அருட்கொடைகள் அமானிதங்களாகும்

அல்லாஹ்வின் பேரருளால் அவன் அளித்த அருட்கொடைகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை நாள்தோறும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மனிதனால் கணக்கிட்டுச்சொல்ல முடியாத, எண்ணற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள் எம் முன்னால் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல கண்ணுக்குப் புலப்படாது மறைந்தும் இருக்கின்றன. இறைவன் குர்ஆனில் இப்படிக் கூறுகின்றான்.

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا

“அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது”.

அதே அத்தியாயத்தில் இன்னொரு இடத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ

“மேலும், உங்களுக்கு கிடைத்திருக்கின்ற (வாழ்க்கை வசதிகள்) அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் தாம்” (அத்தியாயம் 16: வசனம்: 53)

இவ்வுலகில் மனித சமூகத்தை வாழ வைக்க அல்லாஹ் வழங்கியிருக்கும், எண்ணிலடங்கா நிஃமத்துகள், பாக்கியங்கள் யாவும் அல்லாஹ்வின் அருட்கொடையே!

அவன் கொடுத்த அருட்கொடைகளை வைத்து மனிதன், அவனை அல்லாஹ் கௌரவப் படுத்திவிட்டான் என்பதாகவும், அவனுக்கு உலக வாழ்வில் ஏதாவது நெருக்கடி பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டால், அவனை அல்லாஹ் கேவலப்படுத்தினான் என்பதாகவும்தான் நினைக்கின்றான்.

ஆனால் உண்மை அதுவல்ல. மனிதனுக்கு அவன் இவ்வாறான நிலைமைகளை உண்டு பண்ணுவது, அவனை சோதித்துப் பார்ப்பதற்காக தான். அதனையே, பின் வருமாறு அல் குர்ஆன் பேசுகிறது.

89:15 فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ‏

ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான். (89:15)

89:16 وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏

எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான். (89:16)

அறிவு, ஆற்றல், திறமை, செல்வ செழிப்பு, பிள்ளைப் பாக்கியம், குடும்ப கௌரவம் போன்ற அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகளாகும். அவைகளை வைத்து அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான். மனிதனுக்கு ஏற்படும் பீதி பொருளாதாரத்தில் பின்னடைவு, உயிர் இழப்புகள் ஆகியன அல்லாஹ்வின் சோதனைகளாகும். அவைகளை அவன்தான் எமக்கு கொடுத்தான். அவன் நாடியதை அவனுக்கு செய்ய முடியும் அதற்கு அவன் சக்தி பெற்றவன் அல்லாஹ் அல் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

ولنبلونكم بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (2:155)

”மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்” (அல்குர்ஆன்: 2:155)

உலகம் என்பது சோதனைக் கூடமாகும். அவன் எவ்வாறும் எம்மை சோதிக்கலாம் அவன் தந்த அருட்கொடைகளை அனுபவித்து நன்றி செலுத்துகின்றோமா? இல்லையா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எமக்கென்றிருக்கும் எதுவும் நிரந்தரமானதல்ல. நாம் மரணித்த பின்னர் இந்த சொத்துக்கள், இந்த காணி நிலங்கள்அனைத்தும் இன்னுமொரு கூட்டத்தினருக்கு சொந்தமாகிவிடும். அனந்தரச் சொத்தாக மாறிவிடும். எமது பிள்ளை குட்டிகள் அவைகளை பங்கு போட்டு விடுவார்கள். மரணத்திற்கு முன் உங்கள் சொத்து செல்வங்களை மார்க்கம் கூறியபடி அவரது வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்துவிடுங்கள். இதற்கு “பாகப்பிரிவினை” எனப்படும். இவ்வாறு நீங்கள் பிரித்துக் கொடுக்காவிட்டால் உங்கள் மரணத்திற்கு பின்பு உங்கள் வாரிசுகள் சண்டை பிடித்துக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

நான் கூறியது போன்று நாம் மரணித்தவுடன் நாம் அனைத்திற்கும் பிரியா விடை கூறி விடுவோம். ஆனால் மூன்று விடயங்கள் நாம் மரணித்தாலும் அந்த பாக்கியங்கள் பூமியில் வாழும்.

