2018.07.25 ஆம் திகதி அன்று மரணித்த "Silent Fighter (அமைதிப்போராளி) & Keyboard Worrier" என்று அழைக்கப்பட்ட இர்பான் ஹாபிஸின் நினைவாக எழுதிய கவிதை.
ஈழத்து மண் பெற்ற அருமையான மாணிக்கம் நீ!
வாழ்க்கை ஒரு போராட்டம் அதை பொருதி வென்ற போராளி நீ!
உறுப்புகள் இருந்தும் உணர்வற்று இருக்கும் மனிதர்கள் பலர்.
பத்து விரல்கள் இருந்தும் பயன்படுத்தாத மனித பிணங்களுக்கு மத்தியில் ஒற்றை விரலால் சாதனைப் படைத்த மகாவீரன் நீ!
வயது பதினெட்டு மட்டுமே வாழ்நாள் என வைத்தியர் வரையறை செய்தாலும் அதனை இறைவன் இருமடங்காக்கியது. வாழும் எங்களுக்கு வழிகாட்டவா?
நோயையும் அருளாகப் பார்த்த மகான் நீ! சுவாசிக்க நிதம் நீ சிரமப்பட்டாலும் ஒவ்வொரு மூச்சையும் அர்த்தமாக்கிய ஆத்மா நீ!
அல்ஹம்துலில்லாஹ் என்று அடிக்கடி உரைப்பாயாமே! இத்தனை சுகம் பெற்ற நாம் கூட அவ்வாறு சொன்னதில்லையே! உள்ளத்தில் குற்ற உணர்வு ஊசலாடுகின்றது.
இறைவிசுவாசம் ஒன்றே உன் அடிப்படைத் தத்துவம் போலும்!
இறப்பை சரித்திரமாக்க. நீ பட்ட பாடுகள் சொல்லிமாளாது!
எந்தவோர் ஆத்மாவையும் இறைவன் வீணுக்காய் படைக்கவில்லை என்பதற்கு நீயே மாபெரும் சாட்சி!
எல்லாம் இருந்தும் ஒன்றுமில்லாதது போல் வாழும் எம்மவர் மத்தியில் வாழ்க்கை என்றால் என்னவென்றுணந்த்த இறைவன் உன்னை தேர்ந்தெடுத்தானா?
ஓர் ஈயை விரட்ட கூட சக்தி பெறாத நீ! உன் ஊக்கத்தால் மூன்று புத்தகங்களை உருவாக்கியது அற்புதத்திலும் அற்புதமே!
உன் கவிகளை கண்ணீர் இல்லாமல் படிப்பவரும் உண்டோ? உன்னைப் படிப்பவர் தன்னை படிப்பவர் ஆக மாட்டாரோ?
அமைதியாய் இருந்து அவனியை அலங்கரித்தாயே! அதனால் தானோ உனக்கு "அமைதிப்போராளி" என்று பெயர்!
கருத்துகள்
கருத்துரையிடுக