அறியாமை எரிந்து சாம்பலாகட்டும்

இருள்படர்ந்த ஒரு எதிர்காலம் கண்களில் நிழலாடுகிறது. ஏப்ரல் 21ல் ஒரு திருப்பு முனை வந்தது. அதனை ஒரு இறை அடையாளமாக கண்டோம். அதில் பாடம் கற்கும் போதே கொரோனா இன்னொரு திருப்பு முனையாக குறுக்கிடுகிறது. இதுவும் இறைவன் தந்த மற்றுமொரு அடையாளமே.

கசப்பான அனுபவங்கள் தான் இரண்டிலும் கிடைத்துள்ளது. ஆனால் பாடம் பெற்றோமா? பாதை மாறினோமா! மாறும் வரையில் அடையாளங்கள் பஞ்சமில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

இரவு எவ்வளவு நீண்டு சென்றாலும் விடிவெள்ளி உதிக்கும். அந்த நம்பிக்கை ஒன்று தான் ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியம் கூறுகிறது.

உரிமைகள் இழக்கலாம். உடமைகள் எரியலாம். கட்டைகள் சாம்பலாகலாம். ஆனால் உணர்வுகள் சாகக்கூடாது. சிந்தை கலங்கக் கூடாது. துணிவு தளரக் கூடாது.

கொந்தளிக்கும் இந்த நேரத்தில் கரைசேர எத்தணிக்கும் பயணிகள் நாம். கடலில் கொந்தளிப்பு என்று கரைக்கு வந்தால் அங்கு நெருப்பு பற்றி எரிகிறது. அதற்காக கலங்கத் தேவையில்லை.

அறிவு எரியும் நெருப்பாய் இருந்தால் எதிர்கலம் தெளிவாய் தெரியும். தெளிவு புதிய பாதைகளை காட்டும். புதிய பாதை வந்தால் எதிர்பார்ப்பு பயணிக்க துடிக்கும். துணிவு பிறந்தால் மனது இயங்கும் வாழ்வு உயரும். உள்ளத்தில் தூய ஈமான் உள்ளவரை புதிய மாற்றம் குறித்து கிஞ்சித்தும் அஞ்சத் தேவையில்லை.

முஹம்மத் பகீஹுத்தீன்

 

Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்