழும் நாட்டின் மீது பற்றுக்கொண்டு நாட்டு நலனுக்காக ஒத்துழைப்பது கடமையாகும். அந்த அடிப்படையில் வியாபாரிகளாக வருகை தந்து இங்கு குடியேறிய முஸ்லிம்களும் தாம் வாழும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தேசிய¸ கலாசார¸ பொருளாதார¸ அரசியல் பங்களிப்புக்களை வழங்கி மிகச் சிறிய தீவான இலங்கைத் திருநாட்டை முழு உலகிற்கும் அறிமுகப்படுத்தி வைத்தனர். முஸ்லிம்கள் தமது நலனுக்காகவோ இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் வற்புறுத்தலுக்காகவோ பங்களிப்பு நல்கவில்லை. மாற்றமாக தாம் வாழும் நாட்டிற்கு பங்களிப்புச் செய்வது தமது கடமை என உணர்ந்திருந்தனர். மேற்கத்தையவாதிகளின் வருகைக்கு முன்னும் அவர்களின் வருகையின் பின்னும் இலங்கை காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த சந்தர்ப்பங்களிலும் தேசியத்திற்காக பங்களிப்புச் செய்துள்ளார்கள். இவ்வாறான பங்களிப்புக்களை நல்கும் போது அல்குர்ஆன்¸ ஸுன்னாவின் போதனைகளுக்கமையவே செயற்பட்டார்கள். முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனித்துவங்களையோ பண்பாட்டுக் கூறுகளையோ இழக்கவில்லை. ஐரோப்பியர் தமது சுய இலாபத்திற்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் இலங்கை சமூகத்தினரிடையே முரண்பாட்டைத் தோற்றுவித்த சமயத்தில் முஸ்லிம்கள் பிற சமூகத்தோடு நல்லுறவுடன் தமது தனித்துவத்தைப் பேணி வாழ்ந்தார்கள். முஸ்லிம்கள் வியாபார நோக்கமாகவே இலங்கைக்கு வருகை தந்தனர். இலங்கையிலிருந்த வணிகப் பொருட்களை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் முஸ்லிம்களாவர். இலங்கையிலுள்ள மாணிக்கக்கற்களை அறிமுகப்படுத்திவைத்த பெருமையும் 'ஜஸீரத்துல் யாகூத்” (மாணிக்கத் துவீபம்) என்ற பெயரினூடாக இலங்கை நாட்டுச் செழிப்பை பிற நாட்டு மக்களுக்கு எத்திவைத்த பெருமையும் முஸ்லிம்களையே சாரும். ஆறுகள் வழிந்தோடும் நாடென்ற கருத்துத்தரும் வகையில் ''சைலோன்'' எனவும் இலங்கை நாட்டை முஸ்லிம்கள் அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் மருவி மேற்கத்தைய நாட்டவர்களால் 'சிலோன்” என அழைக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முஸ்லிம்கள் அளித்த பங்களிப்பானது பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவையாகும். இலங்கை மக்கள் வியாபாரம் செய்வதை இழிவாகக் கருதிய சந்தர்ப்பத்தில் வியாபாரமே பொருளாதார அபிவிருத்திற்கான செயற்பாடு என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இதனால் தான் அநுராதபுர ஆட்சிக்காலத்திலிருந்தே சர்வதேச வணிகத்துறையில் முஸ்லிம்கள் முன்னணியில் திகழ்கின்றனர். போர்த்துக்கேயர் இலங்கையை அடையும்போது வர்த்தக ஏக போக உரிமையானது முஸ்லிம்களிடமே இருந்தது. பருவக்காற்றுக்கள்¸ அவற்றின் போக்குகள்¸ கடற்கரையோரங்கள்¸ அவற்றின் தங்குமிடங்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களிடம் காணப்பட்டமையே இதற்கான காரணமாகும். இதனால் முஸ்லிம்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபார நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தி வைத்தனர். உள்நாட்டு வியாபாரத்திலே முஸ்லிம்கள் முக்கிய துறைமுக நகரங்களான புத்தளம்¸ திருகோணமலை¸ மட்டக்களப்பு¸ கொட்டியாரம் ஆகிய இடங்களிலிருந்து உப்பு¸ கருவாடு¸ கறுவா¸ துணிமணி போன்றவற்றை மலைநாட்டுப் பிரதேசங்களுக்கும்; மலைநாட்டுப் பிரதேசங்களிலிருந்து ஏலம்¸ கராம்பு¸ மிளகு¸ பாக்கு¸ யானைத்தந்தம் போன்றவற்றை கரையோர பிரதேசங்களுக்கும் தவளம் போக்குவரத்து முறை மூலம் பரிமாற்றம் செய்தார்கள். இலங்கையில் தவளம் பயணித்த வழிகளே பிற்காலத்தில் வீதிகளாகவும்¸ நெடுஞ்சாலைகளாகவும்¸ தவளம் தங்கிச் சென்ற இடங்கள் முஸ்லிம்களின் குடியிருப்புக்களாகவும் மாற்றமடைந்துள்ளன.
