திருப்பு முனை பாகம் 4
அல்லாஹூ அக்பர்! அல்லாஹூ அக்பர்!
காற்றை ஊடுருவி சுபஹுக்கான அதான் ஒலித்தது. எல்லோரும் தொழுகைக்காக தயாராகி கொண்டிருந்தனர். லீனா தொழுது விட்டு, இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.
"யா அல்லாஹ்! இன்டக்கி ஏன்ட wedding நாள். இந்த வாழ்க்கையில எனக்கு பரக்கத் செய் ரஹ்மானே. நா எதிர்ப்பார்த்தத விட எனக்கு சந்தோசத்தையும் நிம்மதியையும் தா ரஹ்மானே. hubby என்னோட எப்பவுமே உசுரு மாதிரி மிச்சம் எரக்கமா இருக்கனும். நானும் எப்பவும் அவர்க்கு சந்தோசத்த மட்டும் தான் குடுக்கணும். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல அன்பு, அக்கற, அரவணைப்பு எல்லாமே கடைசி வரைக்கும் உண்மையா இருக்கனும். இந்த வாழ்க்கையில நலவ நாடு ரஹ்மானே. அவர்ட திருப்தில நா கண் மூட அருள் புரி. என்று லீனா மனமுருகி துஆ கேட்டாள்.
ஓதி விட்டு சிறிது நேரத்தில் குளிக்க சென்றாள். காலை குளிருக்கு ஜில் என்று இருந்தது அவளுக்கு. நடுங்கிய படியே குளித்து விட்டு அறைக்குள் வந்தாள். சில நிமிட இடைவெளியில் அழகான மெரூன் கலர் லெஹன்காவில் குட்டி தேவதை போல வெளி வந்தாள்.
"மாஷா அல்லாஹ். சட்டப்படியா இருக்கிறாய்டி என்றாள் ஷெரீன்."
புன்னகைத்த படியே,
"Thanks ma" என்றாள் லீனா.
நேரம் செல்லச் செல்ல விருந்தினர்கள், அயலவர்கள் என பலரும் வரவே வீடே கலகலப்பாக மாறியது. மர்யம் வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள்.
நேரம் 11.30 ஐ காட்டியது. லீனா மணப் பெண்ணாக தயாராகிக் கொண்டிருந்தாள். அவளை தயார்படுத்த மெஹ்ரூன் வந்திருந்தாள். அவள் மணப்பெண் அலங்காரம் செய்பவள் என்பதால் அவளையே மர்யம் லீனாவை அலங்கரிக்க அழைத்தாள். பல நிமிட இடைவெளியின் பின் லீனா அறையில் இருந்து வெளி வந்தாள். வெள்ளை நிற மணவாடையுடன் கையில் அழகிய பூங்கொத்துடன் நின்றிருந்தாள். எல்லோருக்கும் ஆச்சரியம். இது லீனாவா என்று? ஏனெனில் அவள் மணக்கோலத்தில் ஓர் இளவரசி போல் அழகாக இருந்தாள்.
உண்மை தான்! ஒவ்வாரு பெண்ணும் மணப்பெண்ணாகும் போது அது ஓர் தனி அழகு. அப்படி ஓர் அலங்காரத்தில் திருமணத்திற்கு முன்பு யாரும் அவளை கண்டிருக்க முடியாது. ஏனெனில் திருமணம் வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும். ஆனால் ஒரு சிலருக்கு இந்நிலை மாறினாலும் அது தான் உண்மை நிலை.
எல்லோரும் ஹாலுக்கு செல்ல தயார் நிலையில் இருந்தனர். கார் வந்தது. லீனா தாயுடன் ஏறி அமர்ந்தாள். ஏதோ ஒரு வித பயம் அவளுக்குள் தென்பட்டது. கார் ஹாலை அடைந்ததும் அவள் மெல்ல இறங்கினாள். வாசலில் நிறைய பேர் நின்றிருந்தனர். அவர்களை கண்டதும் அவளுக்கு கொஞ்சம் உதறல் எடுத்தது. தலை குனிந்தபடியே தாயுடன் உள்ளே சென்றாள்.
ஷெரீன் அவளிடம் வரவே அது ஆறுதலாக இருந்தது அவளுக்கு. அந்த கூட்டத்திலும் அவள் கண்கள் அவனை மட்டுமே தேடியது. சற்று நேரத்தில் அவனும் வந்தான். சூரியனை கண்ட சூரியகாந்தி பூவாய் உள்ளம் மகிழ்ந்தாள் லீனா.
மதிய நேர விருந்து உபசாரத்துடன் அவளை ஷரீப் வீட்டில் விட்டுவிட்டு உறவுகள் கண்ணீருடன் விடைப் பெற்றனர். லீனாவுக்கு மனம் கனத்தது. அவள் அறைக்கு சென்று அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அவள் மதினி வந்து அவளை தேற்றிக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவனை காணவில்லை. அவள் மனம் ஏங்கியது.
அவளை பார்க்கவென அயலவர்கள் வந்து வந்து சென்றனர். அவள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது அவன் வந்தான். அவளுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி.
***********************
அன்று இரவுணவை இருவரும் அவர்களது அறையில் உண்டு கொண்டிருந்தனர். அவள் முகத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது. அவன் பேச மாட்டானா என்று லீனா ஏங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவன் ஓரிரு வார்த்தையில் பேச்சு கொடுத்தான். அவளும் அமைதியாக பதில் அளித்தாள். அவளுக்கு அது பேரானந்தமாக இருந்தது. மனம் பூரித்துப் போனாள். அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அவள் நிலை தடுமாறி நின்றாள். என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. இது கனவா இல்லை நிஜமா என்று அறிய முடியாமல் தவித்தாள் லீனா.
கருத்துகள்
கருத்துரையிடுக