இரு உனக்கோர் வேட்டு வரும் அது வரை பொறுப்போம்!

உலகையே அச்சுறுத்த வந்த தீய சக்தி கொரோனாவே!! இறை பக்தி கொண்டோரையும் கொன்ற கொடிய புத்தி உனக்கு! இதில் உனது யுக்தி என்னவோ?

நீ எத்தனை எத்தனை உயிர்களைக் கோழைத்தனமாய் காவு கொண்டாய்! சுகதேகிகளை தொற்றுக்குற்படுத்தி நோயாளர்களாக்கி மடியச்செய்து நோயாளர்களுக்கு வைத்தியம் செய்த வைத்தியர்களையுமல்லவா காவு கொண்டாய்!

நன்றாக நடமாடும் மனிதனை பிணமாக்கும் கொடியவனே பல்லாயிரம் உயிர்களை ருசித்து ருசித்துக் குடித்தாய்!

இன்னும் பல இலட்ச மக்களை வருத்தி வருத்தத்திலிட்டாய் இறந்த உடலையும் பார்க்கத் தடை அத்தனை கொடியவன் நீ!!

கொரோனா வேதனை தருபவன் நீ மரணம் தான் உன் மறுபெயரோ? கோரம் நீ கொரோனா அகோரம் உந்தன் செயற்பாடு!!

வளர்ந்து செல்லும் விஞ்ஞானத்திற்கு சவாலாக வந்துதித்தாயா? காற்றின் வேகத்தை விட காட்டுத் தீ வேகத்தை விடவும் கடும் வேகமாய் நீ முழு உலகத்தையுமே உலுக்கிவிட்டாய்!

எதிரே நிற்பவன் எவனோ அவன் எமனாய்த் தெரிகிறான்! உண்மையில் யாருக்கு யார் எமன்! முழு உலகமும் பீதியில் ஸ்தம்பித்து! ஒரே இறைவனிடம் நீதி வேண்டியே நாமும்!

உன்னை அடக்குவதற்காக முழு நாடும் தேசம் தேசமாய் கண்டம் கண்டமாய் உயிர் சேதத்தைக் குறைக்க ஊர் அடங்குச் சட்டம் எங்கும்!! சிறைப்படுத்தப்பட்ட உணர்வு!!

இதில் ஆயிரம் கஷ்டங்கள் பல்லாயிரம் நஷ்டங்கள் அத்தனையையும் சுகிப்போம் கொரோனா உனை ஒழித்திடவே! வாழ்நாளிலே கை கழுவிக் கழித்தது இந்த ஆண்டாகத் தான் இருக்க வேண்டும்! கைரேகைகள் அழிந்தாலும் பரவாயில்லை! உன்னைத் தொலைத்திடவே நிதமும் தினமும் யாவரும் கை கழுவுவோம்!

இரு உனக்கோர் வேட்டு வரும் அது வரை சமூகமே பொறுப்போம்! பொறுப்புணர்வோடு செயல்படுவோம்! மாண்புமிகு மனிதர்களே,

நாம் பிரிந்திருந்து தனித்திருந்து தூய்மையாகவிருந்து தூரவிருந்து துனிவோடிருந்து கொரோனாவை முடக்கிடுவோம்!! கொரோனா அடியோடு ஒழிந்திடு!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா பஸ்யால

கருத்துகள்