பொலன்னறுவைக் காலத்தில் கொழும்புத் துறைமுகத்தை அறிமுகப்படுத்தி ஏற்றுமதி¸ இறக்குமதி வியாபாரத்தை மேற்கொள்வதற்கும் முஸ்லிம்கள் காரணமாக அமைந்தனர். இலங்கையின் இரத்தினக்கல்லை சர்வேதேச சங்கத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு பிடவை¸ நகை வியாபாரங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். பொலன்னறுவைக் கால மன்னனாக விளங்கிய மகா பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் (கி.பி.1156 - 1186) வணிகத்துறையில் அபிவிருத்திற்காக உருவாக்கப்பட்டிருந்த ''அந்தரங்கத்துற'' என்ற மேல் சபையில் முஸ்லிம்கள் அங்கம் வகித்தமையானது முஸ்லிம்கள் வணிகத்துறையில் பெற்றிருந்த அங்கீகாரத்தினை எடுத்துக்காட்டுகின்றது.
முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக வழங்கியுள்ள பங்களிப்புக்களை எவராலும் மறைக்கவோ¸ மறுக்கவோ முடியாது. எதிர் நாட்டுப் படையெடுப்புக்களின் போது படைகளை எதிர்த்தும்¸ ஏற்பட்ட அழிவுகளை சீர்திருத்துவதற்கும் முஸ்லிம்கள் தம்மால் இயன்றளவு உதவி ஒத்தாசைகளை செய்துள்ளனர். ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் கலிங்கத்து மாகனின் படையெடுப்பின் போது இலங்கையிலிருந்த குளங்கள் அழிவுற்றதோடு விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்தது. இதன் போது மன்னன் முஸ்லிம்களிடமிருந்து பெற்ற சுங்கவரியைப் பயன்படுத்தி குளங்களை சீர்படுத்த முயன்றான். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதன் காரணமாகவே “யோத எல” கால்வாய் நிர்மாணிக்கப்பட்டது.
இலங்கையின் அரசியல் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானதாகும். பொலன்னறுவைக்கால முதல் மன்னனான விஜயபாகுவின் (கி.பி.1055 - 1070) முடிசூட்டு விழாவின் போது பெரிய தம்பி மரிக்கார் என்பவர் ஒத்துழைப்பு வழங்கியதோடு அரசின் விசுவாசத்திற்குரியவராகவும் வணிக இணைப்பாளராகவும் செயற்பட்டார். பொலன்னறுவைகாலப் பிரிவில் சிறப்பிற்குரிய மன்னனாக விளங்கிய மகாபராக்கிரமபாகுவின் அரச சபையில் முஸ்லிம்கள் பல பாத்திரங்களில் சேவையாற்றியுள்ளதோடு 4 முஸ்லிம்கள் வணிக ஆலோசகர்களாகவும் கடமையாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முஸ்லிம்களிடமிருந்த அரசியல்¸ சமூக¸ பொருளாதார பலத்தைக் கொண்டு இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம். எனினும் அவ்வாறான செயற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபடமுனையவில்லை. இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களுடன் நல்லுறவு கொண்டு அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார்கள். முஸ்லிம்கள் சுதேச மன்னர்களின் அமைச்சரவை உறுப்பினர்களாக¸ ஆலோசகர்களாக¸ அரச தூதுவர்களாக¸ நிர்வாக சேவை உறுப்பினர்களாக¸ பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றியுள்ளார். இவ்வாறு பல துறைகளில் முஸ்லிம்கள் நியமனம் பெறக் காரணம்; அவர்களிடம் காணப்பட்ட நேர்மைத்தன்மையும் உண்மைத் தன்மையுமாகும். எகிப்தில் மம்லூக்கிய ஆட்சி நிகழ்ந்த காலத்தில் எகிப்திற்குத் தூதுவராக அபூ உஸ்மான் என்பவரே அனுப்பிவைக்கப்பட்டமையானது முஸ்லிம்கள் மன்னர்களிடம் பெற்ற மதிப்புணர்வை எடுத்துக்காட்டுகின்றது. 1270இல் இராணுவத் தளபதியாக சேவையாற்றிய முஸ்லிம் தளபதி தாகூர் அவ்வாண்டு இடம்பெற்ற கிளர்ச்சியை முடிவிற்குக் கொண்டு வந்தமையே 1270இல் 1வது புவனேகபாகு யாப்ப{ஹவவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபீடமேற வழிவகுத்தது.
