அங்கொன்றும் இங்கொன்றும் நிழலாடும் ஊசல்களாய் நிஜ வாழ்க்கை தொலைத்துவிட்ட நிம்மதியற்ற உள்ளங்கள் நிரந்தரமாய் வாழும் இடம் அது
இறைவன் அனுப்பிய வறுமைக் கப்பல் நிரந்தரமாய் நங்கூரமிடப் பட்ட சோமாலிய துறைமுகம் அது
ஓட்டைக் குடிசைகளில் ஒட்டுத் துணிகளுடனும் வரண்ட நாக்குகளுடனும் வலுவிழந்த தேகத்தினர் வாழும் தேசம் அது
வறுமைக் கோட்டின் விளிம்பில் ஊனின்றி போராடி உயிரிழக்கும் பிஞ்சுகள் உறைய வைக்கும் நெஞ்சங்களை
துப்பாக்கி முனைகளுக்குள் துட்டுக்களை அடகு வைக்கும் வல்லரசுகள் தட்டுக்களேந்திய சிறார்களை கண்டு கொள்ளாதுர்ப்பாக்கியம் ஏனோ
உலகமே பார்க்கும் ஒருநாள் அமாவாசையை அன்றாடம் பார்க்கின்ற அதிசய வானம் அது
மணல் வெளிகளைப் போலவே அவர்கள் நாவுகளும் நீரற்று போய் வான் மழை கொட்டும் வரை வாய் பிளந்து நிற்கின்றன
நோயென்று வந்தால் கைகளில் காசு இல்லை நோயது வராமல் தடுத்திட ஊட்ட உணவுகளும் இல்லை
உலக நாடக மேடையில் மரணத்திற்கு ஒத்திகை பார்க்கும் நிஜ கதாபாத்திரங்கள் அவர்கள்
இங்கு ஆயிரம் அமுத சுரபிகள் இருந்தும் அமுதம் சுரக்க மறுக்கும் விசித்திரங்கள் என்னவோ
பஞ்சணைகள் தேவையில்லை பட்டாடைகள் தேவையில்லை பசிக்கு புசிக்க கால் வயிறு கஞ்சியிருந்தால் பட்டினிகள் பஞ்சாக பறந்திடும்
கருத்துகள்
கருத்துரையிடுக