இலங்கை முஸ்லிம்கள் இலக்கை அடைந்து விட்டார்களா?

இலங்கை முஸ்லிம் சமூகம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்த வண்ணமே உள்ளது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளாக முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் வைத்தல், கொரோனா நீரில் பரவும் என ஒரு கட்டுக்கதையை உருவாக்கி முஸ்லிம்களின் நல்லடக்க உரிமையை இரத்துச் செய்தல், முஸ்லிம் தனியார் சட்டத்தை  திருத்துதல், முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக நீக்குதல் போன்ற முயற்சிகள் போன்றவற்றை பிரதானமாக அடையாளப்படுத்தலாம்.

வடக்கில் நந்திக்கடல் முதல் தெற்கில் கொடபிடிய வரை பல குண்டு வெடிப்புகளை முகங்கொடுத்த நாடு. என்றாலும் வெடித்த குண்டு வெடிப்புகளில் ஒரு சமூகத்தையே குற்றாவாளிக் கூண்டில் வைக்க முற்பட்ட குண்டு வெடிப்பு என்றால் அது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலாகும்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின்  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை மற்றும் கொரோனாவில் மரணித்தவர்களை அடக்கவும் முடியும் என வர்த்தமானி வெளியிட்டமை என்பன முஸ்லிம் சமூகத்தற்கு கடந்த இரு வருடங்களில் காணப்பட்ட பிரச்சினைகளுள் இரண்டிற்கு தீர்வாக அமைந்துள்ளன.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அறிக்கை முடிவுகள் பற்றி முழுமையாக தற்போதைக்கு எதுவும் கூற முடியாது ஏனெனில் அதன் முழுப் பாகங்களையும் வாசிக்க பொதுமக்களுக்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்றாலும் பாராளுமன்றத்திற்கு வழங்கிய பிரதிகளில் ஒரு சில பக்கங்கள் சமூக வளைத்தளங்கள் வாயிலாக வெளியாகியுள்ள நிலையில் அவற்றில் உள்ள விடயங்களை அவதானிக்கையில் முஸ்லிம் சமூகத்தை முழுமையாக குற்றவாளிகள் கூண்டில் வைக்கவில்லை என்று ஒரளவு மனநிம்மதி அடைய முடிகின்றது. ஆனாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான விடயக்களும் இருக்கலாம் என்பதை மறுக்கவும் முடியாது.

வெளியாகியுள்ள பரிந்துரைகளின் பக்கங்களை அவதானிக்கையில் முன்னாள் ஜனாதிபதி, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது குற்றறவியல் குற்றச்சாட்டு முன்வைத்து வழக்கு தொடர வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

பௌத சமூகத்தை நோக்குகையில பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் மீள முடியாதுள்ள இயக்கவியல் சிந்தனைகளை பொறுத்தவரையில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மட்டும் அதன் மாணவர் பிரிவு என்பவற்றுடன் தவ்ஹீத் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றுள்ளது.

குறிப்பிட்ட தவ்ஹீத் அமைப்புகள் எவை? என்று சரியாக தெரியவில்லை. என்றாலும் நாற்பத்தி மூன்று அமைப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல இஸ்லாமிய அறிஞர்களின் நூற்களையும் சில அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளையும் தடை செய்யுமாறு முன்மொழிந்துள்ளது. மேலும் பொது இடங்களில் முகம் தெரியாத ஆடையை அணிவதை தடை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. இது குறிப்பாக புர்காவை தடை செய்யும் முயற்சியாகும். என்றாலும் குண்டுகளை வெடிக்க வைத்தவர்களை அவதானிக்கையில் அவர்கள் புர்காக்களை அணிந்து குண்டு வெடிக்கச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

மேலும் பாடசாலை கல்வித்துறையில் பொதுவாக அனைத்து மத சார் கல்விகளிலும் உள்ள தீவிரவாதத்தை தூண்டும் சிந்தனைகளை நீக்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது. என்றாலும் குறிப்பாக இது இஸ்லாமிய பாடத்திட்டத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

என்றாலும் தற்போது குறித்த அறிக்கை முடிவுகளுக்கு பலத்த எதிர்ப்பு அரசிற்குள்ளிருந்தும் எதிர் கட்சியிலிருந்தும் வெளியாகிய வண்ணமுள்ளது.