கி.பி. 1505 இல் போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது இதற்கு பலத்த எதிர்ப்பைக் காட்டியவர்கள் முஸ்லிம்களாவர். இவ்வாறு போர்த்துக்கேயரை எதிர்க்கக் காரணம் ஸ்பானியாவில் முஸ்லிம்கள் ஆட்சி செய்தபோது அதன் தென் பகுதியில் வாழ்ந்த போர்த்துக்கேயரின் அடாவடித்தனங்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் முஸ்லிம்கள் கவனித்து வந்தமையாகும். அட்டூழியம் விழைவிக்கும் ஒரு பிரிவினரை தாம் வாழும் நாட்டிற்குள் பிரவேசிப்பதை எதிர்க்கக் காரணம் இலங்கை மக்களின் மீதும் தாம் வாழும் நாட்டின் மீதும் வைத்த நேசமாகும். போர்த்துக்கேயரின் செயற்பாடுகளிலிருந்து நாட்டைக் காக்க முஸ்லிம்கள் பல்வேறு விதங்களில் முயற்சித்தனர். கி.பி 1518ல் போர்த்துக்கேயர் இலங்கையில் கோட்டையொன்றை நிர்மாணிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது முஸ்லிம்கள் அதன் அபாயத்தை உணர்ந்து கோட்டை மன்னனுக்கு உணர்த்தினர். அப்போது மன்னன் முஸ்லிம்களின் ஒத்துழைப்போடு கள்ளிக்கோட்டை மன்னன் சமோரினின் உதவியைப் பெற்று போர்த்துக்கேயரை நெருக்கடிக்குள்ளாக்கினான். இதன் விளைவாக போர்த்துக்கேயர் 1524ல் அக்கோட்டையை உடைக்க முடிவு செய்ததாக பேராசிரியர் அபேசிங்க குறிப்பிடுகிறார்.
கோட்டை இராச்சியமானது விஜயபா கொள்ளையின் (1521) போது 3 கூறுகளாகப் பிளவுபட்ட போது அதிகமாக மகிழ்ச்சியடைந்தவர்கள் போர்த்துக்கேயர்களாவர். இதே காலகட்டத்தில் தான் கொன்ஸ்தாந்தி நோபிள் முஸ்லிம்களின் வசமாகியது. இதற்காக முஸ்லிம்களை பழிவாங்கும் தருணத்தை ஐரோப்பியர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கான தகுந்த நேரமாக இக்காலகட்டத்தை போர்த்துக்கேயர் பயன்படுத்திக் கொண்டனர். கோட்டை அரசன் 9-ம் புவனேகபாகு மன்னனை வசப்படுத்தி முஸ்லிம்களின் மீது எதிர்ப்பை ஏற்படுத்தினார்கள். இதனால் கோட்டை இராச்சியத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. நூற்றாண்டு காலமாக சிங்கள சமூகத்துடன் நல்லிணக்கமாக வாழ்ந்த முஸ்லீம் சமூகம் வரலாற்றில் முதற்தடவையாக சிங்கள அரசரால் வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வாறு 9-ம் புவனேகபாகு மன்னனால் வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மாயாதுன்னையின் (1521 - 1581) சீத்தவாக்கை இராச்சியத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். இச் சந்தர்ப்பத்தில் கோட்டை இராசதானியின் தலைநகரங்களில் வாழ்ந்த பௌத பிரபுக்களும் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டமை வரலாற்றில் அற்புதமான ஒரு சம்பவமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீத்தவாக்கையில் குடியேறிய முஸ்லிம்களின் ஒத்துழைப்புக் காரணமாக மாயாதுன்னை மன்னனால் சீத்தவாக்கை இராச்சியத்தை வளமான ஓர் இராசதானியாக மாற்ற முடிந்தது. மாயாதுன்னையின் படையில் இருந்த முஸ்லீம்; அப்துர் ரஹ்மான் என்பவர் சீதாவாக்கை இராச்சியத்தை யாழ்ப்பாண இராச்சியத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு தலைமை தாங்கிச் சென்று வெற்றி கண்டார். மாயாதுன்னையின் புதல்வனான 1-ம் இராஜசிங்கவின் (1582- 1592) காலத்திலும் முஸ்லிம்கள் அரச படையில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இது பற்றி போர்த்துக்கேய வரலாற்றில் Queyroz என்பவர் குறிப்பிடும் போது மேற்குறித்த இராணுவ நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் துப்பாக்கிப் பிரிவாகவே செயற்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகின்றார்.
