இங்கு தன்னவனைக் காண வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தவளின் நிலை இளவுகாத்த கிளியாக, அதீகிற்கு அழைப்பு செய்து எங்கிருக்கிறார் என்பதனை விசாரித்துக் கொள்வோமா என்றிருந்தும் ஏதோ அவள் அகம் தடுக்க, பக்கத்தில் கணவனின்றி விசும்பிக் கொண்டிருந்தாள்.
"புள்ள மகன் வரல்லயா இன்னம்" ராபியாவுக்கும் ஏதோ சங்கடமாயிருக்க, பதிலுக்கு வார்த்தைகளை விடாது மௌனியாய்க் கிடந்தாள் சர்மி. நேரம் பார்த்து அதீக் தரப்பிலிருந்து அழைப்பு வர, அதற்காகவே காத்திருந்தவளாய்,
"ஹலோ ஹபி எங்க இருக்கீங்க? வந்துட்டீங்களா? வீட்டு முன் கதவ திறக்கட்டுமா?"
கணவனுக்கு பேச விடாது கேள்விகளை தொடுத்தவளின் நிலையை நன்கு ஊகித்துக் கொண்டாலும் தற்பொழுதைக்கு எதுவும் செய்ய முடியாது அவனுக்கு.
"நோ மா.. நான் இன்னக்கி வரல்ல தங்கம்.. டுமோரோ ஏர்லி மோர்னிங் வாரன்."
அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே,
"மகன்"
என அழைத்துக் கொண்டு அதீகின் தாய் வாஹிதா அவ்விடம் வர சர்மியின் அழைப்பைத் துண்டித்து விட்டான் அதீக்..
உண்மையில் இந் நிலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது நொந்து போனாள் சர்மி.
"ஹபி"
அவனையே நினைக்கும் அவள் வதனத்தில் என்றுமில்லாத ஓர் ஏக்கம் எட்டிப் பார்க்க,
"கடவுளே என் புள்ளய திரும்ப சோதிச்சிடாத" மனதால் அழுதாள் ராபியா.
அன்றிரவு மூத்தவன் அருகிலிருக்கும் மகிழ்ச்சியை விட, அந்த சர்மியை விட்டு தன் மகனை தூரமாக்கி விடலாம் என்ற நம்பிக்கையே அதிகமாக என்றுமில்லா மகிழ்ச்சியை உணர்ந்த வாஹிதா, மகனின் மனதில் இடம் பிடிக்க ஆரவாரமாய் சமையல் ஏற்பாடுகளை கவனிக்கலானாள்.
"உம்மா..." தாயை அழைத்தது அதீக் தான்.
"என்னடா? வா இப்புடி, உனக்கு என்ன எல்லாம் புடிக்குமோ அதுதான் இன்னைக்கு சமையல் வா... இப்புடி வந்து பாரு."
"அது இல்லம்மா..."
"அப்போ என்னடா?" மகன் சொல்ல வரும் விடயத்தை உணராமல் இல்லை அத்தாய்.
"சர்மி உண்மையிலேயே பாவம் மா!"
"அதீக் இதுக்கு மேல அவள்ட புராணம் பாடாத..."
"அப்புடி இல்லம்மா"
"அதீக் பிலீஸ்..." வாயடைந்து போனவனின் நுனியில் தன்னவள் குறித்து ஒப்புவிக்க வார்த்தைகள் நிறைந்திருந்தன.
"அதீக் இங்கபாரு..."
மகனின் மனதை மாற்றும் மாற்று வழிகளை மண்டையில் போட்டுக் கொண்டு வாய்திறந்த தாயை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அதீக்.
கருத்துகள்
கருத்துரையிடுக