மற்றைய விடயம்தான் கொரோனாவினால் மரணித்தோரை தகனம் செய்யும் நிலைப்பாட்டில் இருந்து "தகனம் அல்லது அடக்கம்" செய்வதற்கு அனுமதித்து வர்த்தமானியை திருத்தி வெளியிட்டமையாகும்.

இது அரசாங்கத்தின் பொருளாதார வீழ்ச்சி, கொரோனாவில் ஏற்பட்ட வேலையிழப்புகள், விலையேற்றங்கள், வெளிநாட்டு ஒப்பந்தங்கள், உயர் கல்வித்துறை முடக்கம் என்பன பற்றி நாட்டு மக்கள் சிந்திக்காமல் இருப்பதற்கு தோற்றுவிக்கப்பட்டு இனவாதத் தீயின் மூலம் வளர்க்கப்பட்ட பிரச்சினையாகும்.

இப்பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வருவதில் செல்வாக்கு செலுத்தியது உள்நாட்டு அழுத்தங்களை விட சர்வதேச அழுத்தங்களாகும். குறிப்பாக இவ்வாரம் இடம்பெற்ற இம்ரான் கானின் விஜயம், மனித உரிமை பேரவை என்பன செல்வாக்கு செலுத்தியுள்ளது.

ஆனால் இம்ரான் கானின் அழுத்தத்தை அவரது பகிரங்க உரையாடல்களில் காணமுடியவில்லை. அதாவது உரையாடலை அவதானித்தால் சீனா இலங்கை பாகிஸ்தான் முத்தரப்பு சர்வதேச வர்த்தகம், இலங்கை பௌதர்களுக்கான பாகிஸ்தானின் பௌத புனித தளங்களுக்கான விஜயம் போன்ற விடயங்களே காணப்பட்டன. ஆனால் இறுதியாக சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாஸாக்களை எரித்தலுக்கு தீர்வை அரசாங்கம் வழங்குமென நம்பிகையூட்டியதாக உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

என்றாலும் இலங்கை இரு சிறு பான்மை சமூகத்தையும் பகைத்துக் கொண்டால் மனித உரிமைகள் பேரவையில் வெற்றி பெறமுடியாது என்பதை ஜனாஸா அடக்கலாம் என்ற வர்த்தமானி எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பாக 13 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் செயலாளர் தனது உரையில் முஸ்லிம்களில் கொரோனாவில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமை பற்றி  அது மனித உரிமை மீறல் என்றும் இலங்கை தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தது.

உடன் செயற்பட்ட அரசு வர்த்தமானி வெளியிட்டது மாத்திரமல்ல உடன் அது பற்றி இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் செயலாலளருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதுபோல், நல்லடக்கம் எங்கு எவ்வாறு செய்வது என்று தேவையற்ற பிரச்சினையை அரசு உருவாக்கியுள்ளது. என்றாலும் குறித்த பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வை முன்வைப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஆனாலும் சமூகம் அதிகம் சிந்திக்க மறந்த மேலும் இரண்டு பிரச்சினைகளை தற்போது எதிர் நோக்கிய வண்ணமுள்ளது. அதுதான் முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம்.

1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் திருமணம், மணநீக்கம் என்ற சட்டமே முஸ்லிம் திருமணச் சட்டம் என இனங்காணப்படுகின்றது. இச் சட்டம் தற்போது இரண்டு விதமான பிரச்சினைகளை முகங்கொடுத்துள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகள் ஒரு புறம் நடைபெறுகையில், மறுபுறம் முஸ்லிம் தனியார் சட்டத்தை முற்று முழுதாக நீக்குவதற்கான முயற்சிகளும் இடம்பெற்ற வண்ணமுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகள் பல அரசுகளின் கீழ் பல முஸ்லிம், முஸ்லிம் அல்லாத சட்டத்தரணிகள், இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களான உலாமாக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.  என்றாலும் பெண்ணின் திருமண வயது, பெண் கையொப்பம், பெண்களை காதீ நீதிபதிகளாக நியமனம் செய்தல் போன்ற விவகாரங்களில் குறித்த குழு உறுப்பினர்களுக்கு ஒரு முடிவிற்கு இன்னும் வரமுடியவில்லை. இது 2009 முதல் 2018 வரை முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற மேற்கொண்ட முயற்சிகளின் சுருக்கமாகும். ஆனால் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி அவர்களாலும் முஸ்லிம் தனியார் சட்டங்களை திருத்துவதற்கான அமைச்சரவை பத்திரமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக முஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நியமித்துள்ளார்.

