அருள்மிக்க ரமழானில் அருள்பெற்ற மனிதர்களாகுவோம் - தொடர் 01

இரவு நேரத் தொழுகையின் சுபசோபனங்கள்

முதன்முதலாக நபிகளார் (ஸல்) அவர்கள் மதீனாவில் நுழைந்த போது மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கையும், நபிகளார் மீதான அளப்பரிய அன்பும் வைத்திருந்த அந்த மதீனத்து மனிதர்களுக்கு முதலாவதாக சுவர்க்கத்தை அடைவதற்கான வழிகளைக்கூறி தன் பேச்சைத் தொடங்கினார் நபிகளார் (ஸல்) அவர்கள்.

"மக்களே! நீங்கள் ஸலாமைப் பரப்புங்கள், உணவளியுங்கள், உறவுகளைப் பேணுங்கள், மக்கள் அனைவரும் தூங்கும் போது இரவில் நின்று வணங்குங்கள், அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால் நிம்மதியாக சுவனத்தில் நுழையலாம்" (திர்மிதி, இப்னுமாஜா)

ஸலாத்தைப் பரப்புவதும், பிறருக்கு உணவளிப்பதும், உறவுகளைப் பேணுவதும் பொதுவாக எல்லாக் காலத்திலும் ஏதோ ஒரு வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் இரவு வணக்கம் எனும் இபாதத் பொதுவாக பிற மாதங்களில் இருந்தாலும், இம்மாதத்தில் அதிகமாக உயிர்ப்பிக்கப்படல் வேண்டும்.

மேலும், இரவு நேரம் சிறப்பானது போலவே இரவு நேரத்தொழுகைகளும் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. இரவு நேரங்களை இறைவனுடனான நெருக்கத்துக்காக ஒதுக்குபவர்கள் பாக்கியசாலிகள். பகலில் பசித்திருந்தும், இரவில் விழித்திருந்தும் இறைவனுக்காக வாழ்ந்த ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் அவரவரது இறைவனுக்கான நேர ஒதுக்கல்களுக்கேற்ப பரக்கத்துகளையும், அருள்களையும் தனதாக்கிக் கொள்வார்கள். அந்த வகையில் குர்ஆனும், சுன்னாவும் இரவு நேரத் தொழுகையாளிகளுக்கு பின்வரும் சுபசோபனங்களைக் கூறுகிறது.

இரவுநேரத் தொழுகையாளிகள் அல்லாஹ்வின் அருளுக்கும், நன்மைக்கும் தகுதி உடையோராக மாறலாம்.

"அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள். இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும் பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்." (51 : 16-18)

இரவு நேரத் தொழுகையாளிகளை இறைவன் புகழ்கிறான். அத்தகையோரைப் பாராட்டுகின்றான். அந்த தொழுகையாளிகளை நல்லடியார்கள் கூட்டத்தில் பதிந்துகொள்கின்றான்.

"மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்கள் எனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்; அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், "உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்" என்று கூறி விடுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் இறைவனுக்காக ஸுஜூது செய்தும், நின்று வணங்கியும் இரவைக் கழிப்பார்கள்." (25 : 63-64)

இறைவனோடு உறவாட இரவு நேரத்தை ஒதுக்கியோர் தனது படைப்புகள், அத்தாட்சிகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்று இறைவன் சான்று பகர்கிறான்.

"நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில், அவ்வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டி, அறிவுறை கூறப்படும் போது அவர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து விடுகிறார்கள். மேலும் இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றார்கள். மேலும் அவர்கள் பெருமையடிக்கமாட்டார்கள். மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கையை விட்டும் உயரந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனைப் பிரார்த்திக்கின்றார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றார்கள். அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள்." (32 : 15-17)

தொழுபவர்களும், காரணமின்றி தொழாதவர்களும் சமமாக மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.

"(இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்கின்றான்; மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்: "அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்." (39:9)

இரவு நேரத் தொழுகைகள் உடல் சார்ந்த நோய்களுக்கும், உள்ளம் சார்ந்த நோய்களுக்கும் நிவாரணியாக அமையும்.

"நபி (ஸல்) கூறியதாக ஸல்மானுல் பாரிசி (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். இரவு நேரத் தொழுகைகளை பேணிப்பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு முன் சென்ற நல்லோர்களின் வழிமுறையாகும். அது உங்கள் இறைவனுடன் உங்களை நெருக்கமாக்கி வைக்கும். பாவங்களுக்குப் பரிகாரமாகும். குற்றங்களைத் தடுக்கும். உடலிலிருந்து நோய்களை நீக்கும்.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இரவு நேரத் தொழுகைகளை எமது இராக்காலங்களில் உயிர்ப்பிப்போம். இரவுத் தொழுகைகளை நிறைவேற்றி இந்த அருள்மிக்க மாதத்தில் அருள்பெற்ற மனிதர்களாக மாற முயற்சிப்போமாக. வஸ்ஸலாம்.

ஸாஜித் ஸம்மூன் (நளீமி)

கருத்துகள்