முதலாவது, அறிவு (கல்வி, ஞானம்) ஒருவர் தனக்கு இருக்கும் அறிவை வைத்து புத்தகம் எழுதுகின்றார் அல்லது ஒரு தொகுப்பை தொகுக்கின்றார் எப்போதும் அவருடைய மனத்தூய்மையை பொருத்து சமூகத்தில் பெரும் பயனை கொடுக்கும்.

எமக்கு முன்னால் வாழ்ந்த நல்லோர்களின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள்! உதாரணமாக இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் பெரும் அறிஞராவார். சிரமப்பட்டு ஹதீஸ்களை தேன்துளித் தேடலாக தேடி முடித்தார். இன்று எம்முடன் அவர் இல்லை. மரணித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் எழுதிய அருமையான புத்தகங்கள் (கிதாபுகள்) எமது கரங்களில் தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரம் ஆயிரம் தடவைகள் முழு உலகிலும் அப் புனிதர்களின் நாமங்கள் பிரஸ்தாபிக்கப் படுகின்றன. எனவே நீங்கள் மரணிப்பதற்கு முன்பு சமூகத்திற்கு பயன் கொடுக்கின்ற நல்ல பல நூல்களை தொகுத்து விட்டு மரணம் அடையுங்கள். அவைகள் சமூகத்திலே பெரும் மாற்றங்களை உருவாக்கலாம்.

அறிவு வளங்களுக்கு உரிமையாளர்களே! திறமைசாலிகளே! உங்களுக்கு இறைவன் வழங்கிய அறிவு எனும் அருட்கொடைகளை வைத்து சமூகத்திற்கு பயன் மிக்கதாக மாற்றுங்கள்! உங்களைப் போன்ற பலநூறு திறமைசாலிகளை உருவாக்கிவிட்டு கண் மூடுங்கள்! உங்களின் அறிவு ஆற்றல் விடயமாக இறைவன் நிச்சயமாக வினா எழுப்புவான். உங்கள் மரணத்தால் அறிவும், ஆற்றலும் மண்ணுக்குள் மங்கி, மறைந்து விடக்கூடாது!. இவ்வாறான நிலையில் நீங்கள் மரணித்தால் சுயநலவாதியாகத்தான் வாழும் காலத்தில் வாழ்ந்து இருக்கிறீர்கள். சமூகம் உங்களினால் அறிவு சார்ந்த பெரிய இலாபத்தை பெறவில்லை!

ஆகவே நீங்கள் சரியான ஒரு ஆசிரியனாக ஆசானாக இருந்தால், உங்கள் மரணத்திற்குப் பின்னால் சமூகம் படித்து பயன் பெறவும் ஏதாவது ஒன்றை விட்டுச் செல்லுங்கள்!

இரண்டாவது, இறைவழியில் நாம் கொடுத்த வக்புகளாகும்.

அவைகள் எதுவாக இருந்தாலும் சரி, நாம் இப்போது உட்கார்ந்திருக்கும் பள்ளிவாயல் வக்பு செய்யப்பட்ட ஒன்றாகும். சிலவேளை எமது பாடசாலைகள் மதரசாக்கள் வைத்தியசாலைகள் போன்றன, ஒருவரினால் அல்லாவிற்காக வக்பு செய்யப்பட்டவைகளாகும். எமது முன்னோர்கள் கட்டிடங்களை கட்டி இருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல அவர்களுடைய நாமங்களும் அங்கே பொறிக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரைக்கும் நாம் அதை பேசுகின்றோம். எதிர்காலத்திலும் நிச்சயமாக பேசப்படுவார்கள். இதுதான் சதக்கா ஜாரியாவாகும்.

