மேகத்தின் ஒப்பாரி

மின்னல் வந்து பல்லைக் காட்டிப் போனாலும் இடியோசையது பல்லைக் கடித்து போனாலும் ஐந்தாறு வருடமாய் காத்திருந்தும் இன்னும் தொடங்கவில்லையம்மா அந்த மேகத்தின் ஒப்பாரி.

சுவாசிக்கும் மனிதனே - நீ சுவாசிப்பதை நிறுத்தி விடு சுத்தமான ஆக்ஸிஜன் இங்கு சுத்தமாகவே குறைவடா!

நிழல் தேடும் மனிதனே- நீ நிழத்திற்கடியில் ஒழிந்திடு நீ தேடும் நிழல் இங்கு நிச்சயமாய் குறைவடா!

இயற்கையை துன்புறுத்தி இங்கே நீ வாழ்ந்தாலும் இறக்கத்தான் போகிறாய் இரக்கமற்ற மடையா!

அறிவிருந்தும் அறியாதவனாய் புத்தியிருந்தும் புரியாதவனாய் இன்னும் நீ அழவில்லையென்று அந்த மேகத்தையேன் திட்டுகிறாய். மேகமும் மனமிரங்க எங்கேயடா ஒருகன்றை நட்டுகிறாய்?

உன் பொல்லாத செயல் கண்டு கொதிக்கின்றது மேகம் அதனால் தானது ஆனந்தகண்ணீர் விடவில்லையோ என்றொரு ஊகம்.

அருந்திவாழ நீரில்லாமல் இருந்துவாழ இடமில்லாமல் உண்டுவாழ உணவில்லாமல் போகும் வழியில் இறக்கும் விலங்குகள் தாகம்தீர இறங்குமா முகில்கள்

நினைத்தாலே நடுங்குகிறது நிழல் எங்கே? உடல் புழுங்குகிறது.

நிம்மதியாய் நீவாழ வீடமைத்துக்குடியேற வெட்டுகிறாய் மரங்களை நீவெட்டும் ஒவ்வொரு மரத்திற்கும் மேகத்தின் கண்களுக்கு பூட்டு போடப் படுகிறது.

ஒன்றா. ரெண்டா. எத்தனை மரங்கள், எத்தனை வெட்டுக்கள் ஒவ்வொரு மரத்துக்கும் எத்தனை பூட்டுகள்.

சற்று சிந்தி! அந்த மேகத்தின் ஒப்பாரிக்காக எத்தனை பூட்டுக்களை உடைப்பது? எத்தனை பூட்டுக்களைத்தான் உடைப்பது?

Rustha Salam South Eastern university of Sri Lanka

கருத்துகள்