கண்டி அரசியலில் முஸ்லிம்கள் வகித்த பங்கு மகத்தானதாகும். கண்டி மன்னன் 1வது விமலதர்மசூரியனின் ஆட்சிக்காலத்தில் கரையோர பாதுகாப்பிற்கான தளபதியாகவும் பிரதான கட்டளையிடும் அதிகாரியாகவும் பணியாற்றிய முஸ்லிம் ஒருவர் போர்த்துக்கேயரால் கைது செய்யப்பட்ட போது இவரை விடுவிக்க 5000 தங்க நாணயங்களையும் வழங்க முன்வந்தமை இவர் மீது மன்னனுக்கிருந்த நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றது. அவ்வாறே 2ம் இராஜசிங்கம் காலப்பிரிவில் (கி.பி1634-1684) நடைபெற்ற வெள்ளவாயப் போரில் 'ஒடுபந்திய” (ஒட்டகை அணி) மூலம் முஸ்லிம்கள் வழங்கிய உதவியானது ஹங்குரன்கொட மகாதேவ ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்த பிடவையில் ஓவியமாக சித்தரிக்கப் பட்டுள்ளமையானது சிறப்பம்சமாகும். கி.பி. 1762இல் இலங்கைக்கு வருகை தந்த ஆங்கிலேய தூதுவராக ஜோன்பைபஸை வரவேற்று அழைத்து வர மன்னனால் உதுமான் லெப்பை என்பவரே அனுப்பி வைக்கப்பட்டார். கண்டியின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் (கி.பி.1798 - 1815) காலப்பிரிவில் பிலிமத்தலாவை மற்றும் எஹலபொல திசாவையுடன் இணைந்து பிரதம நீதிபதியாக ராஜகருண கோபால் முதியான்ஸே ராலகாமி என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற முஸ்லீம் ஒருவரே சேவையாற்றியதாக கலாநிதி லோனா தேவராஜா குறிப்பிடுகிறார்.
இலங்கையானது காலணித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த போது நாட்டின் நிர்வாகத்துறையில் செயலாற்றியதோடு பெரும்பான்மை சமூகத்துடன் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கினார்கள். சிறுபான்மையினரின் எதிர்ப்பை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி சுதந்திரம் வழங்குவதை பிற்படுத்திய சந்தர்ப்பத்தில் இன ரீதியான கோரிக்கைகளையும் இலாபங்களையும் அடைவதை விட சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதே முக்கியமானது என அரசாங்க சபையில் முஸ்லிம்கள் சார்பாக ரீ.பீ. ஜாயா குரல் கொடுத்தார். சோல்பரி யாப்பை இனவாத கண்ணோட்டத்தில் நோக்கி அதனைத் தோற்கடிக்க பல உறுப்பினர்கள் முயற்சித்த வேளை¸ தேசிய கண்ணோட்டத்தில் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் தொடர்ந்து நாம் பெற்ற சுதந்திரத்திற்கும் ஜாயா பொறுப்பாக இருந்தார் என அரச சபையில் அமைச்சராக இருந்த முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன முஸ்லிம்களின் பெருந்தன்மையை பாராட்டிப் பேசினார். 1815இல் முடிவுறுத்தப்பட்ட சுயாட்சி மீண்டும் 1948 இல் பெற்றுக்கொள்ளப்படுவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகளின் நியாயமான கோரிக்கைகள் காரணமாக அமைந்துள்ளன.
இலங்கையிலே யூனானி மருத்துவத்தை அறிமுகப்படுத்தி அதனை வளர்த்த பெருமை முஸ்லிம்களையே சார்கின்றது. கி.பி.10-ம் நூற்றாண்டளவில் சின்னாசியாவில் உள்ள கென்யா சுல்தானின் புதல்வரான இளவரசர் ஜமாலுத்தீனும் அவர்களது புதல்வர்களுமே இம் முறையை அறிமுகப்படுத்தி வைத்தனர். முஸ்லிம்கள் அரச மருத்துவர்களாகவும் பணியாற்றியுள்ளனர். கண்டிக் காலப்பகுதியில் முஸ்லிம்கள் பெஹத்கே முகாந்திரம் நிலமைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு இவர்கள் கண்டி மன்னனால் உடுநுவரைத் தொகுதியில் நிலங்கள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். இத்தகைய மருத்துவர்கள் ராஜபக்ஷ வைத்தியலாகே¸ ராஜகருண வைத்திய கோபால முதலி போன்ற பெயர்களால் கௌரவமாக அழைக்கப்பட்டனர். இரண்டாம் இராஜசிங்கனது காலப்பிரிவில் காலியைச் சேர்ந்த சுல்தான் குட்டியா என்ற மருத்துவர் கம்பளை பகுதிக்கு அருகில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டார். இவரது பரம்பரையினர் காலி மருத்துவர்கள் என அழைக்கப்பட்டதாக கலாநிதி தேவராஜா குறிப்பிடுகிறார். இதே மன்னனின் காலத்தில் பெஹத்கே முகாந்திரமாகவும் அரச மருத்துவராகவும் பல்கும்புரே வைத்திய திலக ராஜ கருண கோபால முதியன்சலாகே சேக் முஹம்மத் உடையார் இப்னு அலி இப்னு குபால் உடையார் பணிபுரிந்துள்ளார். மலையாகப் பிரதேசங்களில் மாத்திரமன்றி கரையோரப் பிரதேசங்களிலும் ஒல்லாந்தர் நிறுவிய வைத்தியசாலைகளிலும் முஸ்லிம் மருத்துவர்கள் பணியாற்றியுள்ளனர். முஸ்லிம்களால் அறிமுகப்படுத்தப்பட்ட யூனானி மருத்துவமானது இன்று இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கூட அங்கீகரிக்கப்பட்ட துறையாக காணப்படுகின்றது.
இலங்கையில் வாழ்ந்த சுதேச மக்கள் அந்நியக்கலாசாரத்தை விடவும் சுதேச கலாசாரங்களை பின்பற்றுவதில் உறுதியாக நின்றார்கள். இவ்வகையில் முஸ்லிம்களும் அவர்களுடைய கலாசாரங்களை பேணிப் பாதுகாப்பாதில் உறுதியாக நின்றனர். கட்டிட நிர்மாணத்தில் முஸ்லிம்கள் சிறப்புற்று விளங்கினர். இதனால் இலங்கையின் கட்டிடக் கலையானது புதுவடிவம் பெற்றது. கொழும்பு நகர மண்டபம்¸ பழைய விபத்துச் சேவை மண்டபம்¸ கோட்டை பெரிய தபாற் கந்தோர்¸ பழைய செனற் கட்டிடம்¸ தேசிய அரும்பொருட் காட்சிசாலை போன்றன முஸ்லிம்களின் கட்டிடக்கலை மரபிலே அமைந்துள்ளன. கல்வித்துறை வளர்ச்சிக்காக பாடசாலைகளும் முஸ்லிம்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பன்மொழித் தேர்ச்சி வாய்ந்த முஸ்லிம்கள் பிற சமூகத்தோடு உரையாடும் போது அவர்களுடைய பேச்சு மொழியின் மூலமே கலந்துரையாடினார்கள். இதன் காரணமாக அரபுச் சொற்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழியோடு கலப்புற்றன. இதன் விளைவாக புதுச் சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. இவ்வாறு முஸ்லிம்கள் கலைச் சொல் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்துள்ளனர். (ஸாபுன்-ஸபன்) (ரிதா : ரெத்த)
முஸ்லிம்கள் தியாக உணர்வு மிக்கவர்கள். அவர்கள் தமது உயிர் மற்றும் செல்வங்களை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர். 1925 காலப்பகுதியில் ஏறாவூரைச் சேர்ந்த உமர்லெப்பை என்பவரால் பிடிக்கப்பட்ட கொம்பன் யானையானது தளதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த கொம்பன் யானை அங்கிருந்து தப்பி திரும்பவும் குறித்த நபரை தேடித் சென்றது. எனினும் அவர் அதனை மீண்டும் தளதா மாளிகைக்கே ஒப்படைத்தார். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கௌரவிக்கும் முகமாக தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தினர். ராஜா எனப் பெயரிடப்பட்ட இந்த யானை கண்டி எசால பெரஹரவின்போது அலங்கரித்தமைக்காக தேசிய ரீதியிலும் கௌரவிக்கப்பட்டது. தளதா மாளிகையில் சேவையாற்றிய கொம்பன் யானையையும் அதனை அன்பளிப்புச் செய்த முஸ்லிம் நபரையும் நினைவு கூறும் முகமாக 1000 ரூபாய் தாளில் கொம்பன் யானைக்கு அருகில் உமர் லெப்பையின் உருவம் அச்சிடப்பட்டுள்ளமையானது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஐம்பது வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய இந்த யானை 15 ஜுலை 1988இல் இறந்தது.