எனவே, எமக்கு முடியுமான வக்பு, உதவிகளை செய்துவிட்டு மரணிப்போம். அதனூடாக பின்னால் வருகின்ற சமூகம் பூரண நன்மை பெறுவார்கள். அல்லாமா இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது, நபித் தோழர்கள் அனைவருக்கும் வக்பு இருந்தது. அதாவது வக்பு செய்துவிட்டுத்தான் இம்மண்ணில் இருந்து விடைபெற்றார்கள். அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை அவன் பாதையில் செலவழித்துவிட்டு மரணிப்போம். சில நேரம் அதை எமது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு மரணித்தால் அவர்கள் அதை பங்கு போட்டு விற்று விடுவார்கள். பின்பு அவர்களும் பெறுவதற்கு தகுதி பெற்றுவிடுவார்கள். இப்போதுள்ள சமூகம் இதைத்தான் கடைபிடிக்கிறார்கள் அதை நாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

பிள்ளைகளுக்கு கொடுத்த காணி, பூமிகள் சொத்து செல்வங்கள் விற்கப்பட்டு இல்லாமல் போனாலும், அதை யாராலும் தட்டிக் கேட்க முடியாது! ஆனால் வக்பு சொத்துக்களை யாருக்கும் கைமாறு செய்துவிடமுடியாது! அவைகளை விற்று விட முடியாது. நாட்டு சட்டத்தில் கூட, வக்பு செய்யப்பட்டவைகளை விற்பதற்கு அனுமதி கிடையாது.

மூன்றாவது, நாம் விட்டுச் செல்லும் நல்ல பிள்ளைகள் சாலிஹான குழந்தைகளாகும்.

குழந்தை பாக்கியமும் மிகப் பெரும் அருட்கொடையாகும். அவர்களை மிகச் சரியாக வழி நடத்தி, அவர்களுக்கு கல்வி, ஒழுக்கம் போன்ற போன்றவைகளை கற்றுக்கொடுத்து சமூகத்திற்கு அவர்களை ஒப்படைப்பது என்பது பாரிய பொறுப்பாகும். இந்த பிள்ளைகளையும் யாருக்கும் கைமாறு செய்ய முடியாது. இவர்களை இன்னொருவருக்கு விற்றுவிட முடியாது. இவர்கள் உங்களுடைய மண்ணறைக்கு நன்மையை அள்ளித் தரும் செயல்களையே செய்து கொண்டு இருப்பார்கள். அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ ۚ فَإِن لَّمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ ۚ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُم بِهِ وَلَٰكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا (الأحزاب-5)

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (33:5)

நாளைக்கு மறுமை நாளில் கூட தனது தந்தையாரின் பெயரையும் சேர்த்துத்தான் அழைக்கப்படும். இன்னாருடைய மகன் இன்னார் என்று அழைக்கப்படும். உண்மையில், பெற்றோர்களுக்கு ஈடாக எந்த ஒன்றும் இருக்கமுடியாது!

قوله تعالى : ( آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما) سورة النساء -11 ) .

உங்கள் பெற்றோர், பிள்ளைகள் ஆகிய இவர்களில் நன்மை செய்வதில் யார் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். இதனால்தான் இந்த பாகப்பிரிவினை செய்யும் முறை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வின் இந்த சட்ட விதிமுறைகள் பற்றி நன்கு அறிந்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (4:11)

சில பெற்றோர்கள் தனது குழந்தைகளின் ஊடாக சொர்க்கம் செல்வார்கள். சில குழந்தைகள் தனது பெற்றோர்களின் ஊடாக சொர்க்கம் செல்வார்கள். எனவே, குழந்தைகளும் சொத்துக்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

عن أبي هريرة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم قال: ((إذا مات الإنسانُ انقطع عنه عملهُ إلا من ثلاثةٍ: إلا من صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له))؛ رواه مسلم

ஒரு மனிதன் மரனித்து விட்டால் அவனுடைய எல்லா செயல்களும் துண்டிப்புப்பெற்றுவிடுகின்றன. ஆனால் மூன்றே மூன்று விடயங்கள் மட்டும் (கூலி)கிடைத்துக் கொணடிருக்கும்.

