விழியோரம் கசிகிறது என் உணர்வுகள். துணிவின்றி துவள்கிறேன் இயலாமையால். கோழையாய்ப் போனேனா? - இல்லை, கோழைக்கே சின்னமாய்ப் போனேனா?
எதையும் எதிர்த்திடும் பழைய துணிவு எங்கே? - தேடுகிறேன் என்னையே என்னுள்...
என்னையும் என் திறமைகளோடு மண்ணில் புதைத்திட்டீரோ? என்னதான் தவறு கண்டீர் நான் மொழியறிந்து படிப்பறிவதிலே?
எனக்கு நலன் செய்வதாய் என்னை மணமேடையில் அமர்த்திட்டீர்... பெண் கல்வி நாளை சமூகத்தின் கல்வி என்பதை மறந்தே தானோ...
தளிர்விட்டதை அறுவடை செய்யும் ஆவல் கொண்டேன்... அதனை வேரோடு பிடுங்கி எறிந்தது தான் நியாயமா?
கண்கள் மின்ன கனவுகள் கண்டேன் அன்று... கண்கள் கரைந்திட கண்ணீர் காண்கிறேன் இன்று...
இன்னொரு "நான்" இந்த சமூகத்தில் உருப்பெற்றிட வேண்டாமே கதறுகிறது என் இதயம்..
தலை நிமிர்ந்திடும் அழகிய ரோஜாக்கள் பூத்திடட்டுமே வேண்டிடுகிறது என் உள்ளம்...
சகோதரனே ஒத்துழைக்க மாட்டாயோ உன் சகோதரிக்காய்... தந்தைமார்களே வழிகாட்டிட மாட்டீரோ உங்கள் செல்வத்திற்காய்...
அன்னையே புரிந்து கொள்ள மாட்டீரோ உங்கள் மகளின் கனவுகளை.. நாளை அவர்களும் விண்மீன்களாய் ஒளி வீசிடட்டுமே...
என் போல் அடுப்பின் சாம்பலில் புதைந்து மறைந்திடாமல்...
இப்படிக்கு என் பேனா
கருத்துகள்
கருத்துரையிடுக