அந்தக் குழுவில்  சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் (தலைவர்), சட்டத்தரணி. நாமிக் நபாத் (ஒருங்கிணைப்பாளர்), திரு. ஏ.பீ.எம். அஷ்ரப், சட்டத்தரணி. எஸ்.எம்.எம். யாஸீன், அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் முஈஸ் புகாரி, சட்டத்தரணி. எம்.ஏ.எம். ஹகீம், சட்டத்தரணி. எமிஸா தீகல், சட்டத்தரணி. ருஷ்தி எஷ்.எம், சட்டத்தரணி. சபானா குல் பேகம் ஆகியோர் அடங்குகின்றனர்.

இது முஸ்லிம் சமூகத்தின் சட்ட சீர்திருத்தம் என்பதால் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், முஸ்லிம் சமூக மார்க்க அறிஞர்களின் பங்களிப்புகளுடன் இடம்பெறுவதால் இவ்வாறு நீதியமைச்சர் மூலம் முஸ்ஸிம் தனியார் சட்டத்தை மாற்றுவதில் பாதிப்புகள் ஏற்படுவது குறைவாக இருக்கும் என எதிர்பார்ப்பதோடு, இதன் மூலம் சிறந்த தீர்வு கிடைக்குமென நீதியமைச்சரின் ஊடக அறிக்கைகள் நம்பிக்கை ஊட்டுகின்றன.

ஆனால் இன்னொரு பயங்கரமான பகுதியும் உள்ளது.

முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதற்கான தனியார் சட்டமூலங்களை அதுரலிய ரத்னா தேரர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமையாகும்.

கடந்த நல்லாட்சியின்போது முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கவென அதுரலிய தேரர் சட்டமூலமொன்றை சமர்ப்பித்திருந்தார். அவ்வாறே மீண்டும் இவ்வாட்சியிலும் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, முஸ்லிம் திருமணம், மணநீக்கச் சட்டத்தை நீக்குவதற்கானதொரு சட்டமூலம் என தலைப்பிட்டு 2021.02.09 ஆம் திகதி சட்டமூலமாக வர்த்தமாணியில் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமாணியின் படி 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் திருமணச் சட்டம் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னொரு சட்டமூலத்தில் 1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பொது விவாக சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்ற தலைப்பிட்டு வௌியிட்டுள்ள சட்டமூலத்தில் ஏற்கனவே உள்ள சட்டமூலத்தில் முஸ்லிம்களின் விவாகம் தவிர்ந்த  என்ற வசனம் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் சட்டமாக மாறும் பட்சத்தில் இலங்கையில் தற்போதுள்ள முஸ்லிம் திருமணச் சட்டம் நீங்கிவிடும். இது முஸ்லிம்களின் மத உரிமையை மீறும் செயல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக இதுவரை அலிசப்ரி தமது எதிர்ப்பை பாராளுமன்றத்தில் வெளியிட்டாலும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜம்மியத்துல் உலமா சபை உட்பட ஏனைய முஸ்லிம் அமைப்புகள் அதுரலிய ரதன தேரரின் தனிநபர் சட்டமூலத்திற்கு எதிராக அறிக்கைகள் விடவில்லை. ஆனால் நீதியமைச்சர் தனது உரையில் பௌத மத சட்டங்களை பற்றி பேசியதும் பல மதகுருமார் தமது எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர் என்பதும் மறுக்க முடியாது.

நாம் ஒரு சமூகமாக ஒன்றுபட்டு ஜனாஸாவுக்கு எதிராக அறிக்கையை விட்டு ஆர்ப்பாட்டம் செய்தது போல், தற்போது அதுரலிய ரதன தேரரின் சட்டமூலம் விடயத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

அதாவது நாம் முஸ்லிம் நீதியமைச்சரின் தலையீட்டுடன் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதற்கு அனுமதித்தாலும், பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரரின் தலையீட்டுடன் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க அனுமதிக்க கூடாது.

நாம் எமது இலக்கை நோக்கி மேலும் பயணிக்க வேண்டும்.

Ibnuasad

கருத்துகள்