அவன் உயிரோடு இருக்கும் போது கொடுத்த ஸதகதுல் ஜாரியா. மக்கள் பயன்பெரும் வகையில் விட்டுச்சென்ற கல்வி அறிவு. அவனுக்கு துஆ செய்கின்ற ஸாலிஹான பிள்ளை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்.முஸ்லிம்)

இன்னொரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

يقول عليه الصلاة والسلام: (( كفى بالمرء إِثما أن يُضَيِّع مَن يقوتُ ))

[ أخرجه مسلم وأبو داود عن عبد الله بن عمرو بن العاص ]

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது; ஒரு மனிதன் தனது பொறுப்புக்கு கீழ் இருப்பவர்களை தீன், துன்யா ஆகிய இரண்டிலும் நல்ல முறையில் பராமரிக்காது, வீணடித்து விடுகின்ற பாவம் ஒன்றே அவனுடைய அழிவிற்கு போதுமானது. (நூல் : முஸ்லிம், அபூதாவூத்)

மேற்குறிப்பிடப்பட்ட நபி நபி மொழியின் பாரதூரத்தை புரிந்துகொள்ளுங்கள்! இவ்வாறு பிள்ளைகளை ஈண்டெடுப்பதற்கு ஆசையோ அதேபோன்று அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, இஸ்லாமிய ஒழுக்கம், வெட்கம் நாணம் உள்ள பிள்ளையாக வளர்ப்பதற்கும் ஆசை இருக்க வேண்டும்!

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள இம்மாபெரும் அருட்கொடையை பாழாக்கி விடுவீர்களாயின், பிள்ளைகளை சரியான முறையில் வழி நடத்த தவறிவிடுவீர்களாயின், அடுத்த தலைமுறையை நீங்கள் வழி நடாத்த தவறி விட்டீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

இது குடும்ப சீரழிவு மாத்திரமல்ல! சமூக சீரழிவையும் ஏற்படுத்தக்கூடியது. நாங்கள் மரணித்து மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனால், உலகில் நடைபெறும் அநியாயங்களுக்கு, அட்டூழியங்களுக்கும் நாங்கள்தான் காரணமாக இருப்போம். உலகில் உண்ண உணவும் அணிய ஆடையும் வசிக்க வீடும் கொடுத்தோம். ஆனால், ஒழுக்கத்தை கற்பிக்க மறந்துவிட்டோம். சீரிய கல்வியை கொடுக்க தவறி விட்டோம் அதனால், உலகில் இன்று அநீதிக்கு அநியாயத்திற்கு துணை போகின்ற பிள்ளைகளை உருவாக்கி விட்டு சென்றுவிட்டோம் என்ற நிலை வந்துவிடக்கூடாது.

நாளை சமூகத்தில் ஒரு சில தவறுகள் நடந்து விட்டால் அவர்கள் பெற்றோர்களையும் இணைத்துத் தான் பேசுவார்கள். சுருக்கமாக, வளர்ப்பு சரியில்லை என்று நமது ஊர் வழமையில் கதைத்துக் கொள்வார்கள். இந்த நிலையிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அன்பு பெற்றோர்களே! குடும்பத் தலைவர்களே!

அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடையான இந்த பிள்ளைகள் விடயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்! அவர்களுடன் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்! உங்களைப்பற்றி, உங்கள் நடத்தைகளைப் பற்றி நாளை உங்கள் மறைவிற்குப் பிறகு பேச இருக்கிறார்கள். மறந்துவிடாதீர்கள்! சமூகத்தில் தற்போது பெற்றோர்களை திட்டிக் கொண்டும் பேசிக் கொண்டும் சில பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்! உங்களுக்கு துஆ செய்கின்ற குழந்தைகளாக அவர்களை மாற்றிவிட்டு செல்லுங்கள்!