இலங்கையின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனை ஆங்கிலேயப் படை துரத்தி வந்த சமயத்தில் மன்னன் மரப்பொந்தினுள் ஒழிந்து கொண்டான். ஆங்கிலேயப் படை மன்னனை காணாது பால் கறந்து கொண்டிருந்த பாத்திமா என்ற முஸ்லீம் பெண்மணியிடம் மன்னனைப் பற்றி விசாரித்ததனர். பாத்திமா மன்னனை காட்டிக் கொடுக்கவோ பொய் சொல்லவோ விரும்பவில்லை. இதனால் ஊமையாக நடித்தாள். கோபம் கொண்ட படையினர் முஸ்லிம் பெண்மணியை கொலை செய்து விட்டு அகன்றனர். பல மணி நேரங்களின் பின் பொந்தை விட்டு வெளியேறிய மன்னன் பெண்ணின் இரத்தத்தை கண்டு “மா ரக லே" (என்னை காத்த இரத்தமே!) எனக்கூறி வருந்தியதோடு உயிர் காத்த உத்தமியான இந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு “பங்கரகம்மான” எனும் பிரதேசத்தை பரிசளித்தார். இலங்கையின் முதலாவது பொலிஸ் அதிகாரி பி.ஸி. ஸபான் முஹம்மத் என்பவர் நாட்டுக்காக சேவையாற்றி நாட்டுக்காகவே 1964.03.21 அன்று உயிர் துறந்தார். இவரை நினைவுகூரும் முகமாகவே இன்றும் மார்ச் 21 பொலிஸ் தினமாக கொண்டாடப்படுகின்றது. இவ்வாறு முஸ்லிம்களின் தியாகங்கள் பல துறைகளிலும் காணப்படுகின்றன.
இவ்வாறு பல துறைகளிலும் பங்களிப்பு நல்கிய முஸ்லிம்களுக்கு அவப்பெயர் ஏற்பட்ட சந்தர்ப்பமே 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலாகும். முஸ்லிம் பெயர் தாங்கிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலைப் பற்றிய தகவல்களை முன்னெச்சரிக்கையாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் சிலோன் தௌஹீத் அமைப்பு அறிவித்த போதும் பாதுகாப்புத் தரப்பினரே உரிய நடவடிக்கை எடுக்க முன்வராமை கவலைக்குரிய விடயமாகும். நிந்தவூர்ப் பிரதேசத்தில் இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கன திட்டமிடல்கள் இடம் பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட இதனைப் பற்றி உரிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிப்புச் செய்து பாரிய மோதலை தோற்கடிக்கச் செய்தவர்களும் முஸ்லிம்களாவர். இவ்வாறு முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டவர்கள் என்ற வகையில் தாம் வாழும் இலங்கைத் தேசத்தின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பாக செயற்படுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். உசாத்துணைகள்
- சுக்ரி எம்.ஏ.எம். (2010)¸ இலங்கை முஸ்லிம்கள் தொண்மைக்கான வரலாற்றுப் பாதை ஏ.ஜே.பதிப்பகம். கொழும்பு
- அஸீஸ் ஐ.எல்.எம். இலங்கையில் சோனகர் வரலாறு¸ சோனகர் இஸ்லாமிய கலாசார நிலையம். கொழும்பு
- அமீன் எம்.ஐ.எம். (2000) இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் அல்ஹஸனாத் பதிப்பகம். கொழும்பு
- அஷ்ஷெய்க் எம். நவாஸ் சனூர்த்தீன் (நளீமி)¸ இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்புகள் அகரம் சஞ்சிகையில் வெளிவந்த தொடர் ஆக்கம்
- https://www.police.lk/index.php/special-events-/624-police-day-on-march-21
கருத்துகள்
கருத்துரையிடுக