மாலை மயங்க, காற்றெழுதும் கவிதையாய் மேகங்கள் கரைந்தோட, கதிரவன் வருகையால் மாற்றங்கள் நடந்தேற, அந்தி நேரம் செம்மஞ்சலாய் உடைமாற்றிக் கொண்ட அப் பொழுது தனில் மூத்தவனை முடக்கும் முரணற்ற செய்கைக்காய் நரித்தந்திரம் மூட்டிக் கொண்டிருந்தவளுக்கு, அந்தி நேர மாற்றங்களுக்கு ஒப்ப சர்மி வாழ்வு இருளாக மாறிப் போவதில் அந்தளவு பிரியம் தான்.
ஆம் கணவன் மனைவியாய் சந்தோஷமாயிருக்கும் குடும்பத்தை நிர்க்கதியாய் பிரித்து விட அதீத ஆசை வாஹிதாவிற்கு.
தனது மகன் இறுதியாய் தன் நிலையை நிரூபிக்க நடாத்திய அரங்கேற்றம் அந்தத் தாயின் அகத்தே ஆணிவேராய் படர்ந்திருந்தது. தனக்கான மனைவி, குடும்பமென்றிருந்தும் தன்னை வருத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தவன் தான் ஏதாயினும் இறங்கிப் பேசினால் தன்வழிக்கு வந்துவிடுவான் எனக் கனவு கண்டாள். அதற்காகவே நேரம் பார்த்துக் கார்த்திருக்கவும் செய்தாள்.
"ஆதில்...."
"என்னம்மா?"
"இல்லடா நீயும் இந்த உம்மாவ தனிய விட்டுட்டு போயிடுவீயா?" ஆட்டோவில் ஏதோ சரி பார்த்துக் கொண்டிருந்தவன், விறாந்தையில் அமர்ந்து கொண்டு திடீரென ஏக்கமாய் கேள்வி கேட்ட தாயை திரும்பிப் பார்த்தான்.
"என்னம்மா இது திடீருன்னு?"
"இல்லடா, புள்ள புள்ளன்னு உசுறு போல வளர்த்துட்டு இப்போ தனிய இருக்கக்குல்ல எப்புடி கஷ்டமா இருக்கு தெரியுமா?" தன் தாயின் திட்டமறியாதவன் ஏதோ வலியால் பேசுவதாக நினைத்துக் கொண்டு,
"என்னம்மா இது நான் தான் இருக்கன்ல,"
"என்னதான் இருந்தாலும் பெத்த உள்ளம் பித்து டா. அவ் வயித்தால சுமந்துட்டு எந்தத் தொடர்புமே இல்லாம இருக்குறப்போ ரொம்ப வேதனயா இருக்கும் தெரியுமா?"
"என்னம்மா திடீருன்னு? சும்மா மனச போட்டு குழப்பிக்காதிங்கம்மா."
"என்னமோ தெரியல்லடா, மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு" சொல்லி முடிக்க முன்பே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஏதோ வலியால் துடிப்பது போல் நாடகம் ஆடத் துவங்கி விட்டாள்.
"உம்மா... என்னம்மா இது? நாநா கூட பேசுறீங்களா? நாநாவ பார்க்கனுமா? என்னம்மா செய்து? என்னன்டாலும் சொல்லுங்கம்மா" ஆத்திரமாய் தாயிடம் வினாத் தொடுத்தான் ஆதில்.
"நான் இருக்கப் போறது கொஞ்ச காலம் டா, இப்புடியே இருந்துட்டு போறன்" இன்னும் குத்துமாறு நீளமாய் கதை வளர்க்க,
"இரிங்கம்மா நாநாக்கு போன் போட்றன்" பதட்டமாய் அதீகை நாடி மொபைலை அழுத்த, உள்ளூற குளிர்ந்தாள் வாஹிதா.
"எனக்கு என்ன சரின்னா எப்புடியும் அதீக் தாங்கிக்க மாட்டான்" தனக்குள் எண்ணியவள்,
"என் புள்ள, என் புள்ள" என வாயால் முனங்கிக் கொண்டே சாய்ந்திருந்தாள்.
"ஹலோ..."
"ஆஹ் நாநா, நாநா... நீங்க, நீங்க.. எங்க இருக்கீங்க?"
"நான் ஆபிஸ் ல ஆதில் சொல்லு, என்ன திடீருன்னு?"
"நாநா உம்மா, உம்மாக்கு..."
"என்னடா என்ன உம்மாக்கு?"
"அது ஒன்னும் இல்ல நாநா, என்னமோ உங்க ஞாபகம் வந்துட்டு போல, உங்கள சொல்லிட்டே இருக்கா, நெஞ்சு பாரமா இருக்குன்னு வேற சொல்றா. எனக்கு பயமா இருந்துச்சு அதுதான்..."
"ஹே ஆதில், ஒன்னுமில்லடா.. இதோ நான் இப்ப, இப்பவே வந்துட்றன், நீ போன வெச்சிட்டு அவங்கள பார்த்துக,"
"ஹ்ம்ம் சரி நாநா" உருகிப் போன அதீக் மின்னல் வேகத்திலே தான் தாயின் பாதத்தடியில் தரிசனமானான்.
கருத்துகள்
கருத்துரையிடுக