கெட்ட குழந்தைகளினால் சமூகச் சீரழிவுகள் உண்டாகும்! அல்லாஹ் எமக்கு அளித்துள்ள பெரும் அருட்கொடைகளில் ஒன்றான குழந்தை செல்வம் முக்கியமானதாகும். அவர்களை நாம் சமூகத்திற்கு ஒப்படைக்கும் பொழுது, சிறந்த குடும்பத் தலைவனாக, சிறந்த கணவனாக சிறந்த துணைவியாராக, சிறந்த ஒரு ஆசிரியனாக, சிறந்த ஒரு வைத்தியராக சமூகத்திற்கு நாம் அவர்களை அன்பளிப்புச் செய்ய வேண்டும்!

அனைத்துத் துறைகளிலும் நல்லவர்களை சமூகம் சந்திக்கத் தவறும் பொழுதுதான் சமூகச் சீரழிவுகள் உண்டாகின்றன. எம் கண்முன்னால் இன்று எத்தனை விவாகரத்துகள் நடைபெறுகின்றன. இதற்கான காரணத்தை அலசி, ஆராய்ந்து பாருங்கள்! பெரும்பாலும் பெற்றோர்களின் வளர்ப்பில் ஏற்பட்ட தவறாகத்தான் இருக்கும்.

உண்மையில் பெண் பார்க்கும் பொழுது, மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாமல் உலக இலாபங்களை மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுகின்றன. குடும்பப் பின்புலங்கள் எப்படிப் போனாலும் மாப்பிள்ளைக்கு சொத்துக்கள் கிடைத்துவிட்டால் போதும் என்றுதான் பெற்றோர்களும் சிந்திக்கின்றனர். இனி எவ்வாறு குடும்ப நிறுவனம் சீராகும்?

கட்டாயம் திருமணம் முடிக்கவிருக்கின்ற குடும்பத்தில் யாராவது ஹராமான வழியில் பிறந்துள்ளனரா? என ஆராய்ந்து பாருங்கள்.! புறம் பேசுவது இஸ்லாத்தில் கூடாது ஆனால் திருமணத்திற்கு முன்னால் குறித்த ஆணையும், பெண்ணையும் பற்றி விசாரிக்கும் போது, தாராளம் புறம் பேசலாம். அவர்களைப் பற்றி துருவி ஆராயலாம். இது பாவமாக மார்க்கத்தில் கருதப்படமாட்டாது!

குடும்பப் பின்னணியின் நிலைமையை தேடவேண்டும் ஏனெனில் குறித்த அக்குடும்பத்தில், விபச்சாரம் போன்ற பாவங்கள் நடைபெற்றிருந்தால் பின்வருகின்ற சமூகங்களில் அது தாக்கம் செலுத்தலாம். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரம் ஒரு கடனை போல. அது ஒருவரினால் இடம்பெற்றால் அதே குடும்பத்தில் யாராவது ஒருவர் எப்போதாவது விபச்சாரக் கடன் மறுபடியும் மீட்கப்படும்.

ஆகவே, எதிர்கால சந்ததியினரை பாதுகாருங்கள்! குடும்பத்தைப் பற்றி விசாரியுங்கள்!

வெறும் சொத்துக்காக அல்லது வெறும் அழகிற்காக மாத்திரம் திருமண ஒப்பந்தங்கள் நடைபெறக் கூடாது! திருமணத்திற்கு முன்னாள் இருக்கின்ற நபிகளாரின் வழிகாட்டல்களை நூற்றுக்கு நூறு வீதம் பின்பற்றுங்கள்.

இரண்டாவது ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கின்றது ஆனால் அதற்குள்ள சட்டத்தை பின்பற்ற வேண்டும். அது மாத்திரமல்ல நாட்டு சட்டத்தையும் பின்பற்ற வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டக்கோவை கூறுகின்ற பிரகாரம் இரண்டாவது திருமணங்கள் நடைபெற வேண்டும்!

இல்லாதபட்சத்தில் அவைகளுக்கு திருமணம் என்று கூறமுடியாது அவ்வாறு சட்ட ஒழுங்குகளை பேணாது திருமணம் முடித்து, பிள்ளைகளும் கிடைத்துவிட்டன. அவர்களுக்கு மார்க்கத் தீர்ப்பு என்ன என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! இவ்வாறு முறைகேடாக நடந்த திருமணங்களில் கிடைத்த பிள்ளைகளும் இப்போது சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக. மன்னிப்பானாக. தயவுசெய்து சமூகத்தை பாவத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுங்கள்!

ஆண்களே! நீங்கள் இரண்டாவது பெண்ணை திருமணம் முடிப்பதற்காக பொய் கூறி அவர்களை ஏமாற்றாதீர்கள்! முதல் பெண்ணின் முழு அனுமதியுடன் இரண்டாவது பெண்ணை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்!

பெண்களே! உங்கள் கணவர் இரண்டாவது, திருமணம் முடிப்பதற்காக தயாரானால், அதற்கு தடையாக நீங்கள் இருக்காதீர்கள்! இஸ்லாம் அனுமதித்ததை நீங்கள் மறுக்காதீர்கள்.

இரண்டு திருமணங்கள் முடித்த ஆண்களை நோக்கிப் பேசுகின்றேன், உங்கள் மனைவியர்கள் இரண்டு பேர்கள். அவர்களால் கிடைக்கப்பெறும் பிள்ளைகளுக்கு வெவ்வேறு தாய்மார்கள் ஆனால், பிள்ளைகளுக்கு நீங்கள் ஒருவரே தகப்பனாக இருக்கின்றீர்கள். அப்பெண்கள் இருவரை மாத்திரமல்ல குழந்தைகளையும் நீங்கள் ஒரு கண் கொண்டு தான் பார்க்கவேண்டும்! உங்களது நீதம் செலுத்துகின்ற அளவுகோல் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்!

ஏற்றத்தாழ்வுகளை காட்டும் வார்த்தைகளை குழந்தைகளிடத்தில் விதைப்பது அநியாயம். இதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, “என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். அறிவிப்பாலர் : ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்), நூல் : புகாரி (2587)

நபி (ஸல்) அவர்கள், “என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்” என்று கூறினார்கள் என்று புகாரி (2650) வது செய்தியில் உள்ளது.

மேல் நாம் பார்த்த இந்த ஹதீஸின் ஊடாக பல படிப்பினைகள் எமக்கு இருக்கின்றன. உண்மையில், அந்த அம்ரா பின்த் ரவாஹா (ரழி) அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சாட்சியாக வைக்குமாறு வேண்டியது அந்தப் பெண்ணின் புத்தி சாதுர்யத்தை எடுத்துக்காட்டுகிறது.

அல்லாஹ்வின் தூதரிடம் சென்ற அந்த ஸஹாபிக்கு நபியவர்கள் கேட்ட கேள்வி எம்மை, மாத்திரமல்ல முழு உலக மக்களுக்கும் நீதி என்றால் என்ன? அநீதி என்றால் என்ன? என்கின்ற பெரும் பாடத்தை கற்றுத் தருகிறது.

எனவே பிள்ளைகள் விடயத்தில் முதல் மனைவியின் மூலம் கிடைத்த பிள்ளைகளுக்கு ஒருவிதமாகவும், இரண்டாவது மனைவியிடாக, கிடைத்த பிள்ளைகளுக்கு மற்றுமொரு விதமாக வேறுபடுகாட்டி நடப்பது, பெரும் அநியாயமாகும்.

எமது சமூகத்தில் இடம்பெறும் அநியாயங்களை, அட்டூழியங்களை கேள்விப்படும் பொழுது வேதனையாக இருக்கின்றது. இரு திருமணங்கள் முடித்துவிட்டு வித்தியாசம் காட்டுகின்றார்கள். இரு மனைவிகளின் ஊடாகவும், கிடைத்த பிள்ளைகள் ஒரு பாடசாலையில் கல்வி கற்கிறார்களொன்றால், அவர்களுக்கு அணிவிக்கப்படும் ஆடைகள், கல்விக்கு தேவையான உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், கொப்பிகள் அனைத்தும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும்! அவர்களுக்கு மத்தியில் ஏதாவது ஒன்றில் வேற்றுமை காட்டிவிட்டால் மனம் உடைந்து போவார்கள். நீங்கள் அல்லாஹ்விடம் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.!

சில நேரம் இரு திருமணங்களால் கிடைக்கப்பெற்ற அக்குழந்தைகள் வெவ்வேறான பாடசாலைகளில் படிக்கலாம். அப்போது பெற்றார் கூட்டங்கள் வருகின்ற பொழுது ஒரு பிள்ளை கற்கும் பாடசாலைக்கு மாத்திரம் சென்று, மற்ற மனைவியால் கிடைத்த பிள்ளைகளின் பெற்றார் கூட்டங்களுக்கு தன்னிடம் இருக்கும் வாகன ஓட்டுனர்தான் கலந்து கொள்ள வேண்டுமாக இருந்தால், அதுவும் பெரும் அநீதியாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்!

நண்பர்களே! அல்லாஹ்வின் அடியார்களே! மார்க்கத்தை முதலில் படியுங்கள்! பின்பு இரண்டு திருமணம் அல்ல மூன்று நான்காக மணம் செய்து கொள்ளலாம். இஸ்லாம் இதற்கு தடை செய்யவில்லை! இருக்கின்ற ஒரு பெண்ணிற்கு இன்னும் ஒழுங்கான முறையில் உரிமைகளை, கடமைகளை செய்து கொடுக்கவில்லை! இந்நிலையில் இரண்டாவது, திருமணம் தேவைதானா? சிந்தியுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

இனிமையான குடும்ப வாழ்வு என்கின்ற தலைப்பு விரிவானது. குறுகிய நேரத்தில் இவைகள், அனைத்தையும் இங்கே பேசிவிட முடியாது! அல்லாஹ்வின் அருட்கொடைகள் என்ற தலைப்பில், இவைகளையும் நான் சுட்டிக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

அல்லாஹ்வின் விதிப்படி விவாகரத்து நடந்து விட்டதென்று வைத்துக் கொள்ளுங்கள்! அதற்குப்பின்னால் இருக்கின்ற குழந்தைகளை பாதையில் விட்டு விடுவதா? அல்லது அவர்களை இன்னுமொருவருக்கு சுமையாக வாழவைக்கப் போகின்றீர்களா? சமூகம் வேறு கண்கொண்டு உங்களை பார்ப்பதற்கு முன்பு, அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்தியுங்கள்! நீங்கள் விவாகரத்தில், பிரிந்து போனாலும், மார்க்க வரையறையை பேணி பிள்ளைகளுடைய வாழ்க்கை விவகாரம் பற்றியும், அவர்களுடைய அனந்தரச் சொத்துக்கள் விடயமாகவும் கவனம் காட்டுங்கள், அவர்களின் படிக்கும் பள்ளிப்பருவத்தை, பாழாக்கி விடாதீர்கள்! அவர்களுக்கு அநியாயம் செய்து விடாதீர்கள்.

அல்லாஹ் எமக்கு வழங்கியுள்ள அருட்கொடை பிள்ளைச் செல்வங்களை முறையாக அமானிதம் பேணி நடந்துகொள்வோம். அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்.

முப்தி யூஸுப் ஹனிபா, அஷ்ஷெய்க். அப்துல் வாஜித் (இன்ஆமி) Majma Ul Khairahth Jumuah Masjid Nimal Road, Colombo 04

கருத்துகள்