நான் இறந்துவிட்டால் அத்துடன் என் பற்றிய எல்லா புகார்களும் நின்றுவிடக்கூடும் இல்லையா?
நான் இறந்துவிட்டால்.. எனதிந்த எல்லா குற்றவுணர்வுகளிலிருந்தும் முழுதாய் என்னால் நீங்கிட முடியும்தானே?
எனதிந்த எல்லா கடமைகளிலிருந்தும் முற்றிலுமாய் என்னால் விலகிட முடியும்தானே?
எனதிந்த எல்லா பொறுப்புகளிலிருந்தும் மொத்தமாய் என்னால் விடுபட முடியும்தானே?
நான் இறந்துவிட்டால்.. எனக்கும் யாரேனும் ஒரு இரங்கல் கவிதையை எழுதக்கூடும் இல்லையா?
அதன் ஒவ்வொரு ஹார்ட்டினிலும் நன்றியோடு என்னை அவர்கள் நினைத்திடக்கூடும்.
"இறந்தவர்களை தவறாக பேசாதே.." என என் எதிரிகளை யாரேனும் வாயடைக்கச்செய்யக்கூடும் இல்லையா?
அப்போது என் தவறுகள் யாவும் நிபந்தனைகளற்று மன்னிக்கப்பட்டு விடக்கூடும்
எதற்காக நான் அவ்வளவு அவமானப்படுத்தப்பட்டேனோ அதற்காகவெல்லாம் என்னை யாரேனும் கொஞ்ச காலம் கொண்டாடக்கூடும் இல்லையா.?
அப்போது என் புறக்கணிக்கப்பட்ட நேசமொன்று மாசற்ற ஒரு மலர் போல இந்த பூமியில் சில காலம் வலம் வரக்கூடும்.
இன்னும் யார் யாருக்கு நான் என்னன்னவாக இருந்தேன். எதை எதையெல்லாம் பணயம் வைத்தேன்.
எத்தனை எத்தனை முறைகள் நான் மறுதலிக்கப்பட்டு திரும்பினேன் என்பதெல்லாம் கூட ஒரு பழங்கதையாக சுவடற்று போய்விடக்கூடும் இல்லையா?
நினைத்துப்பார்க்க அவ்வளவு வேடிக்கையாய் இருக்கிறது..
நல்லவேளை அதையெல்லாம் காண அப்போது நான் உயிரோடிருக்க மாட்டேன் என்பதில்தான் எத்தனை நிம்மதி!!!
ரிஸ்கா முக்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக